ஸ்டெர்லைட்: ஒரு குட்டி பத்திரிகையாளனின் செய்தி சேகரிப்பு அனுபவங்கள்!
2018 மார்ச். ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியிருந்த சமயம்; ஒரு தொழிமுறை இதழாளனாக உருப்பெரும் முன், புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் மாணவனாக இருந்த அந்தக் காலகட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டக் களத்துக்குப் பயணப்பட்டேன். அந்த அனுபவங்களைத் தொகுத்து என்னுடைய வலைப்பூவில் எழுதியிருந்த கட்டுரையை ‘இன்று’ வாசகர்களுக்காக இப்போது மறுவெளியீடு செய்கிறேன். நன்றி!
1
ஊரில் தினமும் நூறு சம்பவங்கள் நிகழ்கின்றன. நாட்டில் ஆயிரம். உலகில் லட்சம். இவைப் பற்றியெல்லாம் நொடிக்கு நொடி செய்தி சுனாமி நம்மை வாரி சுருட்டிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுனாமியில் நீச்சல் போடுவதற்குக் கொஞ்சம் பொறுமை அவசியம். நமக்கு என்ன தேவை, அதை யார் சரியாக கொடுக்கிறார்கள் என்பதை நேரம் செலவிட்டு தேடிக் கண்டடைந்தால் well informed ஆகலாம்!
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தொடர்ச்சியாக நீங்கள் கவனித்து வந்தால், கொஞ்ச காலத்தில் அது எப்படி உருவாகிறது என்பதைக் குறித்த புரிதல் அதைப் பார்ப்பதிலிருந்தோ, கேட்பதிலிருந்தோ துலங்க ஆரம்பித்துவிடும். நான் ஒரு திரைப்படம் பார்க்கிறேன் என்றால், திரையில் ஓடும் காட்சிகளைக் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால், மனமோ அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம்—behind the camera—அதன் ஒலிப்பதிவு, எடிட்டிங் முதற்கொண்டு எப்படி நடந்திருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும். படத்தை இயல்பாக அணுகுவதற்கு இது கொஞ்சம் தடையாக இருக்கும் என்றாலும் போகப் போக இரண்டையும் சமநிலைப்படுத்திப் பார்க்கப் பழகிவிடுவோம்.
போலவே, செய்தியை வாசிக்கும்போதும் அது எழுதப்பட்டிருக்கும் விதம், அதை எழுதிய செய்தியாளர், கட்டுரையாளரின் சிந்தனைப் போக்கு அதை எழுதிய போது எப்படி இருந்திருக்கும் போன்ற விஷயங்களை மனம் அசைபோடும். அது அந்தக் கட்டுரையை ஆழமாக உள்ளாங்க உதவும். தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்போதும் அப்படித்தான். ஒரு செய்தியாளர் சந்திப்பில், பேட்டி கொடுக்கும் நபர் மீது கண்கள் இருந்தாலும் அவர் முன்னே நிற்கும் செய்தியாளர்களைப் பற்றியே என் மனம் சிந்திக்கும். என்ன மாதிரியான கேள்விகளை அவர்கள் ஏந்தியிருப்பார்கள், ஒளிப்படக்காரர்கள் தெளிவான கோணம் கிடைக்க அந்த இடைஞ்சலில் எப்படி அல்லாடிக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். தெஹல்கா இதழுக்காக ஷைலேந்திர பாண்டே எடுத்த இந்தப் படத்தைப் பார்த்தபோது, அவரும் என்னைப் போல் யோசித்திருப்பார் என்றே தோன்றியது!
2
பயணம்
புனித வெள்ளி விடுமுறைக்கு வீட்டுக்குச் செல்லும் வரை ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த பெரிய ஈடுபாடில்லாமல் இருந்தேன். வீட்டிற்குச் சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது, சீக்கிரம் வீடடைய வேண்டும் என மனம் ஏங்கியது. வெள்ளி வீட்டில் தான் இருந்தேன், சும்மா தானே இருக்கிறோம் போராட்டத்திற்கு ஏன் செல்லக்கூடாது என்றும், செய்தி சேகரித்த அனுபவமும் கிடைக்குமென்றும் தோன்றியது. மறுநாள் காலை திண்டுக்கல்லில் மைசூரு – தூத்துக்குடி ரயிலைப் பிடித்தேன்.
முந்தைய நாள் மாலையில் ஸ்டெர்லைட் குறித்த விஷயங்களை முழுக்க தேடி சேகரித்துப் படித்துப் புரிந்து கொண்டேன்; செய்தி சேகரிப்புக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், அனிதா மரணம் போன்ற பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளை அந்த இடங்களுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் விரும்பினேன்; இயலவில்லை. ஆகவே, இந்தப் பயணம் என்னுள் மிகுந்த ஆர்வத்தை உண்டு பண்ணி இருந்தது. விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றபோது பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன், என்றாலும் அவையெல்லாம் சீனியர்களின் உதவியுடன் தான் நிகழ்ந்திருக்கின்றன. முதல்முறை தனியாக ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய பயணப்படுவது மிகுந்த கிளர்ச்சியைத் தந்தது!
ஒரு நிகழ்வு, போராட்டம் இவற்றைப் பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்று இதழியல் பாடத்தில் சொல்லப்பட்டிருப்பதையும், இதுவரையிலான எனது அனுபவத்தில் கண்டடைந்ததையும் அசைபோட்டுக் கொண்டே வந்தேன். பயணத்தில் யாரிடமேனும் ஸ்டெர்லைட் குறித்து பேசலாம் என்று நினைத்தால் ஒரு வயதான மூதாட்டி, சிறு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம், காதிலிருந்து ஹெட்செட்டைக் கழட்டாத ஒரு இளைஞன் ஆகியோர் என் அருகில் இருந்ததால் அவர்களிடத்து இது குறித்து என்ன பேசுவது என்று சும்மா இருந்துவிட்டேன்.
தூத்துக்குடிக்கு நான் பயணப்படுவது இதுவே முதல்முறை. கூகுள் மேப்பின் உதவியால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இறங்கினேன். அங்கிருந்து குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு எப்படிச் செல்வது என்று கேட்டால், ‘இங்கே ஏன் இறங்கினீர்கள், தூத்துக்குடியில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்குமே… அதிலே போயிருக்கலாமே?!’ என்றார்கள். இங்கிருந்து பக்கம் என்றார்களே என்றால், ‘பக்கம் தான்… ஆனால் நடந்து தான் போக வேண்டும். வேண்டுமானால் யாரிடமாவது லிஃப்ட் கேட்டு போகலாம்’ என்றார்கள். அங்கிருந்து எப்படி நெடுஞ்சாலையை அடைவது என்று வழி சொல்லிவிட்டு யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். இதழியல் மாணவன், பாண்டிச்சேரியிலிருந்து என்றேன். புருவங்கள் உயர, மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்து கூறினார்கள். நன்றி சொல்லிவிட்டு அவர்கள் சொன்ன ஒற்றையடிப் பாதை வழியாக நடக்கலானேன்.
ஒற்றையடிப் பாதை ஒரு தார்ச் சலையில் கொண்டுவிட்டது. சிறிது தூரம் நடந்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு வண்டி வரவே கை காட்டினேன், நிறுத்தமாட்டார் என்று நினைத்தேன். நிறுத்தினார். ஏறிக்கொண்டேன். என்ன விஷயம் என்றார். சொன்னேன். ஸ்டெர்லைட் குறித்து பொருமித் தள்ளியவர், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டார். எதிர்ப்பக்கம் நேரே செல்லும் சாலையில் சென்றால் ஸ்டெர்லைட்; குமரெட்டியாபுரம் இன்னும் சற்று உள்ளே இருக்கிறது என்று வழி சொன்னவரிடம் விடைபெற்று சாலையைக் கடந்தேன்.
அருகாமையில் தெரிவது வேதாந்தா அனல்மின் நிலையம். தூரத்தே இடப்பக்கம் தெரிவது ஸ்டெர்லைட். ஒற்றையடிப் பாதையில் இருந்து எடுத்த படம்.
அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருப்பதாக தகவல். கணிசமானோர் வண்டியுடன் நின்றுகொண்டிருக்க ஒருவரிடம் ‘குமரெட்டியாபுரம் போகணும்’ என்றேன். ‘ஏறிக்கோங்க’ என்றார். யாரென்று கேட்டேன். ஒன்றியச் செயலாளராம். நல்லது!
தூத்துக்குடியில் இறங்கியிருந்தால், மீளவிட்டானில் இறங்கி குமரெட்டியாபுரம் சென்று சேர்ந்த நேரத்தைவிட ஒரு மணிநேரம் தாமதமாகி இருக்கும்.
3
குமரெட்டியாபுரம்
அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் அமைதியான முறையில் கூடி ஆலைக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். நான் சென்ற அன்றைய தினம் — மார்ச் 31, சனிக்கிழமை — போராட்டம் 48ஆவது நாளை எட்டியிருந்தது. தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பிலிருந்து எழுத்தாளர்கள் சிலரும் போராட்டத்தில் அன்று பங்கெடுத்தனர். கவிஞர் சுகிர்தராணி கோஷங்களை ஆக்ரோஷமாக எழுப்பினார். கவிஞர் என்.டி.ராஜ்குமார் இன்குலாபின் “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடினார்.
கவிஞர் யவனிகா ஸ்ரீராம் உலகமயமாக்கல், கார்ப்பரேட்டுகள், அரசுக் கொள்ளைகள் என நீண்ட ஒரு உரையை நிகழ்த்தினார். இலக்கியக் கூட்டங்களில் பேசுவது போலல்லாமல் மிக எளிய ஆனால் அடர்த்தியான உரையாக அது இருந்தது. மக்களும் அவர் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டும், பதில் சொல்லிக் கொண்டும் இருந்தனர். கோணங்கி, தேவதேவன், லஷ்மி மணிவண்ணன் போன்றோரும் பங்கெடுத்திருந்தனர்.
போராட்டத்தைக் கவனிப்பதையும் தாண்டி அதைச் செய்தியாக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மிக உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள் என மிக பரபரப்பாக அவர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். வயதில் மூத்த நிருபர் ஒருவர் எதிர்ப்படும் எல்லோரிடமும் பேசி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அநேக பார்வையாளர்கள் நிகழ்வை ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
இந்தியா டுடே செய்தித் தொலைக்காட்சியின் திருவனந்தபுரம் செய்தியாளர் கோபிகிருஷ்ணன் உன்னிதனை அங்கு சந்தித்தது எதிர்பாராதது. கோபி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய சூப்பர் சீனியர். அன்றைய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிறப்பு வகுப்பொன்றை எங்களுக்கு எடுத்திருந்தார். அப்போது தான் அவரைத் தெரியும். இங்கு பார்த்து அறிமுகமான பொழுது அவருக்கும் ஆச்சரியம். மறுநாள் கமல்ஹாசனின் வருகையைப் பதிவு செய்ய வந்திருப்பதாக சொன்னார். சரத் குமாரின் வருகை இங்கு வந்த பிறகு தான் தனக்கும் தெரியும் என்றார். மிகுந்த பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருந்தவர் கிடைத்த சின்ன இடைவெளியில் புகுந்து சரத் குமாரை பேட்டி எடுத்துவிட்டார். கூட்டத்திலிருந்து வெளிய வந்தபோது கையை உதறிக் கொண்டே இருந்தார். பார்த்தால் அவ்வளவு நேரம் மொத்த செய்தியாளர் கூட்டமும் அவர் மேல் சாய்திருக்க கையை தரையில் ஊன்றியிருந்திருக்கார். ஒளிப்படக்காரரும் தொப்பலாக நனைந்திருந்தார். ஆயினும் ஒரு திருப்தி இருவர் முகத்திலும் தெரிந்தது. Scroll.in இணையதளத்தின் செய்தியாளர் வினிதா கோவிந்தராஜனையும் பார்க்க முடிந்தது.
கோபியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, தமிழில் கோபிகிருஷ்ணன் என்றொரு எழுத்தாளர் இருந்தார், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்றேன். மலையாளியான கோபிக்கு தமிழ் பேசத் தெரியும், வாசிக்கத் தெரியாது. புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஊரைச் சுற்றிவிட்டுத் திரும்பும்போது காவலர் ஒருவர் அழைத்தார். ‘சுயவிவரங்கள் வேண்டும்… சொல்லுங்கள்’ என்றார். சொன்னேன். அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் அவராகவே வந்து “இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களா… உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டுகிறேன்” என்று கைகொடுத்தார். மனதார சொன்னாரா இல்லை கிண்டலடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
சரத் குமார் கிளம்பிச் சென்றுவிட்டிருக்க, அவரோடு வந்த மொத்தக் கூட்டமும் கலைந்தது. போராட்டக் களத்தில் இருந்தவர்களின் கூட்டம் அப்படியே தான் இருந்தது. பல்வேறு அமைப்புகளிலிருந்தும், மாணவர்களும், இன்னும் பிறரும் ஊர்வலமாக வந்து அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் போராட்டம் எத்திசை நோக்கிச் செல்ல வேண்டும், சட்ட ரீதியான முன்னெடுப்புகள் என்னென்ன போன்ற விஷயங்கள் தீவிரமாக அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
ராஜா என்பவர் போராட்டம் பற்றிக் கேள்விப்பட்டு திருச்செந்தூரிலிருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறார். “மனிதனின் அடிப்படைத் தேவை தண்ணீரும் உணவும். இரண்டுமே இங்கே பாழடைந்திருக்கிறது. மக்கள் எப்படி இந்தத் தண்ணீரை உபயோக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் போல பரவலான கவனம் பெற்றால் தான் இவர்களது போராட்டம் வெற்றி பெறும். ஆகவே, போராட்டத்தை இந்த கிராமத்தில் நடத்தாமல் நகரில் முன்னெடுக்க வேண்டும்” என்று தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நான் யாரென்று கேட்டவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது கையைப் பற்றிக் கொண்டார். தான் வழிபடும் திருச்செந்தூர் முருகன் எப்போதும் உங்களுக்குத் துணையிருப்பார் என்றார். பதிலுக்குப் புன்னகைத்தேன்.
போராட்டக்காரர்களின் ஒழுங்கு உண்மையிலேயே ஆச்சரியம் கொள்ளச் செய்தது. கடுமையான வெயிலில் வந்திருப்போருக்கு தண்ணீர் விநியோகித்துக் கொண்டிருந்தனர். வாங்கிக் குடித்தவர்கள் பாக்கெட்டை அப்படியே கீழே போட்டுவிட அதை ஒரு மூதாட்டி சேகரித்துக் குப்பையில் சேர்த்துக் கொண்டிருந்தார். போராட்டக்காரர்களுக்கும் வந்திருப்பவர்களுக்கும் மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பெண்கள், சிறுவர் சிறுமியரும்கூட போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டத்திற்குப் பரவலான ஊடக கவனம் இல்லை என்பதைப் பெரும்பாலானோர் குற்றச்சாட்டாக பதிவு செய்தனர்.
சாமானிய மக்கள் உண்மையிலேயே பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளார்கள். சாதரணமாக பேசிக் கொண்டிருப்பவர்கள் கூட நாம் பத்திரிகையாளர்—இதழியல் மாணவர் என்றாலும்கூட—மிகுந்த மரியாதை கொடுக்க ஆரம்பிக்கின்றனர். குமரெட்டியாபுரத்திலிருந்து ஆட்டோவில் தான் தூத்துக்குடிக்கு வந்தேன். ஆட்டோக்காரர் எவ்வளவு சொல்லியும் பணம் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். அவ்வளவு தூர பயணத்திற்குத் திண்டுக்கல்லில் குறைந்தது 250 ரூபாயாவது வாங்கியிருப்பார்கள்.
இந்தப் பயணம் நிச்சயம் என்னளவில் மிக முக்கியமானது; இந்த அனுபவம் வாழ்நாளுக்கானது. எதிர்காலத்தில் செய்தி சேகரிக்க எந்த இடத்துக்குச் சென்றாலும் குமரெட்டியாபுரம் நினைவு வராமல் இருக்காதென்பது உறுதி!
பின் இணைப்புகள்:
1) ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய செய்தி சேகரிப்பைக் கொண்டு நான் உருவாக்கிய காணொளி:
2) ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு பற்றிய எனது கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு