ஆண்டனி ஷடீட்: பின்தொடரும் நிழலின் குரல்
ஆண்டனி ஷடீடின் இறப்பு பற்றிய செய்தி என்னை வந்தடைந்தது; நான் ஒரு பத்திரிகையாளனாக ஆவது என்று தீர்மானித்தேன்!
“The one thing that shaped my life was when I was 15 or 16: I knew I wanted to be a journalist. And not just a journalist, but a journalist in the Middle East, and to go back to the Arab world and try to understand what it meant to be Lebanese.”
—Anthony Shadid
உங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்த நொடி எது என்பதைத் துல்லியமாக உங்களால் சுட்ட முடியுமா? பத்தாண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையைத் தீர்மானித்த அந்தக் காலைப் பொழுது முடிவற்ற காலத்துக்கு என்னுள் உறைந்து நிற்கிறது.
அப்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். முதல் பக்கம், கடைசிப் பக்கம், சர்வதேசச் செய்திகள், எடிட்டோரியல் என்ற வரிசையில் வழக்கம்போல் அன்று காலை The Hindu-வை வாசித்துக் கொண்டிருந்தபோது, சர்வதேசச் செய்திகள் பக்கத்தில் இடம்பெற்றிருந்த “Two-time Pulitzer winner Anthony Shadid is dead” என்ற செய்தி என் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது என்பதை அதை முதலில் வாசித்த அந்த நொடியில் நான் உணர்ந்திருக்கவில்லை.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘சுட்டி விகட’னின் சுட்டி ஸ்டார் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்குபெற்றிருந்தது, இதழியலை நோக்கிய என்னுடைய ஈடுபாட்டை வடிவமைக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவாக, ‘ஜர்னலிஸ்ட்’ என்பதைச் சுருக்கி, ‘ஜர்னல்’ என்று பள்ளி நண்பர்கள் எனக்குப் பெயரிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில், ஆண்டனி ஷடீடின் இறப்பு பற்றிய செய்தி என்னை வந்தடைந்தது; நான் ஒரு பத்திரிகையாளனாக ஆவது என்று தீர்மானித்தேன்!
அவர் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது; ஆனால், அவர் இல்லாத இந்தப் பத்தாண்டுகளில், அவர் பெயர் உச்சரிக்காத நாள் என்பது என் வாழ்வில் அநேகமாகக் கிடையாது. ஆண்டனி ஷடீட், யார்?
43 வயது வரை வாழ்ந்து, இறந்து பத்தாண்டுகளுக்குப் பிறகும், தன்னுடைய பணியால் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களின் ஞானத்தந்தையாக விளங்கும் ஆண்டனியைப் பற்றி, அவரது 50ஆவது பிறந்தநாளில், இந்து தமிழ் திசை நாளிதழுக்காக 2018 அக்டோபரில் நான் எழுதிய கட்டுரையை இங்கு கொடுக்கிறேன்.
தான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்பதைப் பதினைந்து வயதில் முடிவெடுத்து, எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவோடு தன் இதழியல் பணியைத் தொடங்கியவர்; மத்தியக் கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் சூழல்களால் மூளும் போர்களையும் அதன் விளைவாகச் சிதைவுக்குள்ளான மக்களின் வாழ்வையும் உலகுக்குத் தொடர்ச்சியாகத் தன் எழுத்துகளால் சொல்லி வந்தவர்.
ஈராக் போர், அரபுப் புரட்சி, சிரியா போர் என மத்திய கிழக்கின் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நேரடியாகக் களத்திலிருந்து செய்தியாக்கிய ஒப்பற்ற பத்திரிகையாளர் ஆண்டனி ஷடீட்.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பிறந்து வளர்ந்த ஆண்டனி ஷடீட் லெபானனைப் பூர்வீகமாகக்கொண்டவர். முதலாம் உலகப் போரின்போது லெபானனின் மார்ஜயூன் கிராமத்தில் இருந்து ஷடீடின் முன்னோர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
வரலாற்றுப் பின்புலத்தில் செய்தி
விஸ்கான்ஸின்-மேடிஸன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இதழியல் படித்து, பல்கலைக்கழக மாணவர் பத்திரிகையான ‘தி டெய்லி கார்டினல்’-ல் இதழியல் பயிற்சி பெற்றார். செய்தி நிறுவனமான ‘அசோசியேடட் பிரஸ்’-ன் மத்தியக் கிழக்கு செய்தியாளராக எகிப்தின் கெய்ரோ நகரில் இதழியல் வாழ்வைத் தொடங்கினார்.
‘பாஸ்டன் குளோப்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘நியூ யார்க் டைம்ஸ்’ ஆகிய நாளிதழ்களில் பணியாற்றினார். தன் கனவான மத்தியக் கிழக்கில் பணியாற்றுவதற்கு அரபி மொழி அறிந்திருப்பதன் அவசியத்தை உணர்ந்து அரபி கற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே மக்களிடம் நேரடியாக அவரால் உரையாட முடிந்தது. மக்களின் வாழ்வில் போர் உண்டாக்கிய பாதிப்பை அப்பட்டமாக வெளிக்கொண்டுவர இதுவே அவருக்கு உதவியது.
இதன் மூலம் நிகழும் சம்பவங்களோடு வரலாற்றையும் இணைத்து அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது அவருடைய எழுத்து. இதனால் மத்தியக் கிழக்கில் இருந்து எழுதிய மற்ற செய்தியாளர்களைவிடவும் அவர் எழுதிய செய்திகள் தனிக் கவனம் பெற்றன.
குண்டு துளைத்தும் தளராத மனம்
ஷடீட் ஒரு சாகச விரும்பி இல்லை. எனினும், அவருடைய இதழியல் வாழ்வு முழுக்க சாகசங்கள் நிரம்பியதாகத்தான் இருந்தது. ‘பாஸ்டன் குளோப்’ நிருபராக மார்ச் 2003-ல் இஸ்ரேலின் ரமல்லாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய ராணுவப் படையினரால் சுடப்பட்டார்.
இடது தோள்பட்டையில் பாய்ந்த குண்டு துளைத்து, மறுபக்கம் வெளிவந்தது. ‘அவர்கள் என் தலைக்குக் குறி வைத்திருக்க வேண்டும்; என்னுடைய குறிப்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததால், தவறிவிட்டது என்று நினைக்கிறேன்’ என்று இந்தத் தாக்குதல் குறித்து ஷடீட் கூறினார்.
குண்டடிபட்டிருந்தபோதும், பாலஸ்தீன மருத்துவருக்கும் இஸ்ரேலிய படைவீரர் ஒருவருக்கும் அன்றைய தினம் நிகழ்ந்த வாக்குவாதத்தைச் செய்தியாக்க தன்னுடைய ஆசிரியரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
இருமுறை புலிட்சர்
வாஷிங்டன் போஸ்ட் நிருபராக ஈராக் போரின் அவலங்களை உலகுக்கு எடுத்து சொன்ன ஷடீடுக்கு, 2004-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்காக அரபுப் புரட்சி குறித்த நேரடி செய்திகளை வழங்கியதற்கு 2010-ல் இரண்டாவது முறையாக புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
2011 மார்ச் 16-ல் லிபியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஷடீட் உட்பட நான்கு செய்தியாளர்கள், அவர்களுடைய ஓட்டுநர் ஆகியோர் லிபிய அதிபராக இருந்த மம்மர் கடாஃபி படையினரால் கடத்தப்பட்டனர். ஓட்டுநர் கொல்லப்பட்டு, நால்வரும் அச்சுறுத்தலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
வாழ்நாளெல்லாம் களத்திலிருந்து செய்தி வழங்கிய ஷடீட், தலைசிறந்த போர் செய்தியாளராக சமகாலத்தவர்களால் மதிப்பிடப்பட்டார். லெபனானில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டைச் சீர்ப்படுத்தி தன் மனைவி குழந்தைகளுடன் அங்கு வாழ்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த ஷடீடின் மரணம் அவரது குடும்பத்திற்கும், இதழியலுக்கும் பெரும் இழப்பு.
அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், மத்தியக் கிழக்கில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஆண்டனியின் இல்லாமை ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
2018 மே-ஜூன் மாதத்தில் இந்து தமிழ் திசையில் பணியிடப் பயிற்சியின் (internship) போது நான் எழுதிய கட்டுரைகளுக்காகக் கிடைத்த மதிப்பூதியத்தில், ஆண்டனியின் கடைசிப் புத்தகமாக அமைந்துவிட்ட ‘House of Stone: A Memoir of Home, Family, and a Lost Middle East’-ஐ வாங்கினேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் நான் வாங்கிய முதல் புத்தகமாக அமைந்துவிட்ட இதை, என்றைக்காவது ஒருநாள் தமிழில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய கனவு. Granta-வில் வெளியான இந்நூலின் முதல் அத்தியாயத்தை இங்கு வாசிக்கலாம்.
ஆண்டனியை நான் அறிமுகம் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் எழுதிய செய்திகளையும் தேடிச் சேகரிக்கத் தொடங்கினேன். ஆண்டுகள் செல்ல செல்ல செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள், ஆவணங்கள் இன்னும் இன்னும் என மிகப் பெரிய ஆவணமாக அவை உருப்பெறத் தொடங்கின; 4.20 GB என்ற அளவில் அவை இன்று நிறைந்து நிற்கின்றன.
செய்திசேகரிப்பின்போது ஆண்டனி பயன்படுத்திய குறிப்பேடுகள், அவர் எழுதிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகள், இன்னும் பிற ஆவணங்கள் என ஆண்டனியின் எழுத்துக்கள் அனைத்தும், லெபனானில் உள்ள American University of Beirut-இல் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆண்டனியின் நினைவாக, வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சர்வதேசக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. இங்கு சென்று படிக்க, ஆய்வுமேற்கொள்ள வேண்டும் என்று விரும்பும் என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இதுவொரு நற்செய்தியாக வந்துசேர்ந்திருக்கிறது.
என்னுடைய சேகரிப்பிலிருந்து ஆண்டனியின் 50ஆவது பிறந்தநாளையொட்டி ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விரும்பி, ‘Anthony Shadid: A Life in Pictures’ என்ற பெயரில் அவரது வாழ்க்கையை விளக்கும் புகைப்படத் தொகுப்பு ஒன்றை என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டேன். நம்பமுடியாத வகையில், அது ஆண்டனியின் அம்மா Rhonda-வை எட்டியிருக்கிறது. “This is a beautiful tribute coming on Anthony’s 50th birthday. Thank you, Rhonda Shadid, Anthony’s mother” என்ற அவரது பின்னூட்டம் இப்போதும் என்னைப் பேச்சிழக்க வைக்கிறது.
அந்தப் புகைப்படத் தொகுப்பை ப்ரிண்ட்-அவுட் எடுத்து ஆண்டனியின் பிள்ளைகளுக்குக் கொடுத்ததாக, பிற்பாடு தனி மின்னஞ்சலில் ரோண்டா எழுதியிருந்தார். நான் கரைந்துவிட்டேன். ஆண்டனியின் மகன் மாலிக்; மகள் லெய்லா. தன்னுடைய தந்தை பற்றி லெய்லா எழுதிய ‘Last Words’ என்ற கட்டுரை உருக்கமான ஒன்று.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பிறந்தநாளுக்கு ஆண்டனி ஷடீட்-ஐ அஸி எனக்குப் பரிசளித்தாள். இளம் ஓவியன் ஆகாஷ் மூர்த்தியைக் கொண்டு ஆண்டனியுடன் நான் இருக்கும் ஓவியம் ஒன்றை, ஆகாஷும் மரகதமணியும் என்னுடைய அறைக்குக் கொண்டுவந்து கொடுத்தபோது, சில நொடிகள் நான் நிதானம் இழந்துவிட்டேன்.
ஆண்டனியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் சிறுநூல் ஒன்றைக் கடந்த ஆண்டு திட்டமிட்டேன். அது இன்னும் எழுதத் தொடங்கப்படவே இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் அது நடந்தேறும் என்பதில் தீர்மானம் கொண்டிருக்கிறேன். ஆண்டனியின் வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் Rami G. Khouri எழுதக்கூடும் என்று நான் நினைத்திருந்த நிலையில், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஆண்டனியின் சக இதழாளர்களான ஸ்டீவ் ஃபைனாரு, ஃபிலிப் பெனெட் ஆகியோர் இணைந்து எழுதும் ஆண்டனியின் வாழ்க்கை வரலாற்று நூலை Celadon Books வெளியிடும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
ஆண்டனி இறந்து பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. “These are the times when we realize how special Anthony Shadid was in reporting from the Middle East in a way that allowed ordinary people's sentiments to reach the world. As we witness, that matters because those ordinary people will shape the future of their country,” என்கிறார் Rami G. Khouri. இதழியல் சார்ந்த என்னுடைய கனவுகள் மிகப் பெரியவை. அந்தக் கனவுகளைக் கைகொள்வதற்கான குன்றாத ஊக்கத்தைப் பின்தொடரும் நிழலின் குரலாக ஆண்டனியின் வாழ்வும் எழுத்தும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
சொல்ல நிறைய இருக்கிறது - சொல்லப் போனால் இனிதான் பேசவே தொடங்க வேண்டும். எனினும், இப்போது இந்தக் குறிப்புடன் நிறைவுசெய்கிறேன்:
லெபனானின் மார்ஜயூனில் இருக்கும் ஆண்டனியின் பூர்வீக இல்லத்துக்கு அடுத்த பத்தாண்டுகளில் நான் பயணிக்கக் கூடும்; அங்கு அவர் சாம்பல் தூவப்பட்டிருக்கும் அவர் வளர்த்த ஓக் மரம் நிற்கும் தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சக் கூடும்!
Anthony, I love you!