இளம் வயதில் இறந்துபோன மேதைமை நிரம்பிய தமிழ்ப் படைப்பாளிகளின் பட்டியல் பெரிது. தமிழ் இலக்கிய வானில் ஒரு ஒளிநட்சத்திரம்போல தோன்றி மறைந்த சுப்ரமண்ய ராஜு வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ’ என்று சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் இடம்பெறும் வரியைப் போல, மிகச் சிறந்த அறிவாளியாக மதிப்பிடப்பட்ட சுப்ரமண்ய ராஜு, தனது 39-ஆவது வயதில் சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் அருகே மிக மோசமான சாலை விபத்தில் இறந்துபோனார்.
பாண்டிச்சேரியில் பிறந்திருந்தாலும், ராஜு வாழ்ந்தது சென்னையில்தான். சுந்தரம் கிளேட்னிலும், பிறகு டிடிகே நிறுவனத்திலும் ராஜு பணிபுரிந்தார். நவீனக் கவிதைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970-களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் 30 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் உள்ளன. அவற்றுள் ‘இன்று நிஜம்’ குறுநாவல் மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் பிரசுரம் கண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசின் சிறந்த புத்தகத்துக்கான விருதும் கிடைத்திருக்கிறது.
ராஜு படைப்புகளின் இயங்குதளம் என்பது நகரமும் அது சார்ந்த வாழ்க்கையும். 70களில் சென்னை மாநகரின் மத்தியத்தர வர்க்கத்தின் நெருக்கடிகளும், அவற்றின் அக உலகும் ராஜுவின் கதைகளில் பேசுபெருளாயின. இளைஞர்களை நவீன வாழ்க்கை முறை எப்படி கட்டமைக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக தன்னுடைய கதைகளில் பதிவுசெய்திருக்கிறார். நேரடியான கதைசொல்லல் முறையில் எளிய வடிவில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் அநேக இடங்களில் அசாத்தியமான நகைச்சுவை உணர்வு ததும்பும். பெரும்பாலான கதைகள் உரையாடல் மூலமாகதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்று நிஜம்’, ‘நாலு பேர்’, ‘இன்னொரு கனவு’ போன்ற கதைகளை வாசிக்கும்போது, “இந்த சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும்” என்ற ராஜுவின் கதைகள் குறித்த அசோகமித்திரனின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.
சிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமல்லாமல் புனைபெயர்களில் சினிமா விமர்சனங்களையும் ராஜு எழுதியிருக்கிறார். ‘குடிசை’ ஜெயபாரதியின் (இவரது தங்கையைத்தான் ராஜு காதலித்து திருமணம் செய்திருந்தார்) ‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியிருக்கிறது.
ராஜுவின் எதிர்பாராத மரணம் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராஜுவின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியைக் கொண்டுவந்தனர்.
சுப்ரமண்ய ராஜு கதைகள்: பனுவல், நூல் உலகம்
சுப்ரமண்ய ராஜுவை மிகச் சுருக்கமாக அறிமுகம் செய்யும் மேற்கண்ட குறிப்பு, அவரது 70-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 6) இந்து தமிழ் திசையின் நடுப்பக்கத்தில் 9 ஜூன் 2018 அன்று வெளியானது; இன்று அவரது 33-ஆவது நினைவு நாள்.
பிரபஞ்சன் கட்டுரை ஒன்றிலிருந்துதான் ராஜுவை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்று தொடங்கிய தேடல், இன்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை எழுதும் அளவுக்குக் கணிசமான செய்திகளைச் சேகரித்து, அறிந்துவைத்திருப்பதில் வந்து நிற்கிறது. காலம் அனுமதிக்கும்பட்சத்தில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி எழுதத் தொடங்கியதிலிருந்து அவ்வப்போது எழுதிய சில குறிப்புகளின் சுட்டிகள் கீழே: