காலநிலை மாற்றம்: தமிழ் ஊடகங்கள் பேசத் தொடங்க வேண்டும்!
காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த சொல்லாடலைத் தமிழ் ஊடகங்கள் தீவிரப்படுத்த வேண்டும்
“You write in order to change the world, [. . .] The world changes according to the way people see it, and if you alter, even but a millimeter the way people look at reality, then you can change it.” ―James Baldwin
"[we have to realize that] a true ecological approach always becomes a social approach; it must integrate questions of justice in debates on the environment, so as to hear both the cry of the earth and the cry of the poor" ―Pope Francis
காலநிலை மாற்றம் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு மொழியியல் சிக்கலும்கூட. ஒரு பிரச்சினை குறித்து நாம் எப்படி பேசுகிறோம் என்பது, அதைப் பற்றி நாம்
எப்படிச் சிந்திக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பிரச்சினையாக, தற்போது தீவிரமடைந்திருக்கும், மனித ஆதிக்க காலநிலை மாற்றம் (anthropogenic climate change) மானுட சிந்தனையில் என்னவாக உருக்கொண்டிருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மேலும், ஒரு விஷயம் குறித்த விவாதத்தைப் பொதுவெளியில் தொடங்கி வைக்கும் ஊடகங்களின் (இன்றைக்குப் பெரும்பாலும் சமூக ஊடகங்கள்) தற்கால ‘மொழி’ (language of anthropocene) என்ன என்பதும் கவனிக்கத்தக்கது.
உண்மைகள் (தரவுகள்) எப்போதும் தங்களுக்காக பேசா; அவற்றின் இயல்பும், தீவிரமும் குறையாமல் மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டியவை ஊடகங்களே. இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றத்தின் உண்மைத் தன்மை குறித்த விவாதங்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில்,
ஊடகங்கள் பேச வேண்டியது அவற்றின் (பின்)விளைவுகளையே
அன்றி, அச்சுறுத்தல்களை அல்ல! மனிதகுலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் காலநிலை மாற்றம், அதன் விளைவுகளால்
‘புதிய இயல்பா’க (new normal) மாறிவிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றின் தீவிரத்தை மக்களின் சிந்தனையில் உறைக்கச் செய்யும் சொல்லாடலுக்கு, மொழியைத் தவிர கருவி வேறொன்றில்லை. இந்தப் பின்னணியில், தற்கால ஊடகத் தமிழ் இதுகுறித்த சொல்லாடலைத் தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறதா என்பது பரிசீலிக்கத் தகுந்த ஒன்று.
அடிப்படைச் சொற்கள்
சமூகத்தின் பல்வேறு தளங்களில், அன்றாடப் பயன்பாட்டில் பெரும்பாலும் நேர்மறையான பொருளில் வழங்கும் ஒரு சொல், மாற்றம். இச்சொல் என்னென்ன அர்த்தப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதும், அது காலநிலை ‘மாற்றம்’ என்ற இடத்தில் எப்படிப் பொருள்கொள்ளப்படுகிறது என்பதும் ஒப்புநோக்கத்தக்கது. அந்த வகையில், அரசியல் சொல்லாடல்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சொல் மேலும் கவனம் பெறுகிறது.
என்றபோதிலும், காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வின் தீவிரத்தை இச்சொல்லில் உள்ள மாற்றம் தாங்கியுள்ளதா என்பது கேள்விக்குரியது. எனவே மாற்றம் என்பதன் பதிலீடாக நெருக்கடி (crisis), பேரழிவு (catastrophe), உடைவு (breakdown) போன்ற சொற்கள் மேற்கத்திய ஊடகங்களில் முன்மொழியப்பட்டு, சில பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ‘நெருக்கடி’ என்பது இன்றைக்கு மட்டுமானதா அல்லது நீண்ட காலத்துக்கானதா; ‘பேரழிவு’ என்பது பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஊக்கத்தை வழங்கக்கூடியதா அல்லது ஒளிந்துகொள்ளும் வழியைத் தேடச் செய்வதா என்பன போன்ற விவாதங்களும் இதையொட்டி எழுந்துள்ளன.
இன்றைய ஊடகத் தமிழ்
மிக அடிப்படையான சொற்களில் இருக்கும் இத்தகையை சிக்கல்களைக் கொண்டு பார்க்கும்போது, மொழியையும் தாண்டி நெறிமுறைகள், தகவமைப்பு உள்ளிட்டவை சார்ந்து தற்கால ஊடகத் தமிழின் முன்பிருப்பது பெரும் பணி; செயற்கரிய சவால் (herculean task)! அந்த வகையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (மட்டுமல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம்) சார்ந்த சொல்லாடலைத் தொடங்குவதற்கு அடிப்படைகளாக கீழ்கண்டவற்றைச் சொல்லலாம்:
1) அரசியல், சினிமா என்ற இரண்டையும் தாண்டி ஊடகங்களின் கவனம் விரிவடைய வேண்டும்.
2) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, நீலகிரி வெள்ளம், கேரள நிலச்சரிவு என ஆண்டொன்றின் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமானவை அல்ல சுற்றுச்சூழல் பிரச்சினைகள். இந்த நிகழ்வுகளின் போது என்ன, எங்கு, எப்படி என்ற நிலையில் இருந்து ‘ஏன்’ என்ற கேள்விக்கான விடையை ஊடகங்கள் தங்கள் வாசகர்களுக்கு, பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
3) நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவை அதன் அரசியல் முக்கியத்துவத்துக்காக மட்டுமின்றி, சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறித்தும் கவனப்படுத்த வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் ஊடக மொழியை, சர்வதேச ஊடகப் புலத்தில் புழங்கும் மொழிக்கு இணையாக மேம்படுத்தி, தமிழின் சொல் வங்கியை விரிவாக்க வேண்டும். கடந்த ஆண்டு வெளியான An Ecotopian Lexicon என்ற நூலில், உலக மொழிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சுட்டும் சொற்கள் தெரிவு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்படாமல் காலநிலை சார்ந்த சொல்லாடல்களில் நேரடியாக ஆங்கிலத்திலேயே பயன்படுத்தும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளன. மிக நீண்ட சூழலியல் பாரம்பரியமும் அறிவும் மொழிவளமும் கொண்ட தமிழில் இருந்து குறைந்தது ஐந்து சொற்களாவது இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், தமிழில் (துறைசார் சொற்களை) நேரடியாக ஆங்கிலத்தில் பயன்படுத்தும் போக்குதான் நிலவுகிறது. தமிழில் இருந்து
கடைசியாக ஆங்கிலத்துக்குச் சென்ற சொல்: அய்யோ!
ஊடகங்களின் கடமை
சாதி, பொருளாதாரம் உள்ளிட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகம்
உள்ள இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளில்
முதலில் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களே காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் முதலில் எதிர்கொள்ளப் போகிறவர்கள். பருவமழை அமைப்பில் மாறுபாடு, வேளாண்மை பொய்த்துப் போதல், கடல்மட்ட உயர்வு, நன்னீர் பற்றாக்குறை, உள்நாட்டு இடப்பெயர்வு என இந்தியத் துணைக் கண்டம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம்கொடுக்கப் போகிறது. பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கும்போது, சமூக சமநிலை தவறி, மேலதிக
சிக்கல்களையும் கொண்டுவரும்!
இத்தகைய பின்னணியில் தான், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டிய பொறுப்பும் கடமையும் ஊடகங்களைச் சேர்கின்றன. இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தும் ‘மொழி’யைத் தெரிவு செய்து, இதுகுறித்த சொல்லாடலை மக்கள் மனதில் நிலைகொள்ளச் செய்யும் வகையிலான செய்தி வழங்கும் முறையைத் தொடங்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான விமானப் பயணங்களைக் குறைக்க, ‘விமானம் அவமானம்’ (Flygskam) என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. சூழல் மாசுபாட்டுக்குப் பங்களிக்கிறோம்
என்ற உணர்வை இதன் மூலம் மக்களுக்கு ஏற்படுத்தி, விமானப் பயணங்களினால் ஏற்படும் மாசு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இதைப் பின்பற்றி, குறைந்தபட்சம் பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வார்த்தைகளை உருவாக்குவதில் இருந்து மொழி மேம்பாட்டைத் தொடங்கலாம்.
மக்கள் இதழியல்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஆகியோரைத் தெரிவு செய்து, அவர்களுக்கு இதழியல் பயிற்சி அளித்து, குழந்தைகள் முதல் முதியவர் வரை அப்பிரச்சினைகளால் என்ன மாதிரியான பாதிப்புகளை அச்சமூகத்தினர் எதிர்கொண்டனர் என்பதை அவர்களைக் கொண்டே பதிவுசெய்ய வைக்கலாம். தமிழத்தின் ஊடகப் பெருநிறுவனங்கள் இணைந்து இம்முயற்சியை மேற்கொள்ள முடியும். தொழில்முறை இதழாளர்கள் அல்லாமல், அச்சமூகத்தில் உள்ளவர்களால் நேரடியாக பதிவாகும் எழுத்துகள் மிகுந்த கவனம் பெறும்.
இதைப் போலவே, ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளை, தொழில்முறை இதழாளர்களால் அல்லாமல், அங்கு வாழும் மக்களைக் கொண்டே நிகழ்ச்சி/ இதழ் தயாரிப்பில் ஈடுபட வைக்கலாம். தமிழகத்தின் அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, காலநிலை இதழியலை முன்னெடுப்பதம் மூலம் மேற்சொன்னவற்றைச் சாத்தியப்படுத்தலாம்.
மேலும், Covering Climate Now போன்ற சர்வதேச இதழியல் திட்டங்களில் இணைவதன் மூலம், காலநிலை மாற்றத்தின் அறிவியல் தொடங்கி அனைத்து பரிமாணங்களைக் குறித்தும் ஆழமான செய்தி வழங்கலை மேற்கொள்ள முடியும்.
உலகம் முழுக்க காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட இடங்களையும் மனிதர்களையும் குறித்து அப்பகுதி ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டிருக்கின்றன; அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பன போன்ற விவரங்களை சிறு ஆவணப்படங்களாக தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கி பார்வையாளர்களுக்கு வழங்கலாம்; அதுகுறித்த விவாதங்களை முன்னெடுக்கலாம்.
தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் அநேகமாக அனைத்தும் இலக்கியத்தை மட்டுமே உள்ளடக்கமாக கொண்டு வெளிவருகின்றன. முப்பது ஆண்டுகளானாலும் நேற்று தொடங்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எந்த வேறுபாடும் கிடையாது. சமீப காலங்களில் இணையத்தில் புதிதாக வெளிவரும் சிற்றிதழ்களில் சில சூழலியலையும் பேசுபொருளாக கொண்டுள்ளது ஓர்
ஆரோக்கியமான முன்னெடுப்பு.
இறுதியாக…
நாம் வாழும் உலகம் வளங்களால் நிறைந்தது என்ற மனப்பான்மையை விடுத்து, மனித மையப் பார்வையிலிருந்து விலகி, உயிரற்ற, உயிருள்ள அனைத்தும் இணைந்த ஓர் அங்கமாக இப்புவியை அணுகும் பார்வையை நம் மனத்தில் வளர்த்திட வேண்டும்.
மானுட அறிவு, பிரபஞ்சத்தின் அறியப்பட்ட எல்லைக்குள் இப்புவியைத் தவிர மனிதர்கள் வேறு எங்கு வாழவில்லை என்று கண்டறிந்திருக்கிறது. எனவே, மனிதர்கள் வாழும் ஒரே கோளாக புவி இப்பிரபஞ்சத்தில் தனித்திருக்கிறது; ஆனால், புவியில் மனிதர்கள் தனித்திருக்கவில்லை. உயிருள்ளவை, உயிரற்றவை என மனிதரின் கற்பனைக்கும், பார்வைக்கும் அறியப்படாத எண்ணிலடங்கா உயிர்களைக்
கொண்ட புவியின் உயிர்ப்பன்மை மனிதகுலத்தால் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் தனித்திருக்கும் நாம், நம் பிள்ளைகளை புவியில் தனித்திருக்கச் செய்யப் போகிறோமா?
ஓவியம்: Anthropocene by William Stoneham
வாழ்த்துக்கள் ண்ணா.
எழுதிபோட்டுட்டே இருங்க.தொடர்ந்து வாசிக்கிறேன்.
வாழ்த்துக்கள்!
நல்ல முயற்சி. தொடர்ந்து வாசிக்க விருப்பம். தொடர்ந்து எழுதுங்கள் - இனியன்.