திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது; அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்றிருக்கிறார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்…’ என்று அவர் பதவியேற்றுக் கொண்டதும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘Belongs to Dravidian stock’ என்று குறித்திருப்பதும் கட்சிக்காரர்களையும் தாண்டி பொதுவில் ஓர் உணர்ச்சி அலையை இந்த இரண்டு நாட்களில் ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலினின் பதவியேற்பு குறித்த சுவாரஸ்யமான அவதானிப்பு ஒன்றை எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்; அந்தக் குறிப்பு இதோ:
தந்தையாகுதல்
முதலமைச்சர் ஸ்டாலின் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்’ என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதைப் பற்றி பல உணர்ச்சிகரமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் வாசித்தேன். ஏ.கே.ராமனுஜன் ‘இந்திய ஈடிப்பஸ்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஃப்ராய்ட் ஈடிப்பஸ் கிரேக்க புராணத்தை ஒரு ஆண் பருவமெய்தி வளருவதன் உளவியல் நிலைகளாக சித்தரிப்பதை இந்திய புராணக் கதைகளான, இளமையைத் தந்தைக்கு தானமளித்த யயாதி, தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர், ஆகிய கதைகளைக் கொண்டு பரிசீலிக்கும் ஏ.கே.ராமானுஜன் இந்திய தனயர்கள் தந்தைக்கு எதிராக எழுவதில்லை அவர்களை சித்தாந்தரீதியாகவோ உண்மையாகவோ கிரேக்க புராணத்தில் நடப்பது போல கொல்வதில்லை மாறாக அவர்கள் தங்கள் தந்தைகளுக்கு தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து தந்தையின் மூலமாகவே அவர்களும் வாழ்கிறார்கள் என்று இந்திய ஆணின் உளநிலை படிநிலைகளை விவரித்தார். ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு வைபவ கதையாடல் ஏ.கே.ராமனுஜனின் கட்டுரையை அறுதி செய்வதாக இருக்கிறது. தன் வாழ்நாளெல்லாம் தன் தந்தையாகவே ஆக வேண்டுமென்ற தனயன் தந்தையாகவே ஆகிவிட்டதை அறிவிப்பதாக ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு நடந்தது; பலரும் அந்த உளநிலையோடு ஒன்றி, தன்னைத்தானே அடையாளம் கண்டு உணர்ச்சிவசப்படுவது, ஏ.கே.ராமனுஜனின் கட்டுரையின் பின்புலத்தில் புரிந்துகொள்ளத்தக்கதே.
தமிழக நிதிநிலை - திராவிட மாடல்
தமிழகத்தின் நிதிநிலை வரலாறு காணாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது; மாநிலத்தின் கடன் சுமார் 5.7 இலட்சம் கோடியாக உள்ளது [இப்பிரச்சினையை விரிவாக விளக்கும் கட்டுரை ஒன்றை வெ.நீலகண்டனும் நானும் இணைந்து ஆனந்த விகடனில் எழுதியிருந்தோம்: என் கடன் கடன் சேர்த்து வைப்பதே!]. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு உடனடி சவாலாக கொரோனா பேரிடரும், அதன் தொடர்ச்சியாக நிதிநிலை சீரமைப்பும் உள்ளன.
இந்தப் பின்னணியில் தான் தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன் (PTR). திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம், நியூ யார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு, எம்.ஐ.டி-யின் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்-ல் நிதி மேலாண்மையும் முடித்திருக்கும் பி.டி.ஆர்., சர்வதேச நிதி நிறுவனங்களில் உயர்நிலை வங்கியாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சன் நியூஸ் ‘கேள்விக் களம்’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.டி.ஆர்., மத்திய-மாநில பொருளாதார உறவுகள், திமுக அரசின் பொருளாதார கொள்கைகள் ஆகியவை சார்ந்து விரிவாகப் பேசினார். கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீண்டு, மக்கள் வாழ்வில் அதன் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து அரசு செயல்படவிருப்பதாக அவர் கூறினார். திமுக அரசின் பொருளாதாரா தத்துவம் என்பது தமிழகத்தின் வருமானத்தைச் சீர்படுத்தி சமூக நீதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, சமூகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவது என்றும் அவர் விளக்கினார். இந்த காணொளியில், 3:45 நிமிடங்களில் இருந்து அவருடைய பேச்சை முழுமையாகப் பார்க்கலாம்.
இந்தப் பின்னணியில், ‘திராவிட மாடல்’ குறித்து இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கும், நான் எடுத்த நேர்காணல் ஒன்றை இங்குப் பகிர விரும்புகிறேன்:
இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கம், இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை சமூகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதைப் புதிய தரவுகளுடன் இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது. மாநில உரிமைகள் இன்றைக்கு ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ‘திராவிட மாடல்’ எதிர்கொள்ளும் சவால்கள், போதாமைகள், அடுத்த கட்டம் ஆகியவை பற்றியும் இந்த நூல் பேசியிருக்கிறது. இந்த நூல் பற்றி விஜயபாஸ்கரிடம் பேசினேன்.
மீண்டும் ஊரடங்கு… தள்ளுபடியில் புத்தகங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தவிர தற்போது வேறு வழி இல்லை என்ற நிலையில், மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்குக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சிலர் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளனர். அதைப் பற்றிய விவரங்கள் கீழே:
ப்யூர் சினிமா புத்தக அங்காடி, சென்னை: சினிமா, இலக்கிய, அரசியல் புத்தகங்களுக்கான கழிவு விலை இன்றே கடைசி. பேசாமொழி சினிமா சார்ந்த எல்லா புத்தகஙகளும், கருப்பு பதிப்பக புத்தகங்களும் 50 சதவீத கழிவிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் 10 சதவீத கழிவிலும் கிடைக்கும். தள்ளுபடி விலை நேரடியாக வந்து புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு மட்டுமே. ஆன்லைன், அழைப்பேசி ஆர்டர்களுக்கு கிடையாது. தொடர்புக்கு: +91 9840 644916
பீ ஃபார் புக்ஸ், சென்னை: இன்றும் நாளையும் (08 & 09-05-2021) பீ ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 15% முதல் 30% வரை தள்ளுபடி. தொடர்புக்கு: +91 90424 61472
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி: உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு எதிர் வெளியீடு நூல்களை சிறப்பு தள்ளுபடி விலையில் வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டோம். இச்சலுகை மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ: 1000 வரை 20 % கழிவு
ரூ: 2000 வரை 25 % கழிவு
ரூ: 2000 க்கும் மேல் 30 % கழிவு
WhatsApp மூலம் விலைப்பட்டியல் மற்றும் பிற விவரங்களை பெற கீழ்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.
+91 99425 11302, +91 98948 75084; மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com