சுயாதீன இசை எனும் கலா கர்வம்!
[Guest post] சென்னையைச் சேர்ந்த இசை விமர்சகர் ஸ்ரீனிவாசன் ஆர்., சுயாதீன இசை குறித்து ஃபேஸ்புக்-இல் எழுதிய குறிப்பு, ‘இன்று’ வாசகர்களுக்காக இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது
தமிழகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்ட இசைத்தேடல் என்பதில் தொடங்கி, the winner is என்று countdown முடிந்து பலத்த கரகோஷங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கையால் ‘சூப்பர் சிங்கர்’ வின்னர் டைட்டிலைப் பெறுகிறான் ஒரு சிறுவன். ‘சூப்பர் சிங்கரி’ல் வெற்றி பெற்ற உடன் இந்தச் சிறுவனுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று பலர் சொல்லியிருக்கலாம்; அவனே கூட நம்பி இருக்கலாம். ஆனால், தங்கள் துறையில் இரண்டாம் ஆட்டத்தைத் துவங்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியான ‘பிக்பாஸு’க்குப் போட்டியாளராக வந்திருக்கிறான் அந்தச் சிறுவன்!
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போல் டி.எம்.எஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன் போன்ற பாடகர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் . தங்கள் குரலால் தமிழ்நாட்டையே ஒரு காலக்கட்டத்தில் ஆட்சி செய்தார்கள். மற்றவர்கள் சிறப்பான பாடல்களைப் பாடினாலும் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள் என்பது என் கருத்து. ஷங்கர் மஹாதேவன், உதித் நாராயணன்கூட சிற்றசர்களாக இருந்தார்கள். இவர்களுக்குப் பின் கார்த்திக் குறிப்பிடத்தகுந்த வகையில் ஒரிஜினாலிட்டியுடன் இருந்தார். கார்த்திக்குக்குப் பிறகு யாரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி என்னை ஈர்க்கவில்லை. சத்ய பிரகாஷ் போன்றவர்கள் திறமையானவர்கள்; ஆனாலும் தனித்துவம் மிக்க பாடகர்களாக பரிணமிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
சிறு வயதிலிருந்தே சங்கீதம் கற்றவர்கள், சினிமா பாடல்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என ‘சூப்பர் சிங்கர்’ போட்டிகளில் பல பாடகர்கள் தோன்றுகிறார்கள். அதற்குப் பின் என்ன ஆகிறார்கள் என்று பார்த்தால் ஏறக்குறைய ‘டிக் டோக்’ பிரபலம் போலத் தான் இவர்களின் நிலையும். இன்ஸ்டாகிராமில் பாடி லைக்குகள் வாங்கிக் கொள்ளலாம்; வெகு சிலருக்கே சினிமாவில் ஒரு சிறு சீஸனில் மட்டும் பாட வாய்ப்பு கிடைக்கிறது. மற்றபடி கல்யாண வீடுகள், YouTube covers, வெளிநாட்டுத் தமிழ்ச் சங்கங்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகள், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பாடுபவர்கள் என்று பல திசைகளில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணம் என்னவென்று யோசிக்கும்போது, சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து சங்கதி பிசகாமல், சுருதி விலகாமல் பாடி நடுவர்களிடம் நல்ல பேர் வாங்குவது தான் இந்த நிகழ்ச்சிகளில் பாடுபவர்களின் உச்சபட்ச லட்சியம். மால்குடி சுபா, “சூப்பர் டா கண்ணா” என்பதும், ஷெர்வானி அணிந்த மற்றொரு நடுவர் அதை ஆமோதிப்பதிலும் இவர்களின் எல்லை சுருங்கி விடுகிறது. இதற்காகவா அத்தனை ஆண்டுகள் உழைப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது? சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து இராணுவ ஒழுங்குடன் ஒப்பிப்பதற்காக அரங்கேறும் இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக திராபையாக இருக்கிறது. அமெரிக்காவின் பிரபல American Idol நிகழ்ச்சியின் சிறப்பான performanceகளை நண்பர் அவ்வப்போது அனுப்புவார்; தங்களின் உண்மையான செயல்திறனை வெளிப்படுத்த முயல்வார்கள், குறைந்தபட்சம்!
சினிமா பாடல்களை மட்டுமே நம்பி தங்கள் திறமைகளை வடிவமைப்பதில் தான் இங்கு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சுயாதீன இசையைப் பற்றி உரையாடல் இன்னும் நம்மூரில் தொடங்கவில்லை. அப்படியே உரையாடல்கள் தொடங்கினாலும், தரமான படைப்புகள் வர சில ஆண்டுகளாகும். விஜய் டி.வி சுயாதீன இசையை ஊக்குவிக்க வேண்டும் என கமல் ஹாசன் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர்கள் அதை செயல்படுத்தினாலும்கூட, அவர்களின் ‘நிலைய வித்வான்க’ளே பிரதான பாடர்களாக இருப்பார்கள். இயக்குநர்கள் பலர் பாடல்களைத் துறக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், இப்படி மனப்பாடம் செய்து சுருதி சுத்தமாகப் பாடுவதற்கே தற்கால சினிமாவில் அவசியம் இல்லை என்றும் தோன்றுகிறது!
ஒரு காலத்தில் பயங்கர ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இன்று ட்ரெண்ட் மாறிப் போனதை ஏற்பதில் அவரிடம் தயக்கம் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் போன்றவர்களை இடிக்காமல் இடிக்கிறார். “இப்போல்லாம் என்னத்த இசையமைக்கிறாங்க, என்னத்த பாடுறாங்க...” இத்யாதிகள். உண்மையில் சந்தோஷ் நாராயணன் ஒரு முக்கியத் திருப்புமுனைதான். பயிற்சி பெற்ற குரல்கள் தேவையில்லை, படத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் குரல்கள் போதும் என்ற அளவு வந்துவிட்டோம். பாரம்பரிய, சாஸ்திரீய, சங்கீத குரல்களைப் பதிவு செய்து பழக்கப்பட்ட சென்ற தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு இன்றைய சூழலை ஏற்க முடியவில்லை. அதே சமயம், தடுக்கி விழுந்தால் எல்லா படங்களிலும் தனுஷ், அனிருத் பாடுவதும், வினு சக்கரவர்த்தி குரலில் மிமிக்ரி செய்து எரிச்சல் உண்டாக்கினாலும் ஒரு paradigm shift தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது; சந்தோஷ் நாராயணன் முன்னோடியாக இருக்கிறார்!
ஆக, பாடகர்கள் வருகிறார்கள், போகிறார்கள். அத்தனை பேருக்கும் தனித்துவம் அளிக்க சுயாதீன இசை மட்டுமே உதவும். இன்று ஷான் ரோல்டன், பென்னி தயாள் என ஆங்காங்கே ஏதேதோ செய்கிறார்கள்; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பிரதி மட்டுமே எடுக்கிறார்கள். பென்னி தயாள் குழுவின் வண்ண வண்ண ஆடைகளில் மட்டுமே தனித்துவம் தெரிகிறது.
நம் இசையில் தனித்துவம் பெருகி வர வெகு நாட்களாகும். முதலில் சுதந்திரமாகச் செய்ய பழக, நாளடைவில் தனித்துவம் வெளிப்படும்; Siennor மாதிரி. துவளாமல் தொடர்ந்து சினிமா என்ற மாயவலையில் சிக்காமல் முயற்சி செய்ய வேண்டும்; சுயாதீன இசையின் மீது ஒருவித கலா கர்வம் வேண்டும். சினிமா பாடல்களையும் மீறி சிந்தனை பெருக வேண்டும். சுதந்திரமான இசை தானே வெடித்து வளரும்.
இப்படித் தான் சுயாதீன இசைக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சேட்டன் ஒருவன் புறப்பட்டிருக்கிறான்; கேளுங்கள். பிடிக்கலாம்!
ஸ்ரீனிவாசன் ஆர்., சென்னையைச் சேர்ந்த இசை விமர்சகர். The Madras Magazine, தமிழினி போன்ற இதழ்களில் இவருடைய இசைக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.
The Madras Magazine இதழில் The Casteless Collective உள்ளிட்ட சுயாதீன முன்னெடுப்புகள் குறித்து அவர் எழுதிய கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: Music of Modern Madras: A Contemporary Scenario
ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/srinivasan.rengarajan.9/