“எனக்கும் ஒரு கனவு இருக்கிறது”
20 செப்டெம்பர் 2019 அன்று நியூ யோர்க் நகரில் நடைபெற்ற உலகளாவிய காலநிலைப் போராட்டத்தில் கிரெட்டா துன்பர்க் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
என் பெயர் கிரெட்டா துன்பர்க்; எனக்கு 16 வயதாகிறது. நான் ஸ்வீடனில் இருந்து வருகிறேன். எண்ணற்ற மக்களின் கனவு தேசமாக விளங்குகிற அமெரிக்காவில் உங்களுடன் இருப்பதற்கு நன்றியுடையவளாக இருக்கிறேன்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது: இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் மாண்புமிக்க வாழ்க்கை வாழ்வதற்காக, அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், பெருநிறுவனங்கள் வேறுபாடுகளை விடுத்து, நாம் ஒரு இக்கட்டான நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து காலநிலை, சூழலியல் நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து அதிலிருந்து மீள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானவர்கள் அப்போதுதான் நம்பிக்கையுடன் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப முடியும்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது: அதிகாரத்திலும் ஊடகத்திலும் உள்ளவர்கள், இந்த நெருக்கடியை வாழ்வாதார நெருக்கடியாகக் கருத வேண்டும். அப்போதுதான் மீண்டும் நான் வீட்டுக்குச் சென்று என்னுடைய தங்கை, நாய்க்குட்டிகளைப் பார்க்க முடியும். அவர்களை நான் தேடுகிறேன்.
உண்மையில் எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. ஆனால், இந்த 2019ஆம் ஆண்டில் கனவுகளுக்கு நேரமோ இடமோ கிடையாது. விழித்துக் கொள்வதற்கான காலம் இது. வரலாற்றின் இந்தத் தருணத்தில் தீவிர விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டும்.
நமக்குக் கனவுகள் நிச்சயம் தேவை; கனவுகள் இன்றி நம்மால் வாழ முடியாது. ஆனால், எல்லாவற்றுக்கும் நேரமும் காலமும் உண்டு.
இருந்தும், நான் செல்லும் இடங்களில் எல்லாம் கற்பனைக் கதைகளே-தேவதைக் கதைகளே சொல்லப்படுகின்றன. தொழிலதிபர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கற்பனைக் கதைகளை உருவாக்குதில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு, இரவு நேரக் கதைகளாக அவற்றை நமக்குச் சொல்லி நம்மை தூங்கச் செய்ய முயல்கின்றனர்.
நாம் எல்லாவற்றையும் எப்படிச் சரி செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிய “நல்லுணர்வை”த் தரும் கதைகள் இவை. எல்லாமே “தீர்த்து வைக்கப்பட்டு”விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், கனவு காணும் அல்லது ஒரு சிறந்த உலகத்தை கற்பனை செய்யும் திறன் நமக்கு இல்லை என்பதுதான். இப்போதைய பிரச்சினை என்பது நாம் உடனடியாக விழித்துக் கொள்ளும் தேவை உள்ளது. எதார்த்தத்தை, உண்மையை, அறிவியலை எதிர்கொள்வதற்கான காலம் வந்துவிட்டது.
“நாம் எப்போதும் விரும்பிய சமூகத்தை உருவாக்குவதற்கான பெரும் வாய்ப்புகளை”ப் பற்றி மட்டுமே அறிவியல் முதன்மையாகப் பேசாது; உடனடியாகச் செயலில் இறங்காமல், நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பேசப்படாத மனிதத் துயரங்களை மேலும் மேலும் மோசமடையச் செய்வது குறித்து அறிவியல் பேசும். நீடித்த மாற்றமடைந்த உலகம் நிச்சயமாகப் பல புதிய நன்மைகளைக் கொண்டிருக்கும். ஆனால், பசுமைப் பணிகள், பசுமைத் தொழில் அல்லது பசுமைப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு தொடக்கப் புள்ளி இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அவசர நிலை. இது வெறும் அவசர நிலை அல்ல; மனித குலம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப் பெரிய நெருக்கடி.
இந்த நெருக்கடியின் தீவிரத்தை மக்கள் உணரும் வகையில் இது கையாளப்பட வேண்டும். ஏனென்றால், ஒரு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலில் அப்படி ஒரு நெருக்கடி இருக்கிறது என்று நீங்கள் நம்பவேண்டும். இது நீங்கள் தொகுத்து விற்கக்கூடிய ஒன்றோ, சமூக வலைதளங்களில் ‘லைக்’ இடக்கூடிய ஒன்றோ அல்ல.
உங்கள் தொழில் யோசனை, உங்கள் அரசியல் கட்சி, அதன் திட்டம் ஆகியவை எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று நம்பும் பாவனையை முதலில் நிறுத்துங்கள். இப்போது நம்மிடம் எல்லா தீர்வுகளும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். நாம் ஏதாவது செயலாற்றத் தொடங்காத வரையில், அந்தத் தீர்வுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவற்றில் இருந்து நாம் தூர இருக்கிறோம்.
பேரழிவைத் தரும் ஆற்றல் மூலத்தில் இருந்து அதைவிட குறைவான அழிவைத் தரும் ஆற்றம் மூலத்துக்கு மாறுவது வளர்ச்சி அல்ல. நம்முடைய கார்பன் வெளியேற்றத்தை ஏற்றுமதி செய்வதென்பது அதைக் குறைப்பது என்று பொருளாகாது. புத்திசாலித்தனமான கணக்கியல் நமக்கு உதவாது. உண்மையில் இதுதான் பிரச்சினையின் மையப்பகுதி.
ஒரு ஐம்பது சதவீத சாத்தியம் என்பது நிச்சயம் போதுமானது இல்லை. இது அறத்தில் அடிப்படையில் பாதுகாக்க இயலாதது. நீங்கள் பயணிக்கப்போகும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 50 சதவீத சாத்தியம் இருக்கிறது என்றால் உங்களில் யாரேனும் விமானத்துக்குள் நுழைவீர்களா? அதைவிட முக்கியம், உங்கள் குழந்தைகளை அந்த விமானத்தில் ஏற்றுவீர்களா?
1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் நிலைகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? காலநிலையைச் சீர்குலைக்கும், மனிதக் கட்டுப்பாட்டை மீறி திரும்பச் செய்ய முடியாத தொடர் வினையைத் தொடங்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை இது வழங்குவதாக ஒருங்கிணைந்த அறிவியல் கூறுகிறது. ஒரு டிகிரி அளவுக்கு வெப்பம் உயர்ந்தாலும்கூட, வாழ்வின், வாழ்வாதாரங்களின் ஏற்றுக்கொள்ள முடியாத அழிவை நாம் காண வேண்டிவரும்.
சரி. நாம் எங்கிருந்து தொடங்குவது? கடந்த ஆண்டு வெளியான ஐபிசிசி அறிக்கையின் இரண்டாம் அத்தியாத்தில் 108ஆம் பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பதற்கான 67 சதவீத சாத்தியம், ஜனவரி 1 2018 அளவில், இன்னும் 440 ஜிகா டன் அளவு கார்பனை வெளியேற்றுவதற்கு மீதம் இருந்தது; ஆனால், இப்போது எந்த எண்ணிக்கை 360 ஜிகா டன் அளவுக்கு வீழ்ந்துவிட்டது.
இன்றைய கரியமில வாயு வெளியேற்ற வேகத்தைப் பார்க்கும்போது, கார்பன் பட்ஜெட் முற்றிலுமாகத் தீர்ந்துபோவதற்கு எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளது. இவையெல்லாம் என்னுடைய கருத்துகள் அல்ல; வேறு யாருடைய கருத்துகளோ, அரசியல் பார்வைகளோ அல்ல. இவை இப்போது நமக்குக் கிடைக்கும் துல்லியமான அறிவியல். இந்தத் தரவுகள் மிதமானவை என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கூறினாலும், ஐபிபிசி-யின் மூலம் உலக நாடுகள் இந்தத் தரவுகளைப் பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளன.
உலக அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய காலநிலை சமவாய்ப்பு-நீதி குறித்து பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கமும் பேசுகிறது. இதன் பொருள் பணக்கார நாடுகள், கரியமில வாயு வெளியேற்றத்தில் தங்களுடைய பங்கினை வேகமாகக் குறைத்தால், அவை ஏற்கெனவே உருவாக்கிக் கொண்டுள்ள சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், தூய குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏழை நாடுகளும் உருவாக்கி தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
வரலாற்றில் மிகப் பெரிய கார்பன் வெளியேற்றி அமெரிக்கா தான். எண்ணெய் உற்பத்தியில் முதன்மையில் இருப்பதும் அமெரிக்கா தான். என்றபோதிலும், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதை வலுவான நோக்கமாகக் கொண்ட ஒரே நாடாக இருக்கிறீர்கள். ஏனென்றால் “அது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஆபத்தான ஒப்பந்தம்” என்பது உங்கள் வாதம்.
இந்த எண்கள் மிகுந்த சங்கடத்தைத் தருபவை. ஆனால், அதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. மேலும், நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த எண்களின் இருப்பு குறித்த எந்த அறிதலும் கிடையாது. நான் சந்தித்த சில பத்திரிகையாளர்களுக்கும்கூட இந்த எண்களைப் பற்றி அறியாமல் உள்ளனர். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. நிலைமை இப்படி இருக்க, தங்கள் அரசியல் திட்டத்தின் மூலம் இந்த மொத்த நெருக்கடியையும் தீர்த்துவிடப் போவதாக அவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
ஆனால், நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாத ஒரு பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? தற்போது நமக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியலையும், அதன் ஒட்டுமொத்த சித்திரத்தையும் எப்படி கைவிட முடியும்?
அப்படிச் செய்வதில் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த நெருக்கடிக்கு எத்தகைய அரசியல் பின்னணி இருந்தாலும், இது பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் கேள்வியாகத் தொடர்வதை நாம் அனுமதிக்கக் கூடாது. காலநிலை மற்றும் சூழலியல் நெருக்கடி கட்சி அரசியலைத் தாண்டிய ஒன்று. இப்போது நம்முடைய முதன்மை எதிரி அரசியல் எதிராளிகள் அல்ல; இயற்பியல் தான் நம்முடைய முதன்மை எதிரி. நாம் இயற்பியலுடன் எந்த “ஒப்பந்தங்களை”யும் மேற்கொள்ள முடியாது.
தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழும் நிலைகளைப் பாதுகாப்பதற்காக உயிர்க்கோளத்தின் உயிர்ப்புக்கு நாம் சில தியாகங்களைச் செய்யவேண்டும் என்று சிலர் கூறுவது முற்றிலும் சாத்தியமே இல்லாத ஒன்று.
ஒருவேளை இது இயலாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், எண்களைப் பார்க்கும்போது - ஒவ்வொரு நாடும் ஏற்றுக்கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய மிகத் துல்லியமான அறிவியல் தரவுகளைப் பார்க்கும்போது நாம் எதற்கு எதிராக இருக்கிறோம் என்பதைத் துல்லியமாக என்னால் உணர முடிகிறது.
ஆனால், உங்கள் நேரத்தை கனவு காண்பதில் மட்டும் செலவிடக் கூடாது; அல்லது இதை ஒரு அரசியல் போராட்டமாகக் கருதி வெற்றி பெற வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நாணயத்தைச் சுண்டுவிட்டு சூதாடுவதைப் போல் நீங்கள் கையாளக் கூடாது.
மாறாக, நீங்கள் அறிவியலின் பின் ஒன்றிணைய வேண்டும்.
நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்ய இயலாதவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.
ஏனென்றால், கைவிடுவது எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருக்காது.
கிரெட்டாவின் உரைகளை ‘நம் வீடு பற்றி எரிகிறது’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறேன்; அமேசானில் வெளியாகியிருக்கும் அத்தொகுப்பை இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்: https://www.amazon.in/dp/B08D6X8816
அருமை