ஜெனிபர் டௌட்னா: “தங்கள் திறன் குறித்த சந்தேகங்களைப் பெண்கள் களைய வேண்டும்”
இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை இமானுவல் கார்பெந்தியருடன் இணைந்து பெற்றிருக்கும் உயிரி வேதியியலாளர் ஜெனிபர் டௌட்னா நேஷனல் ஜியோகிரஃபிக் இதழுக்கு அளித்த நேர்காணல்
ஜெனிபர் டௌட்னா (Jennifer Doudna) ஆறாம் வகுப்பில் இருந்தபோது, அவருடைய தந்தை டிஎன்ஏ ஆராய்சியின் முன்னோடியான ஜேம்ஸ் வாட்சன் எழுதிய ‘தி டபுள் ஹெலிக்ஸ்’ (The Double Helix) நூலைக் கொடுத்திருக்கிறார்; ஜெனிபர் கிளர்ச்சியடைந்தார். கலிஃபோர்னியாவில் சிறிய கல்லூரி ஒன்றில் உயிரிவேதியியல் பட்டம் பெற்ற டௌட்னா, மேற்படிப்புக்காக ஹார்ட்வர்டு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்தபோது, “ஒரு வகையில் பிரமித்துத்தான் போனேன்” என்கிறார். அங்கு ஆர்என்ஏ சார்ந்த முன்னோடி ஆய்வுகளுக்குப் பங்களித்துள்ள டௌட்னா, CRISPR என்று சுருக்கப் பெயரிடப்பட்ட, வழக்கத்துக்கு மாறான மூலக்கூறு வரிசையின் இயங்குமுறையை ஆய்வு செய்வதில் பல ஆண்டுகள் செலவிட்டுள்ளார். 2011இல் இவரும் நுண்ணுயிரியலாளர் இமானுவல் கார்பெந்தியரும் (Emmanuelle Charpentier) ஆய்வில் இணைகின்றனர். அடுத்த ஆண்டே CRISPR சார்ந்த புரட்சிகரமான கண்டறிதல்களை வெளியிடுகின்றனர். Cas9 என்கிற நொதியுடன் இணைந்து, அறுவைச் சிகிச்சைக்கானத் துல்லியத்துடன் டிஎன்ஏ இழைகளை வெட்டும் சாத்தியத்தை CRISPR வழங்குகிறது என்பதே அது. விளைவு: மரபணு திருத்த உத்தி (gene-editing technique) என்கிற கடந்த நூற்றாண்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் திருப்புமுனை நிகழ்ந்தது. தற்போது பெர்கெலியில் கலிஃபோர்னியா பல்கலைக்கழத்தில் தன்னுடைய ஆய்வுகளைத் தொடர்ந்துவரும் டௌட்னா, மரபணு-மாற்ற தொழில்நுட்பங்களுக்கான நெறிமுறைத் தரநிலைகளை நிர்ணயிக்கும் ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
நீங்கள் உங்களைப் பெண்ணியவாதியாகக் கருதுகிறீர்களா?
இது ஒரு சிறந்த கேள்வி. நான் ஒரு அரும்பிக் கொண்டிருக்கும் பெண்ணியவாதி என்றே சொல்வேன், ஏனென்று சொல்கிறேன்: என்னுடைய பணியின் தொடக்க காலத்தில், ஒரு “பெண் அறிவியலாளர்” என்ற பெயரில் நான் அணுகப்படக்கூடாது என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்னுடைய பாலினம் சார்ந்து, குறிப்பிட்ட எவ்வித அனுகூலங்களோ பாதகங்களோ இன்றி, நான் ஈடுபட்டுள்ள பணி சார்ந்த என்னுடைய நேர்த்திக்கும் வேட்கைக்குமாக பாலினக் குறிப்பு இல்லாமல், வெறுமென அறிவியலாளர் என்று மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். ஒரு குறிப்பிட்ட குழுவுடன் அடையாளப்படுத்தப்படும்போது, பெரும்பாலானோர் அப்படித்தான் உணர்வார்கள் என்று நினைக்கிறேன். அடிப்படையில், ஒரு நபராக தாங்கள் யார் என்பதில் இருந்தும், பிறப்பு சார்ந்த தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்காக அல்லாமல், அவர்களுடைய பங்களிப்புகள் சார்ந்தும் மதிப்பிடப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
எனவே, அது எனக்கு உண்மையாக இருந்தது, அநேகமாக என் 40களில். ஆனால் கடந்த ஒரு தசாப்தத்தில் அல்லது அதற்கு மேலாக, எனக்கு மிக நெருக்கமாக - இந்த வகையான பார்வை/ சார்பு இருப்பதை நான் கண்டிருக்கிறேன். இது பெரும்பாலும் தற்செயலானது, ஆனால் நான் பெண்களுக்கு எதிரான பார்வை/ சார்புகளைக் காண்கிறேன். அது ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எனக்கு ஏற்படுத்தி விழிப்புடன் இருக்கச் செய்தது. பெண்களைக் குறித்த தேசிய, சர்வதேச ஊடகங்களின் கண்ணோட்டம், குறிப்பாக அவர்களின் பணி சார்ந்து, பல்வேறு கலாசாரங்கள் பெண்களைச் சித்தரிக்கும் முறை — நாம் இப்பிரச்சினைகள் குறித்து விவாதங்களைத் தொடர வேண்டும். மேலும், அவர்கள் விரும்பும் எந்த வகையிலும் சமூகப் பங்களிப்புக்குப் பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள், அதற்கான திறன் அவர்களுக்கு உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்களின் தாயிடம் இருந்தோ, ஒரு பணியில் ஈடுபடுவது மூலமாகவே அல்லது வேறு இணைந்த முறைகளிலோ உருவாக வேண்டும்.
[இமானுவல் கார்பெந்தியர் - ஜெனிபர் டௌட்னா; ஒளிப்படம்: Miguel Riopa/Agence France-Presse — Getty Images]
அடுத்தப் பத்தாண்டுகளில் பெண்களுக்கு ஏற்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு மாற்றமாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
ஹ்ம்ம். நான் இதற்கு என்ன கூற முடியும்? மேம்பட்ட குழந்தை பராமரிப்பு அல்லது, சம வேலைக்குச் சம ஊதியம் என்பன போன்ற வழமையான பதில்கள் ஏராளமாக உள்ளன. தொழில்முறை வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று பெண்கள் உணர்கிறார்கள் — வணிகம், கொள்கை விவாத அறைகள், நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள், போலவே கல்வி, நான் சார்ந்திருக்கும் ஆய்வுப் புலம். தங்கள் திறன் குறித்த சந்தேகமுடையவர்களும், தங்களுடைய பங்களிப்புக்கு வரவேற்பு இல்லை என்று நினைக்கும் பெரிய எண்ணிக்கையிலானோரை நாம் தவிர்த்துவருவதால், தலைமைப் பதவியின் உச்ச நிலைகளில் பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டியதன் தேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பெரிய பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி ஆலோசகராக நான் மேற்பார்வையிடும் பெண்களில் சிலர் தங்கள் திறன் குறித்த சந்தேகத்தில் உள்ளதை நான் அடிக்கடி பார்த்துவருகிறேன். இது பண்பாட்டுக் கூறா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், பொதுவாக ஆண்களைவிட பெண்கள் தங்கள் திறன் குறித்து சந்தேகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு படிப்பில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவது, ஒரு உதவித் தொகைக்கு வெற்றிகரமாக விண்ணப்பிப்பது, வேலைக்கோ பணி உயர்வுக்கோ விண்ணப்பிப்பது ஆகியவை தொடங்கி, அமெரிக்காவின் கார்பரேட் தலைமைப் பதவிகளின் உச்சத்துக்குச் செல்வதுவரை தங்கள் திறன் குறித்த சந்தேகங்கள் தொடர்கிறது.
இது முற்றிலும் உண்மை. அன்றொரு நாள் இளம்பெண் ஒருத்தி என்னிடம் வந்து, “உங்களுக்கு இம்போஸ்டர் குறைபாடு ஏற்படும்போது என்ன செய்வீர்கள்?” என்று கேட்டாள். [தங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக இருந்தபோதிலும், அவை அதிர்ஷ்டத்தால் ஏற்பட்டவை என நினைத்து, தங்கள் திறமைகளைச் சந்தேகிக்கும் அல்லது தங்களை ஏமாற்றுக்காரர்களாக உணர்ந்து அஞ்சும் நிலைக்கு ‘Impostor syndrome’ என்று 1970களில் உளவியலாளர்களால் பெயரிட்டனர்]. தன்னம்பிக்கையுடன் இருந்து அதைக் கடந்து வருவேன் என்று அவளுக்கு பதிலளித்தேன். ஆனால், இப்படிக் கேட்கும் ஒரு ஆணை நீங்கள் காண்பது அரிது.
அதே தான். அதை நாம் எப்படியாகினும் மாற்றியாக வேண்டும்.
எந்த வரலாற்று நபரை உங்களுடன் நீங்கள் பெரிதும் அடையாளம் காண்கிறீர்கள்?
அநேகமாக டோரொதி ஹாட்ஜ்கின் [Dorothy Hodgkin - பெனிசிலின் மற்றும் வேறு முக்கியமான உயிரி வேதியியலின் அமைப்பை எக்ஸ்-கதிர்கள் மூலம் கண்டறிந்தமைக்காக 1964இல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் அறிவியலாளர்]. அவருடைய வாழ்க்கை வரலாறை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். ஒரு பெண்ணாக தன்னுடைய பணியில் அனைத்து விதமான சவால்களையும் அவர் சந்தித்திருந்தது எனக்கு திகைப்பை அளித்தது. அவருக்குக் குடும்பம் இருந்தது, ஆனால் அவருடைய ஆய்வுப் பணியினால் குழந்தைகளிடம் இருந்து நீண்ட காலம் விலகி வாழ நேர்ந்தது. அது எத்தகைய சவால் மிகுந்தது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள், ஆனால், மிகச் சிறந்ததாகவும் பணியில் உச்ச நிலையை அடைவதுமாக அவருடைய வேட்கை இருந்தது. அதே நேரம் பொறுப்புமிக்க தாயாகவும் மனைவியாகவும் அவர் இருந்திருக்கிறார். இது உண்மையில் என்னை பாதித்தது.
உங்களின் சொந்த திருப்புமுனைத் தருணம் எது?
ஒரு அறிவியலாளராக என்னுடைய பணி சார்ந்து நான் செய்த ஒரு காரியம் என்னுடைய போக்கையே மாற்றிய தருணம் எது என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், ஹார்வர்ட்-இல் பட்டப்படிப்புக்காக நான் சேர்ந்திருந்த தொடக்க காலத்தில் நிகழ்ந்த தனித்து நிற்கும் நிகழ்வு ஒன்றைச் சொல்ல முடியும். ஹவாயீ-இன் சிற்றூர் ஒன்றிலிருந்து வந்திருந்த நான், அரசுப் பள்ளியில் படித்தேன். ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்புக்காக நான் சேர்ந்திருப்பது எனக்கு மிகுந்த பிரமிப்பைத் தந்தது. சுற்றிலும் மிகத் திறமையானவர்கள் இருக்கும் சூழலில் வெற்றிகரமாக தேர்ச்சியடைவது குறித்த என்னுடைய திறமைகள் சார்ந்த தன்னம்பிக்கை குறித்த சந்தேகத்துடன் இருந்த அந்த மதிய வேளையில், என்னுடைய அறிவுறுத்துநர், நோபல் பரிசு பெற்ற ஜாக் ஷோஸ்தாக் (Jack Szostak) என்னிடம் வந்து சோதனை ஒன்றைப் பற்றிய என்னுடைய கருத்தைக் கேட்டார். சாதனைகளிலும் திறன்களிலும் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒருவர், பட்டதாரி மாணவராக உங்களிடம் வந்து ஒரு கருத்துரு குறித்த உங்கள் கருத்தைக் கேட்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? என்னுடைய கருத்துகளுக்கும் மதிப்படுகின்றன என்பதை எனக்கு அந்த நிகழ்வு உணர்த்தியது; அவர் என் மீது நம்பினார், எனவே என்னை நானே நம்ப வேண்டும்.
உங்களுடைய மிகப் பெரிய பலமாக நீங்கள் கருதுவது எதை?
அநேகமாக என்னுடைய உறுதிமிக்க குணம் (stubbornness). கருத்துரு ஒன்று என் மனதில் தோன்றினால், அதைக் கைவிட மாட்டேன். சில நேரங்களில் இது என்னைத் துன்புறுத்தவும் செய்யும், ஆனால், என்னுடைய இந்த உறுதிமிக்க குணம் என்னும் பண்பு, நான் அறிவியலில் நிகழ்த்திய பல விஷயங்களைச் செய்ய என்னை அனுமதித்தது.
நீங்கள் தாண்டி வந்த மிகப் பெரிய தடைகள் யாவை?
“ஒரு உயிரிவேதியியலாளராகவும் வெற்றிகரமான அறிவியலாளராகவும் ஆகும் தகுதி உண்மையிலேயே எனக்கு இருக்கிறா?”, என்ற வியப்புமிக்க சந்தேகங்கள் அநேக சமயங்களில் எனக்கு ஏற்படும். வெற்றி குறித்த என்னுடைய வரையறை என்பது பண வெகுமதி அல்லது தொழில்முறை அங்கீகாரம் கூட அல்ல. “நான் பெருமை கொள்ளும் வகையிலான அறிவியலை நான் உண்மையில் மேற்கொள்ள முடியுமா? என்னுடைய வாழ்க்கையைச் சரியாகத் தேர்வு செய்ததைப் போல் என்னால் உணர முடியுமா, அதாவது நான் சிறப்பாக ஈடுபடும் ஒன்றில் ஏதாவது செய்வதற்கு முடிவெடுத்துள்ளேனா?” என்னுடைய இளமைக் காலங்களில் அநேகம் முறை இதற்கான பதில் இல்லை என்றும், நான் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன் என்றும் தோன்றும். ஆனால், என்னுடைய பிடிவாத குணத்தால் நான் அதிலிருந்து வெளியேறவில்லை. என்னுடைய பணி குறித்த சந்தேகங்களை எழுப்பும் குரல்கள் எனக்குள் ஒலிக்கும், ஆனால் அதற்கு முரணாக இன்னொரு குரல், “நீ இதிலிருந்து வெளியேறப் போவதில்லை,” என்றும் கூறும். இதைச் செய்வதில் உறுதியாக நான் தொடர்ந்து ஈடுபடப் போகிறேன், ஏனென்றால் செய்வதற்கான காரியங்களில் இதுவே சரியானது. குறிப்பிட்ட ஒரு புள்ளியில், நாம் எல்லோரும் இந்தச் சந்தேகங்களை எதிர்கொள்வோம், அதிலிருந்து மீண்டு வெளியேறும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இன்றைய இளம் பெண்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?
முதலில், உங்கள் சொந்த இடமாக நினைத்து அறைக்குள் நுழையுங்கள்; ஓர் ஆண் இதை எவ்வித எதிர்மறை உணர்வுமின்றி மேற்கொள்ள முடியும்.
மேலும் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கைத் துணையைச் சரியாகத் தேர்ந்தெடுங்கள். குழந்தைகள் குறித்த உங்கள் முடிவுகள், உங்கள் பணி, உங்கள் வாழ்க்கைமுறை ஆகிய அனைத்திலும் ஒரு பெண் தன்னுடைய முழு ஆற்றலில் ஈடுபட துணை நிற்கும் துணையைக் கொள்ள வேண்டும்.
நன்றி: நேஷன்ல் ஜியோகிராஃபிக்
Strength in stubbornness: A 2020 Nobel winner reflects on her career
https://www.nationalgeographic.com/science/2020/10/interview-jennifer-doudna-winner-of-nobel-prize-in-chemistry/
தமிழில்: சு. அருண் பிரசாத்