நதியின் அருகே ஓடும் இன்னொரு நதி
“ஒருவரின் வாழ்க்கையை அவர் எழுத்துக்கள் மூலமாக தரிசிப்பது என்பது அதை மதிப்பீடு செய்யவோ, ஆராயவோ இல்லை.” — கமலா தாஸின் ‘என் கதை’ நூலுக்கு இதழாளர் ஆசிபாவின் விமர்சனம்.
கமலா தாஸ், K Das என்ற பெயர்களில் ஆங்கிலத்தில் எழுதிய கமலா, மலையாளத்தில் மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் எழுதினாலும், எனக்கு அறிமுகமானது கமலா சுரைய்யா என்ற பெயரின் மூலம்தான். பெயர்களின் மீது இருக்கும் ஒரு வகையான ஈர்ப்பினால், கமலா சுரைய்யா யார் எனத் தேடத் தொடங்கியபோது, கறுப்பு முக்காடிட்ட படம் ஒன்று அவரை எனக்கு அறிமுகம் செய்தது; பிறகு சில கதைகள். ஆனால், அவை அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பள்ளியில் இரண்டாம் பாடமான மலையாளத்தில், இரண்டாம் தாளுக்காக மாதவிக்குட்டியின் 'நெய்ப்பாயசம்' என்ற கதையை என்னுடைய பன்னிரண்டாம் வயதில் வாசிக்க நேர்ந்தது.
அது இறந்து போன மனைவியின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீட்டிற்கு தன் மூன்று குழந்தைகளைச் சந்திக்க வரும் தந்தையின் மனவோட்டத்தைப் பதிவு செய்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அக்கதையை மீண்டும் வாசித்தபோது, ஓர் ஆணின், ஒரு தந்தையின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்ற ஒரு பெண்ணின் கணிப்பாகப் பார்க்க முடிந்தது.
இக்கதைக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து கல்லூரிக் காலத்தில் The Looking Glass என்ற அவரது ஆங்கிலக் கவிதையை வாசிக்க நேர்ந்தது. கமலா தாஸின் பிற கதை/கவிதைகளை வாசித்திருந்தாலும், இவை மட்டுமே எப்போதும் நினைவில் நிற்கின்றன. கமலா தாஸின் கவிதைகளில் வெளிப்படும் காதல், காமம் சார்ந்த உணர்வுகள் என்பது வெளிப்பூச்சுகள் அற்றவையாகவும், அவரின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு அப்படியே வார்த்தைகளைக் கொடுப்பதாகவுமே இருக்கின்றன. பல இடங்களில் பெண்ணிய நோக்குடன் அவற்றை வாசிக்கும்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அவற்றின் பகட்டின்மை காரணமாக கடந்து சென்றுவிட முடிகிறது.
1930களில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், 1970களில் தன்னுடைய வாழ்வனுபவத்தை, குறிப்பாக பாலியல் சார்ந்தவற்றை ‘என் கதை'யாக வெளிப்படையாகப் பேசுவது, அப்போதும் இப்போதும் அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருக்கிறது. 2011இல் வெளியாக Caitlin Moranஇன் How to be a Woman என்ற புத்தகத்தின் பல்வேறு பகுதிகளை 'என் கதை'யுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில், வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த இருவேறு பெண்களின் வாழ்வனுபவம் ஒரே மாதிரியானதாக இருப்பது, காலத்தினூடாக பெண்களின் வாழ்க்கை ஒரே நூலிழையப் பிடித்துக் கொண்டுதான் சஞ்சரிக்கிறது என்பதைக் காண்பிக்கிறது.
முதலில் மலையாளத்திலும், பிறகு ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட இப்புத்தகம், ஒரே கதையின் இரு பதிவுகளாக இருக்கின்றன. ஆங்கிலத்தில் சற்று நீளமாகவும், தொடக்கம்-முடிவு மாற்றியமைக்கப்பட்டும் இருக்கின்றன. தமிழில் நிர்மால்யாவின் மொழிபெயர்ப்புடனும், மாதவிக்குட்டியின் மலையாள கதைகளுடன், ஆங்கிலக் கவிதைகளுடன் ஒன்றிப்போக முடிவதுபோல அவரின் ஆங்கில நினைவுக்குறிப்புகளுடன் போக முடியவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு கண்ணாடி இருப்பது போலவே இருந்தது.
ஆமி என்று வீட்டில் அழைக்கப்படும் கமலா தாஸ் தன்னை அரவணைத்துக் கொள்ளும், தன்னுடைய எல்லாமாகவும் இருக்கும் 'கிருஷ்ணனை'த் தேடியதாக பல இடங்களில் குறிப்பாலும் நேரடியாகவும் கூறியிருந்தாலும், அப்படி ஒரு அன்புக்காகத்தானா என்ற குழப்பம் ஆமிக்கே இருந்திருக்கிறது என்பது அவருடைய குறிப்புகளில் ஓரிடத்தில் தெரிகிறது. சுயசரிதை, நினைவுக்குறிப்பு போன்றவற்றை வாசிக்கும்போது ஏற்படும் மனவெழுச்சி என்பது எழுத்தாளுரும் வாசகரும் ஒரே புள்ளியில், ஒரே அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் போது நிகழ்கிறது. இது, வேறு வகையான இலக்கியப் படைப்புகளில் இருந்து மாறுபட்டதாக இருப்பதற்கான காரணம், இவை வாழ்வின் ஒரு காலகட்டத்தில் தனக்கு நேர்ந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்வுகள். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளை மறைக்கவும் மறக்கவும் பழகிக் கொண்ட பிறகு, இது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது என்றும் அச்சம்பவம் என்னுள்ளும் இதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எழுத்தாளர் பதிவு செய்திருப்பது நம் சமுதாயமும் அதில் வாழும் மக்களும் எந்தளவிற்கு மாறாமல் இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்வதாக இருக்கிறது.
கல்கத்தாவில் ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு மத்தியில் வளர்ந்த ஆமி இயல்பிலேயே தனது தோற்றத்தைக் குறித்த தாழ்வு மனப்பான்மையில் இருந்தது குறித்து பல்வேறு இடங்களில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வீடும் பள்ளியும் மட்டுமே முதன்மையான socialising circlesஆக இருக்கும் குழந்தைப் பருவத்தில், தோற்றம் குறித்து ஏற்படும் தாழ்வு/உயர்வு மனப்பான்மை வீடுகளில் தொடங்குகிறது.'கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாய்', 'தினமும் எண்ணெய் தேய்த்து குளித்தால் நிறம் மாறும்', 'வளரிளம் பருவத்தில் அழகு தானாக வரும்' என்பன போன்ற வீட்டில் 'அக்கறையில்' சொல்லப்படும் வசனங்கள் body shamingஇன் அடிநிலை வெளிப்பாடு என்பதும், அழகு என்பது மேலைநாட்டின் கோட்பாடுகளுடன் ஒத்திசைந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் பலரும் இன்று பேசிக்கொண்டிருந்தாலும் நடைமுறையில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
தோற்றம் சார்ந்த அழகு என்பது தனக்கில்லை என்று ஆழமாக நம்பிய ஆமி, பிற்காலத்தில் 'அழகு என்ற பருவகாலம் மிகவும் குறுகியதாக மட்டுமே இருந்தது' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான முக்கியமான காரணமாக அவர் வாழ்நாளில் சந்தித்த உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்களைக் காண முடிகிறது. தொடர் மன அழுத்தம் உடலைப் பலவீனமாக்கியதோடு, இதயம், கல்லீரல் பாதிப்பும் இருந்திருக்கிறது. ஓரிடத்தில் அழகு இல்லை என்ற தாழ்வுணர்ச்சியைப் பதிவு செய்யும் ஆமி, பிரிதொரு இடத்தில் தன்னைத் தேவதையாகக் காண்கிறார். சராசரி பெண் ஒருத்தியின் மனநிலையில் ஏற்படும் இம்மாதிரியான முரண்களை அதன் வீரியம் குறையாமல் பதிவு செய்திருப்பதால்தான் வெளியாகி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இதனுடன் வாசகரால் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.
தன் வாழ்க்கையின் முக்கால்வாசியைப் பதிவு செய்திருக்கும் இந்தக் குறிப்புகளில் அவருடைய காதலனுபவங்களும், அது அவரில் ஏற்படுத்திய மன எழுச்சிகளும் மனச்சோர்வும் முக்கியமான இடம்பெறுகின்றன. ஆனால், அவற்றில் பலவும் தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொள்ளவோ, இல்லை engagedஆக வைத்திருக்கவோ அவர் மனம் உருவாக்கிய கற்பனைகளா (hallucination) என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. கதையில் வரும் ஆட்களுடனும், நிகழ்வுகளுடனும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் இதற்கு சாட்சியமாக இருக்கின்றன. கார்லோ என்ற கமலாவின் காதலரை நாம் சந்திப்பதற்கும், சாம்பல் நிறக் கண்களுடைய, கமலாவை தெய்வமாக பூஜிக்கும் நபரைச் சந்திப்பதற்கும் அநேக வேறுபாடுகளை உணர முடிகிறது. ஒரு பேட்டியில் “ஒரு நதியின் அருகே ஓடும் இன்னொரு நதியைப் போல, நிஜ வாழ்க்கைக்கு இணையாக கற்பனை வாழ்க்கை ஒன்று இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ஏதாவது கிடைத்தால் அதை வைத்து கற்பனை வாழ்க்கைக்கு சக்தி கொடுக்க வேண்டும்; இங்கிருந்து கிடைக்கும் சக்திகளை வைத்து நிஜ வாழ்க்கையை பரிபூரணமாக்க வேண்டும்,” என்று அவர் சொல்லி இருப்பது இவ்வெண்ணத்தை ஊர்ஜிதமாக்குகிறது.
ஒருவரின் வாழ்க்கையை அவர் எழுத்துக்கள் மூலமாக தரிசிப்பது என்பது அதை மதிப்பீடு செய்யவோ, ஆராயவோ இல்லை. மாறாக, இரு வெவ்வேறு காலகட்டத்தில் வாழும், இரண்டு வித்தியாசமான நபர்களின் இருவேறு வாழ்க்கைகள் எந்தெந்த புள்ளிகளில், எதனால் இணைகின்றன என்பதை பார்ப்பதற்காகவே. வாழ்க்கை முழுவதுமே பலரின் அன்பும் கவனிப்பும் கிடைத்தாலும், ஒருவிதமான true connection கிடைக்காமலும், தீவிர மன அழுத்தத்தாலும் உழலும் ஒரு பெண் அதை எப்படி பதிவு செய்திருக்கிறார், அவ்வனுபவங்களில் இருந்து என்ன மாதிரியான விழுமியங்களை தனதாக்கியிருக்கிறார் என்றும் மாறிக்கொண்டே இருக்கும் சமூகச் சூழலில் பெண்ணின் இடமும் அனுபவமும் எப்படி ஏறத்தாழ ஒரே மாதிரியானதாக இருக்கிறது என்பதையும் காட்டும் கண்ணாடியாக கமலா தாஸின் என் கதை இருக்கிறது.
‘துக்கம் என்பது எங்கும் செலுத்த முடியாத அன்பு’ (Grief is just love with no place to go) என்ற ஜேமி ஆண்டர்ஸனின் வரி கமலா தாஸின் 'என் கதை'யை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தது. 'என் கதை' என்ற சுயசரிதை, காத்திரமான, பெண் உலகைப் பற்றிய வெளிப்படையான, சமூகத்தின் பற்பல அடுக்குகளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய படைப்பு என்பதற்கும் மேலாக, வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு தீராத தேடலில் தன்னை செலுத்திக் கொண்ட பெண்ணின் நினைவுக்குறிபபுகளாக தோன்றுகின்றன. அந்த தேடல் எதை நோக்கியதாக இருந்தது என்பது வாசிப்பனுபவத்தினூடாக நாம் கிரகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
என் கதை
கமலா தாஸ்
தமிழில்: நிர்மால்யா
வெளியீடு: காலச்சுவடு
160 பக்கங்கள், ₹190
ஆசிபா — இதழாளர், மொழிபெயர்ப்பாளர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னதாக விகடன் குழும இதழ்களில் மாணவப் பத்திரிகையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தினமலர் பட்டம், மின்னம்பலம், இந்தியா டுடே போன்ற இதழ்களில் இவர் பங்களித்திருக்கிறார்.
ஆசிபா வலைப்பூ: https://saagaavaram.wordpress.com/