ஆண்டனி ஷடீட் என்னும் இதழியல் நிகழ்வு
அவர் காலத்தின் தலைசிறந்த இதழாளர் என்று புகழப்பட்ட, சிரிய யுத்தத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஒப்பற்ற ஆளுமையான ஆண்டனி ஷடீட்-இன் 52ஆவது பிறந்த தினம் இன்று.
No matter how honoured you are as a journalist, you can never afford to abandon the fundamentals of the trade. You simply have to be there to cover the story. Even if it costs you your life.
—Pranay Gupte
தான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்பதைப் பதினைந்து வயதில் முடிவெடுத்து, எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவோடு தன் இதழியல் பணியைத் தொடங்கியவர்; மத்தியக் கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் சூழல்களால் மூளும் போர்களையும் அதன் விளைவாகச் சிதைவுக்குள்ளான மக்களின் வாழ்வையும் உலகுக்குத் தொடர்ச்சியாகத் தன் எழுத்துகளால் சொல்லி வந்தவர்.
ஈராக் போர், அரபுப் புரட்சி, சிரியா போர் என மத்திய கிழக்கின் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நேரடியாகக் களத்திலிருந்து செய்தியாக்கிய ஒப்பற்ற பத்திரிகையாளர் ஆண்டனி ஷடீட் (Anthony Shadid).
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பிறந்து வளர்ந்த ஆண்டனி ஷடீட் லெபானனைப் பூர்வீகமாகக் கொண்டவர். முதலாம் உலகப் போரின்போது லெபானனின் மார்ஜயூன் (Marjaayoun) கிராமத்தில் இருந்து ஷடீடின் முன்னோர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
வரலாற்றுப் பின்புலத்தில் செய்தி
விஸ்கான்ஸின்-மேடிஸன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இதழியல் படித்து, பல்கலைக்கழக மாணவர் பத்திரிகையான ‘தி டெய்லி கார்டினல்’-இல் இதழியல் பயிற்சி பெற்றார். செய்தி நிறுவனமான ‘அசோசியேடட் பிரஸ்’-இன் மத்தியக் கிழக்கு செய்தியாளராக எகிப்தின் கெய்ரோ நகரில் தன் இதழியல் வாழ்வைத் தொடங்கினார்.
‘பாஸ்டன் குளோப்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘நியூ யார்க் டைம்ஸ்’ ஆகிய நாளிதழ்களில் பணியாற்றினார். தன் கனவான மத்தியக் கிழக்கில் பணியாற்றுவதற்கு அரபி மொழி அறிந்திருப்பதன் அவசியத்தை உணர்ந்து அரபி கற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே மக்களிடம் நேரடியாக அவரால் உரையாட முடிந்தது. மக்களின் வாழ்வில் போர் உண்டாக்கிய பாதிப்பை அப்பட்டமாக வெளிக்கொண்டுவர இதுவே அவருக்கு உதவியது.
இதன் மூலம் நிகழும் சம்பவங்களோடு வரலாற்றையும் இணைத்து அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது அவருடைய எழுத்து. இதனால் மத்தியக் கிழக்கில் இருந்து எழுதிய மற்ற செய்தியாளரைவிடவும் அவர் எழுதிய செய்திகள் தனிக் கவனம் பெற்றன.
குண்டு துளைத்தும் தளராத மனம்
ஷடீட் ஒரு சாகச விரும்பி இல்லை. எனினும், அவருடைய இதழியல் வாழ்வு முழுக்க சாகசங்கள் நிரம்பியதாகத்தான் இருந்தது. ‘பாஸ்டன் குளோப்’ நிருபராக மார்ச் 2003இல் இஸ்ரேலின் ரமல்லாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய ராணுவப் படையினரால் சுடப்பட்டார்.
இடது தோள்பட்டையில் பாய்ந்த குண்டு துளைத்து, மறுபக்கம் வெளிவந்தது. ‘அவர்கள் என் தலைக்குக் குறி வைத்திருக்க வேண்டும்; என்னுடைய குறிப்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததால், தவறிவிட்டது என்று நினைக்கிறேன்’ என்று இந்தத் தாக்குதல் குறித்து ஷடீட் கூறினார். குண்டடிபட்டிருந்தபோதும், பாலஸ்தீன மருத்துவருக்கும் இஸ்ரேலிய படைவீரர் ஒருவருக்கும் அன்றைய தினம் நிகழ்ந்த வாக்குவாதத்தைச் செய்தியாக்க தன்னுடைய ஆசிரியரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
இருமுறை புலிட்சர்
வாஷிங்டன் போஸ்ட் நிருபராக ஈராக் போரின் அவலங்களை உலகுக்கு எடுத்து சொன்ன ஷடீடுக்கு, 2004இல் சர்வதேச செய்தி வழங்கலுக்கான (International Reporting) புலிட்சர் விருது வழங்கப்பட்டது; அதே வாஷிங்டன் போஸ்ட்-க்காக 2009இல் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் குறித்தும், அந்நாட்டு மக்களும் தலைவர்களும் போரின் விளைவுகளோடு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பது குறித்த நேரடி செய்திகளை வழங்கியதற்காக 2010இல் இரண்டாவது முறையாக சர்வதேச செய்தி வழங்கலுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
16 மார்ச் 2011இல் லிபியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஷடீட் உட்பட நான்கு செய்தியாளர்கள், அவர்களுடைய ஓட்டுநர் ஆகியோர் லிபிய அதிபராக இருந்த மம்மர் கடாஃபி படையினரால் கடத்தப்பட்டனர். ஓட்டுநர் கொல்லப்பட்டு, நால்வரும் அச்சுறுத்தலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
வாழ்நாளெல்லாம் களத்திலிருந்து செய்தி வழங்கிய ஷடீட், தலைசிறந்த போர் செய்தியாளராக சமகாலத்தவர்களால் மதிப்பிடப்பட்டார். லெபனானில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டைச் சீர்ப்படுத்தி தன் மனைவி குழந்தைகளுடன் அங்கு வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமான நிகழ்ந்த ஷடீடின் மரணம் அவரது குடும்பத்திற்கும், இதழியலுக்கும் பெரும் இழப்பு. இறப்பின்போது ஆண்டனியின் வயது 43 மட்டுமே.
அவர் இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், மத்தியக் கிழக்கில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஆண்டனியின் இல்லாமை மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள்; அது மத்தியக் கிழக்கில் மட்டும் இல்லை என்பது என்னுடைய கருத்து!
[‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் 02 அக்டோபர் 2018 அன்று வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்]
ஆண்டனியின் இறப்பு குறித்து ‘தி இந்து’வில் வெளியாகி இருந்த செய்தியில் இருந்தே அவரைப் பற்றி முதன்முறையாக (2012) அறிந்தேன். பத்தாம் வகுப்பில் இருந்த என்னுள், இதழியல் கனவு அப்போதுதான் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆண்டனியின் இறப்பு என்னை மிகத் தீவிரமாக பாதித்துவிட்டது என்பதை அப்போது நான் உணரவில்லை. ஆனால், அவர் என்னை இயக்கும் சக்தியானார். தொடர்ந்து அவர் குறித்த செய்திகளையும், அவர் எழுதிய செய்திகளையும் சேகரித்து வாசிக்கத் தொடங்கினேன்; கூடவே அவருடைய புகைப்படங்களையும் காணொளிகளையும். மத்திய கிழக்கு என்கிற பிரதேசம் மீது எனக்கு ஏற்கெனவே இருந்த மோகத்தோடு ஆண்டனியின் ‘இருப்பும்’ என்னுடைய இதழியல் கனவை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிரத்தை வழங்கின. இத்தனை ஆண்டுகளில் அவர் எழுதியவை, அவரைப் பற்றி எழுதப்பட்டவை என (இணையத்தில் உள்ள) அநேகமாக அனைத்தையும் சேகரித்து, வாசித்துவிட்டேன். அவருடைய புகைப்படங்களைத் தொகுத்து என் வலைத்தளத்தில் வெளியிட அது ஆண்டனியின் தாயாரிடம் இருந்து ஒரு கடிதத்தை எனக்குக் கொண்டுவந்தது. ஆண்டனியின் எழுத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் American University of Beirtutஇல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய திட்டங்களில் ஒன்று; இதையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதும்.
சில இணைப்புகள்:
ஆண்டனி ஷடீட்-இன் நூல்கள்: