‘தமிழ்வெளி’ — காலாண்டிதழ்
தமிழ்வெளி பதிப்பகத்திலிருந்து ‘தமிழ்வெளி’ என்ற பெயரில் இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் காலாண்டிதழின் இரண்டாவது இதழ் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘’68 தலைமுறை’ அல்லது ‘போலிஷ் புத்தலை’ என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் முன்னணிக் கவிஞராகவும் போலந்தின் சமகாலக் கவிகளில் முதன்மையானவராகவும் கருதப்பட்ட ஆடம் ஜகஜேவ்ஸ்கி (Adam Zagajewski) கடந்த மார்ச் 21 அன்று காலமானதையொட்டி, அவரது படைப்புகள் இந்த இதழில் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றன; தன்னுடைய குழந்தைப் பருவம், ப்ராட்ஸ்கி, புலம்பெயர்தலின் வலி, எதிர்காலம் ஆகியவை சார்ந்து ஜகஜேவ்ஸ்கியின் விரிவான நேர்காணல் ஒன்றின் மொழிபெயர்ப்பு, ‘கன்னட சினிமாவின் புதிய அலையின் குறிப்பிடத்தக்க பிரதிநிதி’யான கிரீஷ் காசரவள்ளியின் நீண்ட நேர்காணல், ஓவியர் லோகு உலகநாதனின் ஓவிய உலகுக்கு ஓர் வழிகாட்டியாக அவருடனான நேர்காணல் என இந்த மூன்று முக்கிய நேர்காணல்களும் இதழுக்குக் கனம் சேர்க்கின்றன. நூல் மதிப்புரைகள் கவிதை, அபுனைவு, ஆங்கில நூல் என மூன்று தலைப்புகளில் வெளியாகியிருக்கின்றன. செக் நாட்டு எழுத்தாளரான Michal Ajvaz-வின் சிறுகதை, bell hooks-இன் கவிதைகள் என மொழிபெயர்புகள் கவனம் ஈர்க்கின்றன. ‘ஆழ்கடல் அரசியல்’ என்ற தலைப்பில் சூழலியல் பேசும் கட்டுரை இடம்பெற்றிருப்பது இதழை contemporaryஆக நிறுத்துகிறது.
தொடர்புக்கு: +91 909 400 5600
கனலி — அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்
கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம், 14-வது இதழை வெளியிட்டிருக்கிறது. இந்த இதழின் சிறப்பம்சமாக, மொழிபெயர்ப்புகளில் அமெரிக்க இலக்கியத்தின் சாதனையாளர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. Gina Berriault, Raymond Carver, James Baldwin, Don DeLillo, Charlotte Perkins Gilman, Shirley Jackson ஆகியோரின் சிறுகதைகள், Mary Oliver-இன் கவிதைகள், Paul Hoover-இன் கட்டுரை என மிகச் சிறந்த தொகுப்பாக அது வெளிவந்திருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற தொடரில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார்; ஜெயமோகனின் ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’, வண்ணநிலவனின் ‘கவிதை: அன்று முதல் இன்றுவரை’, மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனின் ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்’ ஆகிய தொடர்களும் கவனிக்கத்தக்கவை. லலிதா ராம் எடுத்து, இந்த இதழில் முதன்முறையாக வெளியாகும் விதுஷி சுகுணா புருஷோத்தமனின் நேர்காணல் தவறவிடக்கூடாத ஒன்று. சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றோடு முக்கியமான நூல்களின் விமர்சனங்களும் இந்த இதழில் வெளியாகியிருக்கின்றன.
இதழை வாசிக்க: http://kanali.in/2021/04/
ஹம்போல்ட் (Humboldt): அவர் நேசித்த இயற்கை
சமீபத்தில் வெளியாகி கவனம்பெற்ற ‘இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா’ நூலின் ஆசிரியர், ஆய்வாளர் ஹேமபிரபாவின் புதிய மின்னூல் ‘ஹம்போல்ட்: அவர் நேசித்த இயற்கை’. ஹம்போல்ட் யார்? 250 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அவரை நினைவு வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? - போன்றவற்றை விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நாளை (25-04-2021) வரை அமேசானில் இந்த நூலை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B092SQ9XD9
இந்த நூலைப் பற்றி எழுத்தாளர் கமலாலயனின் குறிப்பு:
அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவரான ஹேமபிரபா கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், பிற படைப்புகளை எழுதி வருகிறார். கொரானா பரவத் தொடங்கிய சமயத்தில் அது குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் எளிமையும், தெளிவும் மிக்கவை. மிக மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்து இவருடையது.
ஹம்போல்டின் சாதனைகள் குறித்து இச்சிறு நூலில் வாசகர் மனதில் தைக்கும் வண்ணம் நறுக்குத் தெறித்தாற் போன்ற செறிவான நடையில் எழுதியுள்ளார் ஹேமபிரபா. இதற்கு மிக அற்புதமான மேலட்டையும், உள் ஓவியங்களையும் வரைந்து தந்துள்ள ஓவியர் செந்திலுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். இவற்றைப் பார்த்தவுடன், புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் உயிர்க்களை ததும்பும் ஓவியங்கள் இவை என உணர முடியும்.
'ஓங்கில் கூட்டம்' அமைப்பு, ஹம்போல்ட் குறித்த மேற்கண்ட கட்டுரையை மின் நூலாக இப்போது வெளியிடுகிறது. மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டிய சிறந்த கட்டுரைகளை, அறிவியல்-சமூகம்-குழந்தை இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் சிறுசிறு மின் நூல்களின் வடிவில் சிறப்பான ஓவியங்களுடன் வெளிக்கொணர வேண்டும் என்பது ஓங்கில் கூட்டத்தின் கனவு. நல்ல கனவுகள் மெய்ப்பட வேண்டுமென விரும்புவது மட்டும் போதாதல்லவா? நாம் அனைவரும் இவற்றைப் படித்தும், பிறருக்கு அறிமுகம் செய்தும் கை கொடுப்போம்!