கேள்வி: வெகுஜனப் பத்திரிகையின் லக்ஷணங்கள் எவை என்று நம்மால் வரையறுக்க முடியுமா?
(ஞாநி) என் பதில்: விரிவாக பதில் சொல்லவேண்டிய கேள்வி; எனினும் சுருக்கமாக. என் லட்சிய வெகுஜன பத்திரிகை இப்படித்தான் இருக்கும்: வெகுஜனங்களின் விருப்பத்தில், புழக்கத்தில் இருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் அக்கறை காட்டவேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் அங்கீகரிக்கவேண்டிய பொதுப் புத்தி சிக்கலில் சிக்கக்கூடாது. பொதுப் புத்தியின் சிக்கலை பொதுப் புத்திக்கே எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுடைய அக்கறைக்கு வராத ஆனால் வரவேண்டியவற்றை அடையாளம் காட்டவேண்டும். ஆனால் ஒரு சில வருட வாசிப்புப் பழக்கம் மட்டுமே உள்ள எவருக்கும் எதையும் புரியச் செய்யவைக்கும் மொழி இருக்கவேண்டும். விஷயங்களைக் கொண்டாடவேண்டும்; நபர்களை அல்ல. விஷயங்களை விமர்சிக்க வேண்டும்; நபர்களை அல்ல. வாசகரை ப்ளஷர் காரில் வழ வழ சாலையில் அழைத்துப் போவதல்ல வெகுஜன இதழின் வேலை. வாசகரோடு கை கோர்த்து கரடுமுரடான சாலையில் அதன் சுமை தெரியாமல் சம்பாஷித்தபடி உற்சாகமாக கடினமான இலக்குகள் நோக்கி கூட்டுப் பயணம் அழைத்துச் செல்வதுதான் வெகுஜன இதழின் வேலை. இதுவே என் பார்வை.
இது ஒன்றும் பேராசை அல்ல. விகடன், குமுதம், குங்குமம், கல்கி முதலான இதழ்களிலேயே இதற்குத் தேவையான அம்சங்கள் எப்போதும் இருந்துவந்திருக்கின்றன. ஆனால் வணிக நோக்கம் என்ற காரணத்துக்காகவும் சமூகத்தின் அரசியல், கலாசார எஸ்டப்ளிஷ்மெண்ட்டுகளை (அதிகார மையங்களை) பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பயத்தினாலும், வாசகர்களை அடுத்த படிக்கு அனுப்பி வைக்கும் வேலையைச் செய்தால் நம்முடைய இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்ற அர்த்தமற்ற அச்சத்திலும் ஒரு ஃபார்முலாவுக்குள் முடங்கிப் போயிருக்கிறார்கள். காலப் போக்கில் இதே பார்வையுடையவர்களையே இதழாளர்களாக தயாரித்து உருவாக்கிக் கொள்வதால், தேக்கம் அதிகரிக்கிறது.
இது சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஞாநி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய குறிப்பு. ஒப்புநோக்க நிலைமை இன்று மிக மோசமாக இருக்கிறது. காட்சி ஊடகங்களின் பெருக்கமும், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் முறைப்படுத்தப்படாத பயன்பாடும் தமிழக வெகுசன ஊடகங்களின் தரத்தைத் தாழச் செய்திருக்கின்றன. இதற்கான மிகச் சமீபத்திய உதாரணங்கள் குறித்து மனுஷ்ய புத்திரன் எழுதியிருக்கும் இப்பதிவுகளை வாசிக்கலாம்.
கோவிட்-19 பரவலால் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழக ஊடகங்கள், குறிப்பாக அச்சு ஊடகங்கள், நீண்ட காலத்தில் மிகப் பெரிய பின்விளைவுகளைச் சந்திக்கக் காத்திருக்கின்றன. கொரோனா பரவல் உச்சம் பெறத் தொடங்கிய மே-ஜூன் மாதங்களில் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான பணி வெட்டுகள், நிலைமை இப்போது ஓரளவு சீரடையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படவில்லை; சில அலுவலகங்கள்கூட இன்னும் முழுமையாகத் திறக்கவில்லை.
ஏற்கெனவே வணிக நோக்கை மையப்படுத்தியே செயல்பட்டுக் கொண்டிருந்த பெரும்பான்மை ஊடகங்கள், கோவிட் கொடுத்த அடியில் இருந்து மீள, குறைந்தபட்சம் கோவிட்-க்கு முந்தைய நிலைக்குயைத் தக்கவைத்துக் கொள்ள, முழுமுற்றாக வணிகப் பாதையையே தேர்வுசெய்யும்.
பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை வடிவமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பைக் கொண்டிக்கும் வெகுசன ஊடகங்களின் இத்தகைய போக்கு, சமூகம் இன்றிருக்கும் நிலையில் ஆரோக்கியம் தெரிவிப்பதாக இல்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் அஜெண்டாவைப் பரப்ப அரசியல் கட்சிகள் தத்தம் ஊடகங்களை முழுவீச்சில் இறக்கிவிட்டிருக்கின்றன; கட்சி சாரா ஊடகங்களும் அவர்களுக்குரிய அஜெண்டாவில் இருந்து செய்தி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சராசரி நபர் ஒருவர் எந்தச் செய்தியை, எந்த நம்பிக்கையோடு அணுகுவது?
தமிழக ஊடகங்களில் முதன்மைப் பொறுப்பில் இருந்த/ இருக்கும் இதழாளர்கள், ஊடகவியலாளர்கள் பொதுவில் தெரிந்தும் தெரியாமலும் நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர். அவர்களில் சிலர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதையும், சிலர் அவர்களாகவே பணி விலகியதையும் கடந்த மாதங்களில் நாம் பார்த்துவந்திருக்கிறோம். இது இளம் இதழாளர்களிடையே மிகுந்த அவநம்பிக்கையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் இதழியில் அடுத்த கட்ட நகர்வுக்கும், நீண்ட கால வளர்ச்சிக்கும் இதுவொரு அச்சுறுத்தல்.
இந்தப் பின்னணியில் தான் ஞாநி போன்ற இதழாளர்கள்-செயற்பாட்டாளர்களின் (இதழியல் செயற்பாட்டாளர்கள்) தேவை இன்னும் அதிகமாகிறது. இன்றைய முன்னணி இதழாளர்கள், ஊடகவியலாளர்கள் தங்கள் எல்லை, அதிகாரத்துக்குட்பட்டு மிகச் சிறந்த பணியை மேற்கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் வெகுசன ஊடகங்களின் போக்கும், வணிக-மைய செயல்பாடும் அவற்றை மீறி பாதகமான விளைவுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
ஞாநியின் மேற்கண்ட குறிப்புக்கு வந்த எதிர்வினைகளுள் ஒன்று: முதலில் கான்க்ரீக்டாக சென்று கொண்டிருந்த உங்கள் பதில், பிறகு அப்ஸ்ட்ராக்டாக மாறிவிட்டது.
ஒன்று நிகழாதவரை இப்படியான கண்ணோட்டத்திலே அணுகப்படும் (விதிவிலக்குகள் உண்டு). என்றபோதிலும், ஞாநி குறிப்பிட்டிருக்கும் அடிப்படையான விஷயங்களை மிக எளிதாக தமிழகத்தின் ஊடகப் பெருநிறுவனங்களால் நிறைவேற்றிட முடியும். ஆனால், அதை அவர்கள் வணிகத்துக்கு முன்பாக வைப்பார்களாக என்பதே கேள்வி!
15 ஜனவரி 2018 அன்று ஞாநி சங்கரன் காலமானார். இதழியல் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்ட பள்ளிக் காலம்தொட்டே ஞாநியின் பெயரை நான் அறிவேன். என் அப்பாவின் நண்பர் கார்த்திகேயன் ஞாநியின் நண்பர்களில் ஒருவர். பள்ளிக் காலம் தொட்டே ஞாநியிடம் பேசச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருப்பார். நான் நேரில் சந்தித்துதான் பேசுவேன் என்று அவரிடம் தவிர்த்து வந்தேன். ஆனால் ஒருநாள் திடீரென்று ஞாநிக்கு போன் போட்டு என்னிடம் கையில் கொடுத்துவிட்டார். மிகுந்த அன்புடனும், மரியாதயுடனும் ஞாநி பேசினார். என்னுடைய இதழியல் ஆர்வம் பற்றிச் சொன்னேன். சில அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கினார். சென்னை வரும்போது சந்திக்கலாம் என்றார். அதன் பிறகு எத்தனையோ முறை சென்னை வந்து சென்றாலும் அவரைச் சந்தித்திருக்கவில்லை. ஆனால் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். 2018 ஜனவரியில் சென்னையில் இருந்தேன். நண்பர் கார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு ஞாநி காலமாகிவிட்டதாக. மிகுந்த துயரமும் குற்ற உணர்ச்சியும் அடைந்தேன். அவரது உடலைச் சென்று முதலும் கடைசியுமாக ஒருமுறை பார்க்க மனம் எண்ணியது; வேண்டாம் என்றும் தோன்றியது. ஆனால் உடனே மனம் மாறியது. பிறகு சட்டென பஸ் பிடித்து கே.கே. நகர் சென்றேன். ஞாநி அவர்களுக்கு என்னுடைய இறுதி அஞ்சலியைச் செலுத்திவிட்டு அன்று முழுக்க அங்கேயே இருந்தேன். ஞாநி விட்டுச் சென்ற இடம் இன்றும் அப்படியே இருக்கிறது, மேற்கண்ட குறிப்பைப் போன்ற அவரது பணிகளும் அப்படியே நிற்கின்றன. இன்று நமக்கு அதிகம் ஞாநிகள் தேவை.
ஞாநி பற்றி ஜென் ராம்: அன்புள்ள ஞாநி
இதழாளர் ச. கோபாலகிருஷணன் ஞாநிக்கு எழுதிய மிகச் சிறந்த அஞ்சலி: ‘ஞாநி என்னும் ஞானத் தந்தை’
எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஞாநியின் முக்கியமான உரை: TEDxSalem - Gnani Sankaran - Ethics an inseparable part of Life