நேர்காணல்: புதுவை இளவேனில்
தமிழ் எழுத்தாளர்களை ஒளிப்படங்களில் ஆவணப்படுத்திய ஒளிப்படக் கலைஞர், கவிஞர் புதுவை இளவேனில் புதுவைப் பல்கலை.யின் சமுதாய வானொலி ‘புதுவை வாணி’க்கு அளித்த நேர்காணல்
சங்கர் என்ற இயற்பெயர் எப்போது புதுவை இளவேனில் ஆனது?
கவிதை எழுதுபவர்கள் தங்கள் பெயரை மாற்றி புனைப்பெயரில் எழுதும் வழக்கம் உண்டு. தமிழில் எல்லோருக்கும் இது நடந்திருக்கிறது, பாரதியைத் தவிர. பாரதி இங்கே புதுச்சேரியில் இருக்கும்பொழுது பாரதிதாசன் தன் பெயரை மாற்றிக் கொண்டார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கவிதை எழுத ஆரம்பித்தேன். பாரதிதாசன் பெயரை மாற்றிக் கொண்டதைப் போல நானும் மாற்றிக் கொண்டேன். நான் பிறந்த பிப்ரவரி மாதம் இளவேனில் காலம். காலத்தின் பெயரால் அந்தக் காலத்துக்கு பொருத்தமானவனாக இளவேனில் என்று வைத்துக் கொண்டேன். ஏற்கனவே ஒரு இளவேனில் இருந்ததனால் என்னுடைய ஊர்ப் பெயரையும் சேர்த்து புதுவை இளவேனில் என்று வைத்துக் கொண்டேன். கேரளத்தில் ஊர்ப்பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு.
புதுவை இளவேனில் என்றால் பெரும்பாலானோர் ஒளிப்படக் கலைஞராகவே அறிவார்கள். அப்படி இருக்கும்போது, கவிதை எழுதுவதற்காக பெயரை மாற்றிக் கொண்டதாக சொல்கிறீர்கள். ஒளிப்படத் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?
நான் ஏதோ ஒன்று ஆகவேண்டும் என்று மட்டும் முடிவு செய்திருந்தேன். ஏதோ ஒன்று ஆகவேண்டும் என்று தெரியும், ஆனால் என்னவென்று தெரியாமல் இருந்தது. இலாஸ்பேட்டை நாவலர் பள்ளியில் படிக்கும்போது எனக்கு அமைந்த ஆசிரியர்கள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். அவர்களுடைய தூண்டுதலின் பெயரால் எனக்கு வழி திறந்தது. அப்போது ஓவியம் வரைந்திருக்கிறேன், கவிதை எழுதியிருக்கிறேன் இப்படியாக என்னுடைய பார்வை வளர்ந்தது. சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு வெளியில் வரும்போது எழுத்தாளர்களுக்கு ஒளிப்படங்களே இல்லாமல் இருந்தது. ஒளிப்படங்கள். நான் புகைப்படம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. நான் தேடித்தேடி வாசித்த தி. ஜானகிராமனில் இருந்து பல ஆளுமைகளுக்குப் பாஸ்போர்ட் சைஸில் தான் ஒளிப்படங்கள் இருந்தன. இப்படி இருக்கக் கூடாது என்று நான் நினைத்தேன்.
தமிழின் சிறந்த நாவலாசிரியராகக் கருதப்படும் ப. சிங்காரத்தின் ஒரே ஒரு படம் தான் நமக்கு கிடைக்கிறது…
ஆம். நான் ஒன்பதாவது படிக்கும்போதே சிங்காரத்தை படித்திருந்தேன். பாண்டிச்சேரி ரோமன் ரோலந்து நூலகத்தில் முதல் புத்தகமாக நான் எடுத்து வாசிப்பேன். புயலிலே ஒரு தோணியை நான் தேடி எடுக்கும்போது அந்த புத்தகத்தை யாருமே எடுத்திருக்க மாட்டார்கள். நிறைய புத்தகங்களில் என்னுடைய நூலக உறுப்பினர் எண் 18855 இருக்கும். அந்தப் புத்தகம் இன்றும் இருந்தால் அந்த எண் இருக்கும். ஒரு எழுத்தாளர் தான் காலத்தைக் கடத்துகிறார். அப்போது தான் எழுத்தாளர்களுக்கு ஒளிப்படங்களே இல்லையே ஏன் இவர்களை நாம் ஆவணப்படுத்தக் கூடாது என்று தோன்றியது.
நீங்கள் வந்த புதிதில் இந்தத் துறை எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது?
நான் எழுத்தாளர்களை ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்த காலத்தில் யாருமே இதைச் செய்யவில்லை. ஒரு புதிய முயற்சியாகவே முன்னெடுத்தேன். ஒளிப்படத்துறையில் ஆவணப்படுத்துதலில் முன்னோடி என்று என்னை இப்போது சொல்கிறார்கள். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது. பரவலாக்கப்படும்போதே ஒளிப்படம் செழுமையடைகிறது. இன்றைக்கு ஒரு ஒளிப்படத்தை சிறந்த படமாக்க முடியும். காரணம், சிறிய போனில் கூட ஒளிப்படம் எடுக்க இயலும். இந்த நிலையில் தான் யார் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
கடக்க வேண்டிய இரவு என்பது உங்களுடைய கவிதைத் தொகுப்பு. தமிழிலக்கியத்திலும், எழுத்தாளர்களின் நகரமாகிய புதுவையிலும் உங்களை எழுதத் தூண்டிய எழுத்தாளர்கள் யார்?
பாரதியைத் தவிர வேறு யாருமே ஒரு மனிதனை பாதித்துவிட முடியாது. அவன் எனக்கே ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறான், “இருள் என்பது குறைந்த ஒளி”; “எனக்கு முன்னோடி யாரும் இல்லை” என்று சி. மணி சொல்வார். பாரதியைத் தவிர யாரையும் என்னால் சொல்ல இயலவில்லை. பாரதி எல்லா காலங்களுக்கும் பொருந்துபவர். பாரதி தான் தூண்டுகிறான்.
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்திருக்கிறீர்கள். அவருடனான உங்களை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
எல்லா எழுத்தாளர்களோடும் பழகியிருக்கிறேன். புதுவையிலேயே இருப்பதனால் கி.ரா.வுடன் கூடுதலாகப் பழகியிருக்கிறேன். கி.ராவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொல்லி எல்லோரும் கேட்பார்கள். என்னால் முடியாது. என் அம்மாவைப் பற்றி நான் புத்தகம் எழுத முடியாதில்லையா? அது மாதிரி தான் கி.ரா. எனக்கு!
எந்த எழுத்தாளரைப் படம் எடுத்தது மறக்க முடியாத அனுபவம்?
சுந்தர ராமசாமி தான். அவருடைய எழுத்துக்களை வாசிக்கும்போதும் அவரை சந்திக்கும் முன்பும் அவரை வேறொரு மனிதராக நினைத்திருந்தேன். ஆனால், அவர் எழுத்தில் என்ன கண்டேனோ அதையே அவரிடம் கண்டேன். என் அனுபவத்தில் பல எழுத்தாளர்கள் அப்படி கிடையாது. இதை நான் குறையாக பதிவு செய்ய முடியாது; ஆனால், உண்மை. கவிதையில் எப்படி பாரதியோ ஒளிப்படக்கலையில் சு. ரா., தான்.
நீங்கள் எடுத்த எழுத்தாளர்களின் ஒளிப்படங்களை வைத்து 2017ஆம் ஆண்டு நாட்காட்டி ஒன்றைக் கொண்டு வந்தீர்கள். அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?
அந்த நாட்காட்டியில் மொத்தம் பன்னிரண்டு எழுத்தாளர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர்கூட தன்னுடைய ஒளிப்படம் வந்ததற்கு நன்றியோ பாராட்டோ சொல்லவில்லை. அதற்காக நான் வருத்தம் கொண்டதும் இல்லை. என்னுடைய வேலை, நான் பதிவு செய்கிறேன். அவர்கள் மீது நான் அவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறேன். என்னுடைய செலவில் நானூறு பிரதிகள் போடப்பட்ட அந்த நாட்காட்டிகள் ஒளிப்படத்தைவிட அதிகம் செலவு பிடித்தது. அவர்களுடைய எழுத்து என்னை ஏதோ செய்கிறது. அதற்கு இது போன்ற முயற்சிகள் தான் என்னுடைய கைம்மாறு.
இந்த ஆண்டு அதுபோன்ற முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதா?
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். பாரதி எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியவர். அதனால், இந்த ஆண்டு பாரதி படங்களைக் கொண்டு வந்தோன்.
இப்போது எந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். எதிர்கால திட்டங்கள் குறித்து சொல்லுங்கள்.
யாருக்குமே செய்ய முடியாத விஷயங்களை கி.ரா.விற்குச் செய்திருக்கிறேன். அவருடைய ஒளிப்படங்களை வைத்துக் கண்காட்சி நடத்தி இருக்கிறேன், அதையே புத்தகமாக கொண்டு வந்திருக்கிறேன், கி.ரா. குறித்து இரண்டு ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவரோடு பழகிய நாட்களில் எடுத்த ஒளிப்படங்களை வைத்து ஒளிப்படத்துக்கும் அவருக்குமான உறவைப் பதிவுசெய்து தற்போது புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். தமிழிலேயே புதுமையான முயற்சி இது. 1930-களிலேயே கோவில்பட்டிக்கு வந்த மொபைல் ஸ்டுடியோ போன்ற பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
எழுத்துத் துறையில் உங்கள் அடுத்த இலக்கு?
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறோம். இலக்கு வைத்துக் கொண்டு ஒரு படைப்பாளி வர முடியாது. இதெல்லாம் எழுதப்போகிறேன் என்று சொல்லலாம். அது ஒரு சூழல். எப்படி உருவாகும் என்று நமக்கே தெரியாது. பயணத்தில் இருக்கும்போது ஒரு ஃபோட்டோ கிடைப்பது மாதிரி தான்.
பயணம் செல்வதில் அதீத ஈடுபாடு உள்ளவர் நீங்கள். தனுஷ்கோடி மீது அப்படியென்ன தனிப் பிரியம்?
தனுஷ்கோடியை பார்த்தவர்கள் இப்படிக் கேட்கமாட்டார்கள். அது ஒரு தியான பூமி. தனிமையான பூமி. சில சமயங்களில் இரவு கிளம்பிச் சென்று மறுநாள் காலை தனுஷ்கோடி அடைந்து அரைமணி நேரம் மட்டுமே அங்கே இருந்துவிட்டு வந்த அனுபவங்கள் உண்டு. சாப்பிடக் கூட தோன்றாது. அந்த பூமியில் ஏதோ ஈர்ப்பு, சக்தி இருக்கிறது!
இத்துறையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் என்னென்ன?
நிறைய இருக்கிறது. நிறைய பேர் வர வேண்டும். இந்தத் துறை மட்டும் இல்லாது தமிழில் ஒவ்வொரு துறையிலும் பெரும் ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை, அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும். குடும்பத்திலும் கூட ஓர் ஆளுமை உண்டு. நான் எப்போதும் வலியுறுத்துகிற விஷயம், உங்கள் குடும்பப் படங்களைச் சேகரியுங்கள். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தை பார்க்கும்போது தான் அதன் மதிப்பு தெரியும். அது ஒரு வரலாறு. ஒன்று கடந்து போகும்போது தான் அதன் மதிப்பு நமக்கு தெரியும்.
ஆழ்ந்த வாசிப்பும், பார்வையும் அவசியம் தேவை. பத்து ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு விஷயம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வார்களே ஒழிய வழக்கத்தில் இருக்காது. அந்த நிலை வரக்கூடாது. தொடர்ந்து இயங்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் கிடைத்த குறிப்பிடத்தகுந்த பாராட்டு?
பாராட்டுக்களை நான் எதிர்பார்ப்பதில்லை. பார்க்கும்போது நண்பர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பாராட்டை ஏற்றுக் கொள்வதென்பது நல்ல பக்குவம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அது தலைக்கு ஏறிவிட்டால் அடுத்து வேலை செய்யும்போது என்னால் தரையில் படுத்துக் கொண்டு படங்கள் எடுக்க முடியாது. ஒரு ஒளிப்படக்கலைஞன் படுத்துக் கொண்டும் படம் எடுக்கும் சூழல் வரும், இல்லையேல் ஒரு வைட் ஆங்கிள் படத்தில் எழுத்தாளரின் பிரமிப்பை எப்படிக் காட்ட முடியும்? பாராட்டை ஏற்கும் போது ஓரடி கீழே போகிறோம். ஒவ்வொரு பாராட்டும் ஒரு அடி கீழே இறக்கும்.
இத்தனை ஆண்டுகால உழைப்பில் மனநிறைவாக உணர்கிறீர்களா?
நிச்சயமாக! எழுத்தாளர்களை படமெடுக்க ஆரம்பித்த பிறகு தான் நல்ல நிலைக்கு வந்தேன், பொருளாதார ரீதியிலும் நல்ல நிலையை எட்டி உள்ளேன்.
வானொலி நேர்காணலின் ஒலிக்கோப்பு:
https://audiomack.com/song/madrasaficionado/pudhuvai-ilavenil-interview
ஒளிப்பட உதவி: புதுவை இளவேனில் ஃபேஸ்புக்
முன்கதைச் சுருக்கம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பயின்றுகொண்டிருந்தபோது, வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பில் பல்கலை.யின் சமுதாய வானொலி ‘புதுவை வாணி’க்காக துறைசார் வல்லுநர் ஒருவரைப் நேர்காணல் செய்ய வேண்டும் என்பது படிப்புச் செயல்பாட்டின் ஓர் அங்கம். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில் பார்த்து அறிமுகமாகியிருந்த ஒளிப்படக்கலைஞர் புதுவை இளவேனிலை நேர்காணல் செய்யவிரும்பி தொடர்புகொண்டேன். தன்னுடைய பணிச்சூழலுக்கு மத்தியில் நேர்காணலுக்கான நேரத்தை வழங்கி உதவினார்; வானொலி ஊடகத்தில் நான் மேற்கொண்ட முதல் நேர்காணல் இது. நேர்காணல் நன்றாக வந்திருப்பதாக வகுப்பில் பேராசிரியர் பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக நேர்காணலின் எழுத்து வடிவை என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன்.
முதுபெரும் எழுத்தாளர் கி.ரா., அவர்கள் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமையைத் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் புதுவை இளவேனிலுக்கும் எழுதிவைத்திருப்பது சமீபத்தில் மிகுந்த கவனம்பெற்றது; இந்தப் பின்னணியில் என்னுடைய வலைத்தளத்தில் இருக்கும் அவரது நேர்காணல் சமீப நாட்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்றுவருகிறது. அந்த வகையில் புதுவை இளவேனிலின் நேர்காணல் இன்று வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.