வால்டர் கிராங்கைட், ஜென்ராம், செய்தி(கள்)த்தாள் வாசிப்பது எப்படி?
நாம் அதீதங்களின் யுகத்தில் வாழ்கிறோம். இன்றைக்கு எல்லாவற்றையும் போலவே செய்திகளையும் (தகவல்கள்) நாம் அதீதமாக எதிர்கொண்டிருக்கிறோம். சராசரி மனிதர் ஒருவர் உள்வாங்கிக் கொள்ளும் சாத்தியமே இல்லாத அளவுக்கான செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன. நம் அன்றாடத்தின் நெருக்கடியில், செய்திகளின் அளவும் கனமும் நம்மைத் திகைக்கச் செய்து, அவற்றிலிருந்து விலகிச் செல்லப் பணிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் நம் பார்வைக்கு வருவதில் தொடங்கி, தாமாகவே நம்மை வந்தடையும் செய்திகள் நாளொன்றின் முடிவில் நம்மை ஆயாசம் கொள்ளச் செய்கின்றன. குறிப்பிட்ட அளவு செய்திகளை நாம் எடுத்துக் கொள்ளும்போதும், அவற்றால் காரியமான விளைவுகள் ஏதும் நம்மில் ஏற்படுவதில்லை; அந்தச் சொற்பச் செய்திகளில் இருந்து உருப்படியான ஒரு புரிதலை, கருத்தை நம்மால் உருவாக்கிக் கொள்வதில்லை. பத்துக்கு எட்டு விஷயங்கள் குறித்த முழு அறியாமையிலேயே நாம் இருக்கிறோம்; மீதி இரண்டையும் அரைகுறையாகப் புரிந்துவைத்திருக்கிறோம்.
நிற்க.
மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம், செய்திகள் குறித்த ஜென்ராம் பார்வைகள் என்ற காணொளித் தொடர் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அன்றைய தினம் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் முக்கியமானவற்றைத் தொகுத்து, அவற்றைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களைச் சுருக்கமாக நம்மிடம் முன்வைக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தொகுத்து வழங்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்னும் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவரைப் பின்தொடர்பவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
இன்றைக்குச் செய்திகளைப் பெற்றுக்கொள்வதில் நமக்குள்ள நெருக்கடியில் மூத்த ஊடகவியலாளர்களின் இத்தகைய முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. எனினும் இவற்றை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு, நம் அன்றாடத்தில் தாக்கம் செலுத்தும் செய்திகளைக் கவனமாக பின்பற்றத் தொடங்க வேண்டும்.
கீழே நீங்கள் வாசிக்கவிருப்பது ஊடகப் பேராளுமை வால்டர் கிராங்கைட் எழுதிய ‘செய்தித்தாள் வாசிப்பது எப்படி’ (How To Read A Newspaper) என்ற புகழ்பெற்ற கட்டுரையின் மொழியாக்கம்.
வால்டர் க்ராங்கைட் (Walter Cronkite) அமெரிக்க ஒளிபரப்பு ஊடகத்தின் ‘தூண்’களில் ஒருவர். CBS Evening News-க்காக 19 ஆண்டுகள் (1962-1981) செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய க்ராங்கைட், ‘அங்கிள் வால்டர்’ என்றும் ‘[அமெரிக்காவின்] மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர்’ என்றும் போற்றப்பட்டார். க்ராங்கைட்டின் பிரமிக்கத்தக்க ஊடக வாழ்விலிருந்து இன்றைய ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன!
செய்தித்தாள் வாசிப்பது எப்படி?: வால்டர் கிராங்கைட்
நீங்கள் பெரும்பான்மையானவர்களைப் போன்றவர் என்றால் செய்திகளை இன்னும் தொலைக்காட்சியில் (இன்று சமூக வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம் - மொ.ர்) பார்த்துதான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்படித் தான் நம்மில் 65 சதவீதத்தினர் 100 சதவீத செய்திகளை - 24 நிமிட தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் ஒவ்வொரு மாலையும் தெரிந்து கொள்கிறோம்.
பிரச்சினை என்னவென்றால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று நிகழாதவரை, தொலைக்காட்சி செய்தியில் இருக்கும் நாங்கள், ஒவ்வொரு செய்திக்கும் - சிக்கலான, முக்கியமான ஒன்றுக்கும்கூட - சொற்பமான நேரத்தையே ஒதுக்க வேண்டியிருக்கிறது.
ஆக நாங்கள் உங்களுக்குக் கொண்டுவருவது முதல்பக்கத்தின் தலைப்புச் செய்திகளையே. முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் செய்தியின் அனைத்து கோணங்களையும், தலைப்புச் செய்தியைத் தாண்டி தெரிந்துகொள்ள நன்றாக எடிட் செய்யப்பட்ட முழுமையான செய்தித்தாள் ஒன்றை நீங்கள் வாசிக்க வேண்டும்.
ஒரு செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? டோரொதி க்ரீன் சொல்வதைப் போல், “[ஒன்றைத்] தெரிந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு அதுவே ஆபத்தாக வந்து முடியும்”. நான் இதை ஆமோதிக்கிறேன்.
செய்தியாளர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது; வாசகர்களாகிய உங்களுக்கும்தான். எங்களுடைய வேலை செய்தியை நேர்மையாகவும், துல்லியமாகவும், முழுமையாகவும் சொல்வது. உங்களுடைய வேலை தினந்தோறும் அந்தச் செய்திகளை அறிந்துகொள்வது.
CBS-இல் எட்வர்ட் ஆர். மர்ரோ-வின் அலுவலகச் சுவற்றில் காணப்படும் தோரோவின் இந்த வாசகத்தை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்: “ஒருவர் பேச மற்றவர் கேட்க என உண்மையைப் பேச இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள்”
இப்படித் தான் நான் செய்தித்தாளை எதிர்கொள்கிறேன். முதலில், 3 நிமிடங்கள் செய்திகளை மேலோட்டமாகப் பார்வையிடுவேன். விளையாட்டுச் செய்திகளுக்கோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணைக்கோ முதலில் செல்லத் தேவையில்லை. நீங்கள் அங்கு விரைவில் வந்தடைவீர்கள். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளை முதலில் பார்வையிடுவேன், படங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் வாசிப்பேன். இதையே ஒவ்வொரு பக்கமாக கடைசி பக்கம்வரை செய்வேன். அதன் பிறகே செய்தித்தாளை முழுமையாக வாசிக்கச் செல்வேன்.
செய்தித்தாளின் முதல்பக்கம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமே பல செய்திகளை உங்களுக்கு உணர்த்தும். அப்பக்கத்தில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்திக்கும் பிற செய்திகளுக்கும் அதன் வடிவம், எழுத்துரு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பத்திரிகையின் ஆசிரியர் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் மாவட்டத்தில் மழைப் பொழிவு இல்லை என்ற செய்தியைவிட வட மாநிலங்களில் தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது அப்போதைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக இருப்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
கடைகளில் செய்தித்தாள் மடித்து வைக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனித்திருக்கிறீர்களா? முதல் பக்கத்தின் மேல்பகுதியின் வலப்பக்கத்திலோ இடப்பக்கத்திலோ வெளியாகியிருக்கும் முதன்மைச் செய்தி (lead story) வெளியே தெரியும்படி வாசகர்களைக் கவரும் வண்ணம் காலம் காலமாக அப்படி மடித்து வைக்கப்பட்டு வருகிறது.
செய்தித்தாளில் வந்திருக்கும் எல்லா செய்திகளையும் படித்தாக வேண்டுமா? கண்டிப்பாக இல்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துவிட வேண்டும். ஏனென்றால் முதல் பார்வையில் முக்கியத்துவம் இல்லாததாகப்படும் செய்தி ஒன்று உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக பிற்பாடு அமையலாம்.
நல்ல செய்தித்தாள் ஒன்றில் வெளியாகும் செய்தி, செய்தியின் மூலப்பொருட்களான நான்கு அடிப்படையான அம்சங்களைக் கொண்டிருக்கும்: தகவல் (information), பின்னணி (background), செய்தியைப் பகுத்துக் கூறுதல் (analysis), மற்றும் பொருள்விளக்கம் (interpretation).
அமெரிக்க இதழியலின் முதல் விதி: “செய்திப் பத்திகள் (News columns) செய்திகளுக்கு மட்டுமானவை” என்பது. “செய்தி என்றால் என்ன? அது ஒரு தகவல். எது நல்ல செய்தி என்பதை உங்களால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். அது செய்தியை மட்டும் சொல்லும். நிகழ்வின் இரண்டு பக்கங்களை மட்டும் சொல்லி எந்தப் பக்கத்திலும் உங்களை சாய்த்துவிடாமல் இருக்கும்.
செய்தியில் உரிச்சொற்களுக்கும், வினை உரிச்சொற்களுக்கும் வேலையே கிடையாது. அவற்றைக் கொண்டு எழுதப்படும் செய்திகளால் அதுகுறித்த தவறான முடிவுகளையே வாசகர் இறுதியில் எட்டுவார்.
செய்தியை எழுதிய செய்தியாளர் யார் (by line), எழுதப்பட்டிருக்கும் இடம் (date line), (ஒருவேளை) செய்தி நிறுவனங்கள் (news agencies) அந்தச் செய்தியை வழங்கியிருந்தால் அவற்றையும் கவனித்து செய்தியை வாசியுங்கள். இவையெல்லாம் அந்தச் செய்தியின் முக்கியவத்துவத்தையும் அதன் உண்மைத்தன்மையையும் குறித்த மேலதிக முடிவுகளை எட்டுவதற்கு நமக்கு உதவும்.
ஒரு செய்தியை வாசிக்கும்போதே அதன் உண்மைத்தன்மை குறித்தும் நீங்கள் யோசித்துப் பழக வேண்டும். பெயர் குறிப்பிடப்படாமல் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை “யார் இதை சொல்லியிருப்பார்கள்?” என்று அதன் உண்மைத்தன்மை குறித்து சிந்திக்க வேண்டும். “பெயர் வெளியிட விரும்பாத அரசு உயர் அதிகாரி” ஒருவரின் கூற்று என்று எழுதப்பட்டிருக்கும் செய்தியை அதிக கவனத்துடன் நீங்கள் வாசிக்க வேண்டும். ஏனெனில் அது உண்மைச் செய்தியாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. யாரேனும் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காககூட அப்படி ஒரு செய்தியை எழுத நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம்.
போலவே ‘திருத்தங்கள்’ (corrections) என்ற பகுதியையும் நீங்கள் தொடர்ந்து கவனித்துவர வேண்டும். நேர்மையான செய்தித்தாள் என்பது வெளியான செய்திகளில் தவறு கண்டுபிடிக்கப்பட்டாலோ தகவல்களில் பிழை இருந்தாலோ உடனடியாக களையும்.
‘தலைகீழ் பிரமிட்’ என்ற பிரத்யேக வடிவத்தில் தான் செய்தியாளர்கள் செய்திகளை எழுதுகிறார்கள். அதாவது, முடிவில் ஆரம்பிப்பது, செய்தியின் இறுதியை முதலில் சொல்லி அதன் முக்கியமான விஷயங்களில் இருந்து ஆரம்பித்து பின்னணி தகவல்களுடன் செய்தியைக் கொண்டு செல்வது. இந்த தலைகீழ் பிரமிட் வடிவத்தைப் புரிந்துகொள்வது செய்தியை எளிதாக உள்வாங்கிக் கொள்ள உதவும்.
நன்றாக எழுதப்பட்ட செய்தியில், “யார்” (Who), “என்ன” (What), “எங்கு” (Where), “எப்போது” (When) மற்றும் “எப்படி” (How) ஆகிய விஷயங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். ஒரு செய்தியை விரிவாக அது “ஏன்” (Why) நடந்தது என்று பின்னணியுடன் விளக்கிக் கூறும் செய்தித்தாள்கள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. செய்தி பகுத்துக் கூறப்படுவதால் வாசகர்களால் அதை எளிதாக உள்வாங்கவும் முடியும்.
பகுப்பாய்வு (analysis) செய்யப்பட்டு எழுதப்படும் செய்தி சமயங்களில் செய்தியாளர்/கட்டுரையாளரின் சொந்தக் கருத்தைத் (opinion) தாங்கி நிற்கும். அத்தகைய கட்டுரைகள் பெரும்பாலும் அந்த செய்தி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்களால் எழுதப்படும். அவை விளக்கமாகவும் அதன் விளைவுகளையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும். நல்ல செய்தித்தாள் என்பது செய்தியில் தன் சொந்த எண்ணத்தை சேர்த்து எழுதாது. அந்த செய்தியின் மீதான பகுப்பாய்வு மற்றும் விளக்கம் சார்ந்து எழுதப்படும் சிறப்புக் கட்டுரைகள் தலையங்கத்தை (editorial) தாங்கி வரும் பக்கத்தின் எதிர்ப் பக்கத்தில் (opposite the editorial (op-ed)) பக்கத்தில் வெளியாகும்.
ஒரு செய்தியின் பகுப்பு மற்றும் விளக்கக் கட்டுரைகளை வாசிக்கும் முன்பு அந்த செய்தி குறித்த என்னுடைய சொந்த கருத்தை நான் உருவாக்கிக் கொண்டிருப்பேன். குறிப்பிட்ட அந்த விஷயங்களில் என்னுடைய சொந்த கருத்து என்ற ஒன்று உருவாகாதபோது தான் அதுகுறித்து எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று கட்டுரையாளர்கள் எனக்கு சொல்லித் தர அனுமதிப்பேன். ஏற்கெனவே ஒரு கருத்து எனக்கு உருவாகியிருக்கும் பட்சத்தில் மற்றவை எப்படி இருக்கின்றன என்றும் கவனிப்பேன்.
நான் தீர்க்கமாக நம்பி, செயல்படுத்திக் கொண்டிருக்கும் விஷயம் இது. உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய செய்தி ஒன்றை நீங்கள் வாசித்தால் அதுகுறித்த செயல்பாடொன்றை தொடங்குங்கள். அந்த விஷயம் குறித்து மேற்கொண்டு கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கடிதம் எழுதுங்கள். உங்கள் சுற்றப்புறத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து உங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிக்கு தொடர்ந்து கடிதம்கூட எழுதலாம்.
செய்திகளை விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்துகொள்ள செய்தி இதழ்களை (news magazines) வாசிக்கலாம். செய்தித்தாளில் விடுபட்ட விஷயங்கள் இதழ்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கும். வியட்நாம் யுத்தத்தின்போது செய்தித்தாள்களை வாசித்தவர்கள் அதுகுறித்த முழுமையான விஷயங்களை அறிந்துகொள்ள இயலவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். உண்மையில் அந்த நேரத்தில் வெளியான பல்வேறு செய்தி இதழ்களிலிருந்து அவர்கள் முழுமையான தகவல்களைத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.
செய்தித்தாள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசை ஒன்றையும் பின்தொடருங்கள். இன்றிரவே தொலைக்காட்சி செய்தி அலைவரிசை ஒன்றில் உங்களுக்கு விருப்பான ஒரு செய்தியைப் பாருங்கள். அதே செய்தியை செய்தித்தாளிலும் பாருங்கள். செய்தித்தாளில் அது எப்படி எழுதப்படுகிறது என்று இடையறாது பின்தொடருங்கள்.
செய்தித்தாள் வாசிப்பு குறித்த சில அடிப்படை விஷயங்களை இப்போது நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். வாசிக்கத் தொடங்குவது இனி உங்கள் பணி.