‘ஜெமினி’க்கு ஒரு காதல் கடிதம்!
அண்ணா மேம்பாலம் என்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ‘ஜெமினி மேம்பால’த்துக்கு வயது இன்று, 50 ஆண்டுகள் 1 நாள்.
நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட பல்வேறு விஷயங்கள் முதல்முறையாக எப்போது அறிமுகமாகின என்பது பற்றிய துல்லிய நினைவு நமக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை; சென்னை உடனான என்னுடைய தொடர்பு அப்படிப்பட்டதுதான்.
சே குவேரா மச்சு பிச்சுவை முதல்முறையாகப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வாக, ‘மோட்டர்சைக்கிள் டைரீஸ்’ படத்தில் ஒரு வசனம் வரும்: “How is it possible to feel nostalgia for a world I never knew?” சென்னைக்கு 720 கி.மீ. அப்பாலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, 430 கி.மீ. அப்பாலுள்ள ஊரில் வளர்ந்த எனக்கு, சென்னையை முதன் முதலாகப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வும் அவ்வாறானதே!
நான் ஒரு பத்திரிகையாளராக ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவதற்கு வெகு முன்னதாகவே, மிகச் சிறுவயதில், நான் சென்னையில் - அதுவும் மவுண்ட் ரோட்டிலுள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என்கிற கனவு எனக்குள் குடிகொண்டுவிட்டது (அந்த கனவின் நனவில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறேன்).
நான் சென்னைக்கு வரத் தொடங்கிய காலம்தொட்டு, சென்னையில் வாழ ஆரம்பித்த பிறகும்கூட எந்த நோக்கமும் இல்லாமல் ‘சும்மா’ சென்றுவரும் இடங்கள் பல உண்டு; ‘ஜெமினி’ அவற்றில் ஒன்று. பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருந்த நாட்களில், மிதமான போக்குவரத்தில் எம்டிசி பேருந்து ஒன்று ஜெமினியைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம், 53 நொடிகள் என்பதுவரை பல ஆய்வுகள் ஜெமினியை முன்வைத்துப் பண்ணியிருக்கிறேன். ஜெமினி தேனாம்பேட்டையில் இறங்கும் இடத்தில் இடப்பக்கம் நிற்கும் ‘NH 45 திண்டுக்கல் 413 DINDIGUL’ மைல்கல் தரும் உணர்வு எனக்கு மட்டுமேயானது. தமிழ் சினிமாவில் ஜெமினி பிரசன்னமாகும் காட்சிகளை, என்னுடைய வலைப்பூவில் வெளியாகும் ‘எண்பதுகளின் மெட்ராஸ்’ தொடரில் ஆவணப்படுத்திவருகிறேன்.
அண்ணா மேம்பாலம் என்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ‘ஜெமினி மேம்பால’த்துக்கு வயது இன்று, 50 ஆண்டுகள் 1 நாள்.
1973 ஜூலை 1 அன்று மாலை 6:30 மணியளவில் நடந்த திறப்பு விழாவில், அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி மேம்பாலத்தைத் திறந்துவைத்து, அதற்கு ‘அண்ணா மேம்பாலம்’ எனப் பெயரிட்டார்: “சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தைத் திறந்துவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”
மகாகனம் பொருந்திய இந்த மேம்பாலத்தின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 30 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தலையங்கப் பக்கத்தை, ‘அண்ணா மேம்பாலம் - 50’ சிறப்புப் பக்கமாகக் கொண்டுவந்தோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மேம்பாலங்களின் பங்கு பற்றிய தலையங்கம்; 1940களின் கடைசி ஆண்டுகளில், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ஒரு மேம்பாலம் முன்மொழியப்பட்டது தொடங்கி அண்ணா மேம்பாலம் உருப்பெற்ற வரலாறு தொட்டு அதன் அடுத்த ஐம்பது ஆண்டுகள் பற்றி நான் எழுதிய தலைப்புக் கட்டுரை; அண்ணா மேம்பாலத்தைத் திறந்துவைத்து மு.கருணாநிதி ஆற்றிய உரை; ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அந்தக் காலம்தொட்டு ‘ஜெமினி’ பற்றி வெளியான செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு என மிகச் சிறப்பாக வெளியான அப்பக்கம், பரவலான கவனம் பெற்றது அதற்கு வந்த எதிர்வினைகளிலிருந்து அறிய முடிந்தது.
அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்ட நாளான நேற்று (ஜூலை 1), ‘முரசொலி’யில் நம்முடைய கட்டுரை மீள் பிரசுரம் கண்டது. இந்தப் பின்னணியில் ஒரு ஃபிளாஷ்பேக்!
ஆண்டு 2018. நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பயின்றுவந்தேன். பல்கலைக்கழகப் பணிகள் தாண்டி, அக்காலகட்டத்தில் எனக்கு நானே சில எழுத்துத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தேன்: தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான மு.கருணாநிதியின் பத்திரிகைச் செயல்பாடு பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுவது, அத்திட்டங்களில் ஒன்று. கருணாநிதியின் இதழியல் குறித்து எத்தனையோ பதிவுகள் அதுவரை எழுதப்பட்டிருந்தாலும், வெளிவராத புதிய தகவல்களைக் கொண்டு நான் எழுத விரும்பினேன். எனவே, அதற்கு வேண்டிய தரவுகளை ‘முரசொலி’யில் எளிதாகப் பெற்றுவிட முடியும் என்பதால், அங்கு பணியிடப் பயிற்சி (Internship - அப்படி ஒரு வழக்கம் அங்கு இருக்குமா என்று தெரியாமலேயே) சேர்வது எனத் தீர்மானித்தேன். அப்போது ஊடகங்களில் எனக்குப் பரிச்சயமான நண்பர்கள் சிலர் மூலம் அதற்கு முயன்றேன். ஆனால், அப்போது நேரமும் சூழலும் கைகூடவில்லை. எனினும், ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு (அறிவாலயம் பேராசிரியர் நூலகத்தைப் பயன்படுத்தினேன் என நினைக்கிறேன்... துல்லியமாக நினைவில்லை) ‘பத்திரிகையாளர் கருணாநிதி’ என்கிற பதிவை எழுதி, என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டேன். அந்தக் கட்டுரையை ப.திருமாவேலனுக்குச் சமர்ப்பித்திருந்தேன். அதற்கு அவர் பதிலளித்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது: “நன்றியும் வாழ்த்தும் அருண் பிரசாத்! மிகச் சரியான தரவுகளுடன் குழப்பம் இல்லாமல் வரிசையாகக் கோர்வையுடன் கொண்டு சென்றுள்ளாய். தொடர்ந்து எழுது!”
‘இந்து தமிழ் திசை’ - அண்ணா மேம்பாலம் 50
படங்கள்:
Attkaasam Arun BRO......!