ஆல் இந்திய ரேடியோ - சென்னை: ஒரு பகிர்வு
ஆல் இந்திய ரேடியோ (அகில இந்திய வானொலி) சென்னை நிலையத்தின் 86ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று (ஜூன் 16). இந்நாளில், இந்திய ஒலிபரப்பின் ஆரம்ப ஆண்டுகள், அகில இந்திய வானொலி சென்னை நிலையத்துக்கும் எழும்பூருக்குமான தொடர்பு பற்றி சென்னை வானொலியில் நேரலையில் பேசிய தகவலை இன்று மின்மடல் வாசகர்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்; இது என்னுடைய முதல் வானொலிப் பேச்சு என்பது ‘தஞ்சாவூர்க் கல்வெட்டு’ பதிவாகிறது!
முன்கதைச் சுருக்கம்:
நான் ஒரு Madras aficionado என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது; என்னை அறியாதவர்களுக்கு, நான் ஒரு ‘மெட்ராஸ் காதலன்’ என்பதைப் பெருமையுடன் இப்போது அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நான் நேரடியாக மெட்ராஸை அறிவதற்கு முன்பே, இந்த லோகத்தைப் பற்றிக் கேட்டும் படித்தும் இருந்த செய்திகளுடன் கூகுள் மேப்ஸ்-இல் இந்நகரின் தெருக்களில் மேய்ந்து ஓய்ந்திருந்தேன். மெட்ராஸ் மீதான இந்தத் திகட்டச் செய்யும் காதலின் விளைவாக, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பயின்றபோது ‘Madras Magazine' என்கிற தொகுப்பு இதழைக் கொண்டுவர முடிந்தது (2018) குறித்த இன்பம் இப்போதும் நீடிக்கிறது.
அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பின், ‘ஆனந்த விகட’னில் பணியில் இருந்தபோது, அதன் யூடியூப் சேனலுக்காகச் சென்னையின் வரலாறு தொடர்பாக ஆவணப்படத் தொடர் ஒன்றைத் தயாரிப்பது என முடிவாகி, எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. மெட்ராஸ் குறித்து அதுவரையிலான என் தேடலின் அறுவடையாக அமைந்த அந்தப் பணியில், காலம் என்னை அனுமதித்த அளவில், 16 (+2) ஆவணப்படங்களைத் தயாரிக்க முடிந்தது. அவை:
இவை ஒவ்வொன்றின் உருவாக்கம் குறித்த அனுபவங்கள் தனிப் பதிவுகளாக எழுதப்பட வேண்டியவை (ஒருநாள் எழுதுவேன்). எனினும், இன்றைய நாளின் பொருத்தப்பாடு கருதி, ‘ஆல் இந்திய ரேடியோ - சென்னை’ நிலையம் பற்றிய ஆவணப்படங்களின் உருவாக்கம் பற்றி மட்டும் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
ஆல் இந்திய ரேடியோவின் நெடிய வரலாறு மற்றும் முக்கியத்துவம் கருதி ஆவணப்படத்தை இரண்டு பகுதிகளாக உருவாக்கினோம்: ஒன்று, அதன் வரலாறு; இரண்டு, சென்னை நிலையத்துக்குள் ஒரு பயணம். வரலாறு குறித்த ஆவணப்படத்துக்கு, ஆல் இந்திய ரேடியோ சென்னை நிலையம் உருவாவதற்கு முன்பாக, ஒலிபரப்பு தொடங்கி செயல்பட்டுவந்த எழும்பூரின் பகுதிகள், ரிப்பன் மாளிகை ஆகிய இடங்களுக்கு எழுத்தாளரும் சென்னை நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான பழ.அதியமானுடன் நேரில் சென்று பார்வையிட்டது மறக்க முடியாத கள அனுபவம். ஒலிபரப்பின் வரலாறு குறித்த தகவல்களை வழங்கி ஆவணப்பட உருவாக்கத்துக்கு அவர் முக்கியப் பங்களித்தார். மேலும், சென்னை நிலையத்தின் முன்னாள் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜெயம்கொண்டான், அண்ணாவின் இறுதி ஊர்வலத்திலிருந்து நேரலையில் பேசியது உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்; அதேபோல், முன்னாள் முதுநிலை அறிவிப்பாளரான ஜயராமன் சென்னையில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு வழங்கிய வர்ணனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டி ஆச்சரியமூட்டினார்.
இப்படி ஆவணப்படங்களின் அம்சங்களைப் பட்டியலிட்டு அவற்றின் சுவாரசியத்தைக் காலி பண்ண விரும்பவில்லை. வயது வேறுபாடின்றி, இந்த ஆவணப்படங்களைக் கண்டு அனைவரும் ஆச்சரியமுற்று மகிழ்ந்ததை அவை வெளியானபோது வந்த எதிர்வினைகள் உணர்த்தின; நீங்களும் ஒருவேளை அவற்றைக் காண நேர்ந்தால் ஆச்சரியமுற்று மகிழ்வீர்கள் என்றே நம்புகிறேன்.
நிற்க. ஆல் இந்திய ரேடியோ பற்றிய ஆவணப்படங்களைத் தயாரித்தவன் என்ற முறையில், அதன் தொடக்க நாள் சிறப்பு நிகழ்ச்சியில் பேசுவதற்கு, பழ.அதியமான் என்னைப் பரிந்துரைத்த செய்தியை, சென்னை நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அருணன் என்னை முதலில் தொடர்பு கொண்டபோது அறிந்து, மகிழ்ந்தேன். அதன்படி, சென்னையில் ஒலிபரப்பின் வரலாறு, ஆவணப்பட உருவாக்க அனுபவங்கள், இன்றைய தலைமுறையினரிடம் வானொலியைக் கொண்டு செல்லும் வழி ஆகியவை குறித்துச் சில நிமிடங்கள் பேசினேன்.
1924 மே 16 அன்று, வானொலி ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து சி.வி.கிருஷ்ணசாமி செட்டி தொடங்கிய ‘தி மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப்’, இந்தியாவில் ஒலிபரப்பின் தொடக்கமாக அமைந்தது. எழும்பூர் காஸா மேஜர் சாலையில் தற்போது அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில், அன்றைய காலகட்டத்தில் இருந்ததாக நம்பப்படும் ‘ஹாலோவேஸ் கார்டன்’ என்கிற இடத்திலிருந்து ஜூலை 31 (1924) அன்று முதல் ஒலிபரப்பு தொடங்கியது. அதன் அடிப்படையில், டான் போஸ்கோ பள்ளியிலிருந்து பேசியது நல் அனுபவமாக அமைந்தது.
வாழ்நாளுக்கான அனுபவமாக அமைந்துவிட்ட இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பழ.அதியமான் அவர்களுக்கும் அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தாருக்கும் என்னுடைய நன்றி!
குறிப்புகள்:
நேரலை ஒலிபரப்பின் ஃபேஸ்புக் நேரலை இங்கே: https://www.facebook.com/airchennai/videos/655633936615554
படம் 1: ஆவணப்பட உருவாக்கத்தின்போது சென்னை வானொலி நிலையத்தில், ஒளிப்பதிவாளர் சுரேஷ் எடுத்த படம்; படம் 2: டான் பாஸ்கோ பள்ளி நேரலையின்போது ஆர்.ஜே தேன்மொழி உடன்.