‘இன்று’ மின்மடல் வாசகர்களுக்கு வணக்கம்!
நாம் பல மாதங்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறோம்! நலம்; நலம் அறிய ஆவல்.
கரோனா பெருந்தொற்றின் தொடக்க மாதங்களில் (ஜூலை-ஆகஸ்ட், 2020) தொடங்கப்பட்ட இந்த ‘இன்று’ மின்மடல் மூலம், ஒவ்வொரு வாரமும் காலநிலை மாற்றம் சார்ந்த பதிவுகளைத் தவறாது வெளியிடத் தீர்மானித்திருந்தேன். ஆனால், ஆரம்ப மாதங்கள் தவிர்த்து தொடர்ந்துவந்த நாட்களில் அலுவல் பணிகளால் சீரான இடைவெளியில் பதிவுகள் எழுதமுடியவில்லை; இந்த இடைவெளி என்னுடைய ஆர்வத்தையும் வற்றச் செய்துவிட்டது. இடைப்பட்ட காலத்தில், நான் ‘ஆனந்த விகடன்’ இதழின் நிருபர் பணியிலிருந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்க (Op-Ed page) அணிக்கு உதவி ஆசிரியராகப் பணி மாறியிருந்தேன் (ஜூலை, 2022). எனினும், என்னால் ‘இன்று’ மனநிலைக்குத் திரும்ப முடியவில்லை.
ஆனால், ஜூன் 3, 2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த ‘சுற்றுச்சூழல் சந்திப்பு’ என்னுடைய ஆர்வத்தைக் கிளர்த்தெழச் செய்துவிட்டது. ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘காலநிலை மாற்றமும் கடலும்’ என்கிற தலைப்பில் தோழர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கருத்தரங்குக்கு ஆர்வத்துடன் வந்து பங்கேற்ற பார்வையாளர்கள், 5 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு 8 மணி சுமாருக்கு முடிவடையும்வரை கலையாமல் அமர்ந்து உரைகளைக் கூர்மையாகக் கேட்டனர். இது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்தியது. எழுத்தாளர் ‘காடோடி’ நக்கீரன், பேராசிரியரும் கடல்சார் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின், கடல் உயிரின ஆராய்ச்சியாளரும் சுற்றுச்சூழல் எழுத்தாளருமான முனைவர் நாராயணி சுப்ரமணியன், இதழாளரும் சுற்றுச்சூழல் எழுத்தாளருமான ஆதி வள்ளியப்பன் ஆகியோர் கருத்தரங்க நோக்கவுரை ஆற்றினர்; மேலும், தமிழ், ஆங்கில மொழிகளில் சமீபத்தில் வெளியான நூல்களை அறிமுகப்படுத்தி ஜா.செழியன், கிருபா நந்தினி, தீபக் வெங்கடாசலம் ஆகியோருடன் நானும் பேசினேன். காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் உருவாக்கிய The Climate Book-ஐ அறிமுகப்படுத்தி நான் பேசிய உரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் கீழே:
The Climate Book, created by Greta Thunberg
கிரெட்டா துன்பர்க் - பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக தேச அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் நாடாளுமன்ற வாயிலில் பள்ளி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியவர், கிரெட்டா துன்பர்க்; அப்போது அவருக்கு வயது 16. ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ [Fridays for Future] என்கிற பெயரில் ஒவ்வொரு வாரமும் அவர் நடத்திவரும் இந்தப் பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம், ஜூன் 2 அன்று 250ஆவது வாரத்தை எட்டியிருக்கிறது.
மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், ஓர் அறிவியல்பூர்வமான உண்மை என்பது 1990களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது; ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு [Intergovernmental Panel on Climate Change, IPCC], 1990களின் மத்தியிலிருந்து காலநிலை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கைகளை [Assessment Report] வெளியிட்டுவருகிறது. எனினும் வெகுஜன தளத்தில் காலநிலை மாற்றம் சார்ந்தோ அதன் தீவிரம் குறித்தோ மேம்பட்ட புரிதல் முறையாக ஏற்பட்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு எல்லைக்குட்பட்டே இருந்துவந்தது.
இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடல்களுக்கு 2018ஆம் ஆண்டு, ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டு நிகழ்வுகள் இதற்குக் காரணமாக அமைந்தன: 1. கிரெட்டாவின் வருகை; 2. ஐபிசிசி அமைப்பு வெளியிட்ட 1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை [Special Report on Global Warming of 1.5 °C]. இவை இரண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொதுச் சமூகத்தில் காலநிலை மாற்றம் சார்ந்த உரையாடலைத் தீவிரப்படுத்தின. கிரெட்டாவின் எழுச்சி அதற்கு முக்கியப் பங்காற்றியது. ஐபிசிசி-யின் அறிக்கை, மேற்குலக ஊடகங்களைக் காலநிலை மாற்றம் சார்ந்த கவனப்படுத்தலை முதன்மைப்படுத்துவதற்குத் தூண்டியது.
ஒவ்வொரு வாரமும் ஸ்வீடன் நாடாளுமன்ற வாயிலில் கிரெட்டா மேற்கொண்ட பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம், ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி உலகம் முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரி மாணவ சமுதாயத்தினர் கிரெட்டாவிடமிருந்து ஊக்கம்பெற்று தங்கள் நாடுகளில் அதேபோன்ற வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தலைப்பட்டனர்; இந்தியாவில், தமிழ்நாட்டில் சென்னை போன்ற நகரங்களிலும்கூட அதன் தாக்கம் இருந்தது. நியூ யார்க்கில் நடந்த ஐநா மாநாட்டில் பங்கேற்க, விமானப் பயணத்தை விடுத்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கரிம உமிழ்வற்ற படகில் கடந்தது, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான எதிர்கொள்ளல், காலநிலை மாநாடுகளில் உணர்ச்சிக் கொப்பளிக்கப் உரையாற்றியது போன்றவை கிரெட்டா என்கிற தனிநபர் சார்ந்த கவனத்தைத் தீவிரப்படுத்தினாலும் காலநிலை மாற்றம் சார்ந்த அவரது முன்னெடுப்புகளின்மீதும் தொடர் வெளிச்சம் பாய்ச்சிவந்தன. 2019 செப்டம்பரில் நடந்த உலகளாவிய வேலைநிறுத்தப் போராட்டம் காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாடுகள் மிகப் பெரிய முன்னர்வாக அமைந்தது. எனினும், 2020இல் பரவிய கரோனா பெருந்தொற்று, உலகின் இயக்கத்தை நிறுத்தத்துக்குக் கொண்டுவந்தது. காலநிலை சார்ந்த செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட்டது.
தற்போது, கரோனாவிலிருந்து உலகம் மீண்டுவிட்டது; ஆனால், காலநிலை மாற்றமோ தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. நிலைமையின் தீவிரத்தை ஐபிசிசியின் அறிக்கைகள் எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கின்றன. இந்தப் பின்னணியில்தான், தன்னுடைய செயல்பாட்டின் ஓர் அங்கமாக, The Climate Book என்கிற தொகுப்பு நூலைக் கிரெட்டா உருவாக்கியுள்ளார்.
காலநிலை மாற்றம் சார்ந்து இன்று இயங்கிக் கொண்டிருக்கும், தங்கள் துறை சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ள அறிவியலாளர்கள், வானியலாளர்கள், புவியியலாளர்கள், கடல்சார் ஆய்வாளர்கள், பொறியாளர்கள், பொருளியலாளர்கள், கணிதவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், புனைவெழுத்தாளர்கள், தத்துவவியலாளர்கள், பூர்வகுடி தலைவர்கள் உள்ளிட்ட 105 பேர் இதற்குப் பங்களித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், ஆங்கிலத்தில் வெளியான ‘கிளைமெட் புக்’, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், இத்தாலியன், பிரெஞ்சு, டச்சு, ஸ்வீடிஷ், டானிஷ், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புவியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துவந்திருப்பதை எளிமையாக உணர்த்தும், பிரிட்டனைச் சேர்ந்த காலநிலையியலாளர் எட் ஹாக்கின்ஸ் உருவாக்கிய காலநிலைக் கோடுகள் [Warming stripes] நூலுக்கான பொருத்தமான அட்டைப்படமாக அமைந்துள்ளது.
காலநிலை எப்படி இயங்குகிறது
புவி எப்படி மாறிக் கொண்டிருக்கிறது
அந்த மாற்றம் நம்மை எப்படிப் பாதிக்கிறது
நாம் அதுகுறித்து இதுவரை என்ன செய்துள்ளோம்
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்
என காலநிலை மாற்றத்தின் அறிவியல், வரலாறு, சவால்கள், சாத்தியங்கள் ஆகியவை சார்ந்த கட்டுரைகளால் ஐந்து பகுதிகளாக இந்நூல் பகுக்கப்பட்டிருக்கிறது; 464 பக்கங்களைக் கொண்ட இந்நூலில், கிரெட்டாவின் எழுத்துகள் 100 பக்கங்களுக்கு மேல் விரிகின்றன. காலநிலைப் போராட்டத்தில் தன்னுடைய அனுபவங்கள், அதன்வழி ‘பசுமைக் கண்துடைப்பு’ (Green washing) எவ்வளவு மோசமாக உலகெங்கும் பரவியுள்ளது என்பது குறித்த அறிதல் என பல்வேறு விஷயங்களைக் கிரெட்டா இதில் பேசுகிறார். காலநிலை மாற்றத்துக்குக் கலை-இலக்கியம் எப்படி முகங்கொடுக்கப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பி அதுசார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் அமிதவ் கோஷ், புனைவெழுத்தாளரான மார்கெரட் அட்வுட் ஆகியோரின் பங்களிப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அறிவுச் சமூகத்தின் இன்றியமையாத பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.
முன்னுதாரணமற்ற தன்னுடைய போராட்ட முறைகள் மூலம் காலநிலை மாற்றம் சார்ந்த உரையாடலைப் பொதுச் சமூகத்தில் தீவிரப்படுத்த கிரெட்டா பங்களித்திருந்தாலும், இதுவரையிலான அவரது செயல்பாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ‘கிளைமெட் புக்’ இருக்கிறது. இந்நூல் முழுமையாகவோ நூலின் பகுதிகளோ தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம்; காலநிலை மாற்றம் சார்ந்த தமிழ்ச் சூழலில் சொல்லாடலை மேம்படுத்துவதற்கும், தமிழ்ச் சூழல் உலகின் சொல்லாடலுக்குள் நுழைவதற்கும் இது ஒரு தொடக்கமாக அமையும்.
இறுதியாக,
கிரெட்டாவின் வயதொத்த தலைமுறையினரிடம் காலநிலை மாற்றம் சார்ந்த புரிதலை ஆழப்படுத்த, அவர்கள் அதிகம் புழங்கும் சமூக வலைத்தளங்களை நாம் முறையாகப் பயன்படுத்தி அவர்களைச் சென்றடைய வேண்டும்.
ஏறக்குறைய 100-110 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அரசியல்-சமூகத் தளத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு ஓர் இயக்கம் தோன்றியது; 21ஆம் நூற்றாண்டின் சமூக நீதி என்பது, ‘சூழல் நீதி’யையும் உள்ளடக்கிய ஒன்றுதான். ஆக, சூழல் நீதியையும் உறுதி செய்யும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நன்றி!
தொடர்புடைய பதிவுகள்:
சுற்றுச்சூழல் சார்ந்த என்னுடைய கவனம் ஆழப்பட்ட தளமான ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழில், காலநிலை மாற்றம் சார்ந்து ‘பூவுலகு இன்று’ என்கிற தலைப்பில் புதிய தொடர் ஒன்றை எழுதுகிறேன்; நேற்று வெளியான முதல் பகுதிக்கான இணைப்பு: காலநிலை மாற்றத்தின் மொழி எது?
மிகவும் நலம் அருண்... நல்லதொரு பதிவு... நானும் இந்த புத்தகத்தை வாசிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் நீங்கள் அதை மொழி பெயர்த்த பின்பு... ஒரு பதினாறு வயது பெண்ணிற்கு இருக்கும் சமூக அக்கறை என்னிடம் இல்லை என்னும் சற்று வருந்துகிறேன்... இது போல் தொடர்ந்து எழுத வேண்டும்... நம் இளைய சமுதாயம் தற்போதய சீரற்ற காலநிலை மாற்றம் பற்றி அறிய வேண்டும்... வாழ்த்துக்கள்...
நலம் அருண். முற்போக்குச் சிந்தனையுடன், எதிர்கால முக்கிய தேவையாக இருக்கும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் ஆராந்து கொண்டிருக்கும் என் நண்பனுக்கு வாழ்த்துகள். வாசித்தேன், நல்லதொரு பதிவு இன்றில் இன்று. கிரேட்டா எழுதிய "கிளைமைட் புக்" பற்றிய தகவலுக்கு நன்றி. நீயே நம் தமிழ்ச்சமூகத்திற்கு அந்த புத்தகத்தை மொழி பெயர்த்து எழுதுமாறு வேண்டுகோளுடன், வாழ்த்துகள்!.