. . . because races condemned to one hundred years of solitude did not have a second opportunity on earth. —One Hundred Years of Solitude
1
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி. ஆண்டு 2067. வேளாண்மை ஏறக்குறைய முற்றிலுமாக பொய்த்துப் போய், மீட்டெடுக்கும் வழியை இழந்துவிட்டது; நிலங்கள் வறண்டுபோனதால் புழுதிப் புயல்கள் நிரந்தரமாகிவிட்டன. புவியில் வாழிடம் அழிந்து, மனிதகுலத்தின் வாழ்வாதரம் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், மனிதகுல தழைப்புக்காக, மனிதர்கள் வாழத்தகுந்த ஒரு கோளைத் தேடும் பயணம் தொடங்குகிறது. ஆம், கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ படத்தின் கதைச் சுருக்கம்தான் இது. ஓர் அறிவியல் புனைவான இக்கதை, மனிதகுல எதிர்காலம் குறித்த கற்பனைத் துயருலகை (dystopia) நிர்மாணிக்கிறது. ஆனால், உலகம் முழுக்க பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கி இருக்கும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள், நிகழ்காலம் என்பது கற்பனைத் துயருலகின் மெய்மைதான் என்பதை நிரூபணம் செய்கின்றன.
புவி என்பது மனிதர்களால் ஆனதோ மனிதர்களுக்கு மட்டுமானதோ அல்ல; அது பல கோடிக்கணக்கான உயிர்களுடனும் உயிரற்ற பொருட்களுடனும் மனிதர்களையும் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. காடு, மலை, கடல் போன்றவற்றை உள்ளடக்கிய அதன் புவியியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை (complex); அவற்றுள் காலநிலை அமைப்பும் (climate system) ஒன்று. பல நூற்றாண்டுகளாகச் சூழலியல் சமநிலையை இவை பேணிவந்தன. ஆனால், புவியின் பிரம்மாண்ட வரலாற்றில் மிக அண்மைக் காலத்தில் தோன்றிய மனிதர்களால் அந்தச் சமநிலை கடுமையாகக் குலைக்கப்பட்டிருக்கிறது. மனிதச் செயல்பாடுகள் புவியின் சுற்றுச்சூழல், புவியியல் அமைப்புகள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தி, அதன் போக்கை மாற்றியமைத்திருக்கும் இந்தக் காலகட்டத்துக்குப் புவியியல் அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்று அதிகாரப்பூர்வ பெயரை வழங்குவது குறித்து புவியியலாளர்கள் பரிசீலித்துவருகின்றனர்.
வரலாறு
18, 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மனிதகுலத்தின் அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் மூலம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை காலனிகளாகக் கொண்டு அந்த நாடுகளின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் தொழில்மயமும் நகர்மயமும் அதீத வேகத்தில் நிகழ்ந்தன; கரிப்பொருட்களை மையமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையில் மேற்கத்திய நாடுகள் இந்தப் போக்கை நடைமுறைப்படுத்தின. போக்குவரத்து, தொழிற்சாலை என எல்லா நவீன வசதிகளுக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருளின் பயன்பாடே அடிப்படையாக இருந்தது.
தொழிற்சாலைகள், கட்டுமீறிய உற்பத்தி, முறையற்ற நுகர்வு, புதைபடிவ எரிபொருள் பயன்பாடு போன்ற மனிதச் செயல்பாடுகளால் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் வரைமுறையின்றி வெளியேறி வளிமண்டலத்தில் சேர்ந்தன; சேர்ந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2019இல் மட்டும் சுமார் 37 ஆயிரம் கோடி டன் கரியமில வாயு வளிமண்டலத்தில் சேர்ந்திருக்கிறது. புவியில் மனிதகுலம் தோன்றியதில் இருந்து தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம்வரை வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 300 பி.பி.எம் (parts per million/ பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) ஆகவும், புவியின் சராசரி வெப்பநிலை குறிப்பிட்ட அளவிலும் தொடர்ந்துவந்தது. ஆனால், தொழிற்புரட்சியின் விளைவாக புதைபடிவ எரிபொருட்களின் தொடர் பயன்பாடும், அதனால் வெளியேறிய கரியமில வாயுவும், புவியின் சூழலியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. 2019 மே மாதம் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 415 பி.பி.எம் எனும் புதிய உச்சத்தைத் தொட்டது; இதை எழுதிக் கொண்டிருக்கிருக்கும்போது அது 416.39 பி.பி.எம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு, சராசரி வெப்பநிலை, சராசரி மழைப்பொழிவு உள்ளிட்ட காலநிலை நிகழ்வுகளின் குறியீடுகள் அன்றாடம் புதிய உச்சத்தைத் தொட்டு அறிவியலாளர்களைத் திகைக்கச் செய்கின்றன. காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தாக்கம்
காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டு, அதிதீவிரத்துடன் நிகழ்ந்துவரும் இந்தத் தனித்தனி நிகழ்வுகள், ஒட்டுமொத்தமாக அடிப்படைப் புவியியல் அமைப்புகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவியின் காலநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக்கூடியதான ஒன்பது உச்சப் புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2018 அக்டோபரில், காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அமைப்பு (IPCC) வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’ காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்கள், விவாதங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்தியிருக்கிறது.
புவியின் சராசரி வெப்பநிலை, 19ஆம் நூற்றாண்டை ஒப்பிடுகையில் ஏற்கெனவே 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்ட நிலையில், வெப்பநிலையில் 1.5 அல்லது 2 டிகிரி செல்சியல் அதிகரிப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது: வெப்ப அலைகள், கணிக்க முடியாத அதிதீவிரத் தட்பவெப்பநிலை, ஆர்க்டிக்-அண்டார்க்டிக்-கிரீன்லாந்து-ஐஸ்லாந்து பனிப்பாறைகள் கட்டுப்பாடின்றி உருகுதல், கடல்மட்ட உயர்வு, கடலோர வெள்ளம், நன்னீர் பற்றாக்குறை, தவறும் அல்லது அதிதீவிரமடையும் பருவமழை உள்ளிட்ட இயற்கை பிறழ்வுகளால் வாழ்விடங்களை இழக்கும் மனிதர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாவார்கள்; அது புவி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி, காலநிலை அகதிகள் (climate refugees), காலநிலை இனவெறி (climate apartheid) போன்ற எதிர்பாரா புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது மக்களின் மனநலத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படியாக சங்கிலித் தொடர் நிகழ்வுகள், மீள/திரும்பிச் செல்ல முடியாத நிலைக்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லும்.
2
காலநிலை இதழியல்
காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான முதல் ஆய்வை, ஸ்வீடனைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்வாந்தே அரேனியஸ் 1896இல் வெளியிட்டார். ஆனால், இதன் தீவிரத்தன்மையை 1970களின் பிற்பகுதியில் தான் (மேற்கத்திய) உலகம் உணர்ந்தது. பிறகு 1990களில் காலநிலை மாற்றம் உண்மைதான் என்பது அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டு அதன் உண்மைத் தன்மை குறித்த விவாதங்கள் முடிவுக்கு வந்தன. (என்றபோதிலும், காலநிலை சந்தேகிகள் (climate skeptics) இன்றும்கூட இதை மறுத்துக் கொண்டிருப்பது தனி கதை!)
இந்தப் பின்னணியில், மனிதகுலம் இன்று வந்தடைந்திருக்கும் இடம் பற்றிய புரிதலையும், இத்தகைய வாழ்வாதாரச் சிக்கலுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி (ஒருவேளை நம்பிக்கையுடன்) பயணப்படுவதற்குமான அறிவையும் வழங்கும் முதன்மைப் பணி ஊடகங்களையும் கலைஞர்களையுமே சார்ந்தது என்று நான் நம்புகிறேன்.
“முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை. இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அந்த முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டும்; காலம் குறைவாகவே இருக்கிறது. பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறுவது, அதிலிருந்து வெளியேறுவது ஆகியவை வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களாகக் கருதப்படும்,” என்று காலநிலை ரிபோர்டிங் குறித்த ஊடகங்களின் பொறுப்பாக நோம் சோம்ஸ்கி நேர்காணல் ஒன்றில் கூறுகிறார்.
2019 காலநிலை சார்ந்து ஊடகங்களுக்குத் திருப்புமுனையாக அமைந்தது: கிரெட்டா துன்பர்க்-இன் வருகை, உலகம் முழுக்க மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சி, இதற்கு அரசாங்கங்களின் ஆதரவும் எதிர்ப்பும், ஐ.பி.சி.சி-யின் 1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை மற்றும் பல அறிக்கைகள், Extinction Rebellion போன்ற புதிய இயக்கங்களின் தோற்றம் போன்ற பல்வேறு காரணிகள் காலநிலை செய்திகளை இனிமேலும் ஊடகங்கள் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ இயலாத நிலைக்கு கொண்டுவந்தன. இங்கிலாந்தின் கார்டியன், காலநிலை ரிபோர்டிங்-க்கு சர்வதேச அளவில் முன்னுதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது. காலநிலை சார்ந்த செய்திகளை, உணர்வுகளை வாசகர்களுக்கு வலுவாகவும் அதன் தீவிரத்தன்மையை உணர்த்தும் வகையிலும் செய்தி எழுதும் முறை மேம்படுத்தப்பட்டது; மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தொடர்ச்சியாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள ஊடகங்களை மெல்ல இதைத் தழுவின.
அதன் விளைவாக, உலகின் முன்னணி ஊடக நிறுவனங்கள், ஓர் இதழ் முழுக்க காலநிலையும் அது சார்ந்த விஷயங்களையும் மட்டுமே பேசும் சிறப்பிதழ்களை முதன்முறையாக வெளியிடத் தொடங்கின. சர்வதேச அரசியல் இதழான ஃபாரின் பாலிசி தொடங்கி, வெகுஜன பண்பாட்டு இதழான ரோலிங் ஸ்டோன் வரை சிறப்பிதழ்களைக் கொண்டுவருவதன் மூலம் தங்கள் வாசகர்களுக்கு அதன் தீவிரத்தை உணர்த்த முற்பட்டன. காலநிலைச் சிறப்பிதழை வெளியிட்டதன் மூலம், எகானமிஸ்ட் இதழ் தன்னுடைய 176 ஆண்டுகால வரலாற்றில் ஒரே தலைப்புக்காக முழு இதழையும் அர்ப்பணித்துள்ளது. அவற்றைப் பற்றிய அறிமுகமும், இதழ்களை வாசிப்பதற்கான சுட்டிகளும் இந்த இணைப்பில் உள்ளன.
என்றபோதிலும், ஐரோப்பாவின் பெரும்பான்மை ஊடக நிறுவனங்கள் காலநிலை குறித்த செய்தி வழங்கலுக்கான தெளிவான எடிட்டோரியல் கொள்கையை இன்னும் வரையறுக்கவில்லை என்று ஐரோப்பிய இதழியல் ஆய்வகம் (EJO) கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, பொது சேவை ஒளிபரப்பாளர்கள் பிரச்சார தொனியிலான செய்தி வழங்கும் முறையையே பின்பற்றுகின்றனர் (‘செய்தியாளர்கள் பிரச்சாரகர்களாக செயல்படலாமா’ என்பது குறித்து ராய்ட்டர்ஸ், ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது), பிரத்யேக முறையில் அல்லாமல் வழக்கமான ரிபோர்டிங் நெறிமுறைகளையே சில ஊடகங்கள் இதற்கும் பயன்படுத்துகின்றன என்பன அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், ஸ்டார்ட்-அப் ஊடக நிறுவனங்கள் இதுகுறித்த தெளிவான எடிட்டொரியல் கொள்கைகளுடன் காலநிலை செய்திகளை வழங்குவதையும் இது சுட்டிக் காட்டுகிறது.
3
தமிழ் ஊடகங்கள்
இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் குறித்து தமிழ் ஊடகங்கள் செய்தி வழங்கும் முறையைப் பார்க்கும்போது பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது; அவை யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் நிற்கின்றன என்பது துயர்மிக்க உண்மை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், எட்டுவழிச் சாலை, சென்னை பெருவெள்ளம் என அந்தந்த நேரத்துச் செய்திகளாகவே சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளை தமிழ் ஊடகங்கள் அணுகுகின்றன. இவை நீண்ட காலத்தில் எவ்வித நல்விளைவுகளை எந்த நிலையிலும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். பிரச்சினையின் அடிப்படையை விளக்கும், அதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றும் நிலைக்கு மக்களை உயர்த்த அறிவியல் மனோபாவத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து உதாரணங்களுடன் வரும் வாரங்களில் விரிவான பேசுவோம். சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் கூற்றுடன் இந்தக் கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும், தமிழ் ஊடகங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியதும் அதுவே: “பண்பாட்டு ரீதியில் பெரிய போர் நம் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் போர் என்பது தமிழ் இனக்குழுவின் மீது, தமிழ் நிலத்தின்மீது, தமிழ் மொழியின் மீதான போர்; இன்னும் சொல்லப் போனால் இதற்குள் சுற்றுச்சூழலும் அடங்கியிருக்கிறது. சூழலியல் சார்ந்த புரிதல் இங்கு வந்துவிட்டது; ஆனால், அதை முழுமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதை எதிர்த்து போராடக்கூடிய ஒரு காலகட்டம் வரப்போகிறது. அப்படிப் போராடக்கூடிய வருங்காலத் தலைமுறைக்கு, அந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருத்து ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.”
அடுத்தடுத்த கட்டுரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அருண். மிகத் தெளிவான முன்னுரையாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
இன்றைய சூழலிலியலின்
மீது நடத்தப்படும் மோசமான தாக்கம் ...
அடுத்த தலைமுறையின் நல்ல சூழலுக்கான ஏக்கம்.
நகர்ந்து கொண்டே இருக்கிறோம்..
ஒவ்வொரு நாளும் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்
சட்டதிட்டங்களை பார்த்தும் பார்க்காமல்...
எதிர்த்து குரல் கொடுத்தால்..இலவசமாய் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆக்கி விடுகிறார்கள்.
அல்லது புதிதாய் உருவான தீவிரவாதக் குழு என்று சொல்லி விடுகிறார்கள்.