பூவுலகு இன்று: நிறைவுக் குறிப்பு
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழில் காலநிலை மாற்றம் சார்ந்து நான் எழுதிவந்த ‘பூவுலகு இன்று’ தொடர் இந்த வாரத்துடன் (செப்டம்பர் 9) நிறைவடைந்திருக்கிறது.
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியலில் பட்டமேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது (2017-2019). வாசிப்பு சார்ந்த என்னுடைய ஈடுபாடு பல தளங்களில் விரிந்து பரவத் தொடங்கியிருந்தது. அதுவரை கேள்விப்பட்டு மட்டுமே இருந்த நூல்களைப் - அநேகமாக அனைத்தையும் - பல்கலைக்கழக நூலகத்தில் கண்டேன். அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில் என்னுடைய நேரத்தை அதிகபட்சமாக நூலகத்திலும் வாசிப்பறையிலும் செலவிட்டிருந்தேன். அதற்காகக் கணிசமான நூல்களை வாசித்து முடித்தேன் என்று பொருளல்ல (தமிழ்ப் பிரிவில் கிட்டத்தட்ட எல்லா நூல்களையும் ஒருமுறையேனும் புரட்டிப் பார்த்திருந்தேன்). என்னுடைய ஈடுபாடு சார்ந்த நூல்களைப் பார்வையிட்டு ஒரு வாசிப்புத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் முனைப்பில் அப்போது தீவிரமாக இருந்தேன். நான் எதிர்பார்த்த அளவில் இல்லையென்றாலும், ஒருவாறு அப்படியான ஒரு வாசிப்புத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டேன். அந்தப் பயிற்சியின் விளைவுகள் எனக்கு இன்று மிகப் பெரிய அளவில் உதவிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில்தான் - 2018 - ஐபிசிசி அமைப்பு வெளியிட்ட ‘1.5. டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’ மீது என்னுடைய கவனம் விழுந்தது. அதற்கு முன் காலநிலை மாற்றம் சார்ந்து நான் பிரத்யேகக் கவனம் கொண்டிருக்கவில்லை; இப்பிரச்சினை பற்றிய மேலோட்டமான புரிதலே எனக்கு இருந்தது. இந்தப் பின்னணியில்தான், ‘1.5. டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’, எப்படியோ என்னிடத்தில் ஒரு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அதற்கு முந்தைய ஆண்டு ‘நியூ யார்க் மேகஸி’னில் டேவிட் வாலஸ்-வெல்ஸ் எழுதியிருந்த ‘The Uninhabitable Earth’ என்கிற, பரவலாக விவாதிக்கப்பட்ட, கட்டுரையிலிருந்து காலநிலை மாற்றம் சார்ந்த என்னுடைய வாசிப்பு தொடங்கியது.
இந்தப் பின்னணியில், 2018 மே-ஜூன் மாதங்களில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணிப்பயிற்சி (internship) மேற்கொண்டேன். அங்குதான் இதழாளர் ஆதி வள்ளியப்பனை முதல்முறையாகச் சந்தித்தேன். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், அத்துறையில் நீண்டகாலமாக எழுதியும்-இயங்கியும் வரும் ஒருவரிடம் பணிப்பயிற்சி பெற்றது ஒரு முக்கியமான அனுபவமாக அமைந்தது. அடுத்த ஆண்டு (2019), படிப்பு முடிந்து நான் பணியில் சேர்ந்த இடம் ‘இந்து தமிழ் திசை’யின் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழ். காலநிலை மாற்றம் சார்ந்து என்னுடைய வாசிப்பு தீவிரப்படத் தொடங்கியிருந்த இவ்வேளையில்தான், பேராசிரியர்-எழுத்தாளர் ராஜன் குறையின் ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’ என்கிற சிறு நூலை நான் கண்டடைந்தேன். இப்பிரச்சினை சார்ந்த புரிதலை ஆழப்படுத்தி, என்னுடைய தேடலை விரிவுபடுத்தியதில் முக்கியப் பங்கு இந்நூலைச் சாரும். இதே காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நூல், அமிதாவ் கோஷின் ‘The Great Derangement’. இது குறித்து ஏற்கெனவே பல முறை எழுதியிருக்கிறேன்.
‘இந்து தமிழ் திசை’ பணிக்குப் பிறகு, பெருந்தொற்றுப் பொது முடக்கக் காலத்தில் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்தபோதுதான், 2020 ஜூலை மாதம் ‘இன்று’ தளத்தைத் தொடங்கி, காலநிலை மாற்றம் சார்ந்து தீவிரமாக எழுதத் தொடங்கினேன். அது மிகப் பரவலான கவனம் பெற்றது. ‘கனலி’ இணைய இதழிலிருந்து தொடர்புகொண்ட க.விக்னேஷ்வரன், ஜப்பானியச் சிறப்பிதழுக்காக, சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரை ஒன்று கேட்டிருந்தார். அந்தக் கட்டுரை பற்றிய உரையாடலின்போதுதான் காலநிலை மாற்றம் சார்ந்து நான் உருவாக்கியிருந்த எழுத்துத் திட்டம் ஒன்றை அவரிடம் முன்மொழிந்தேன். தனி இதழ் ஒன்றுக்காக அம்சங்களை அது கொண்டிருக்க, ‘நீங்களே ஆசிரியராக இருந்து செய்துகொடுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார். ‘கனலி’யின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ உருவானது இப்படித்தான்; அது ‘பூமி இழந்திடேல்’ என்கிற தலைப்பில் நூலாகவும் வந்து பரவலாகச் சென்றடைந்திருக்கிறது.
‘ஆனந்த விகட’னுக்குப் பிறகு மீண்டும் ‘இந்து தமிழ் திசை’க்குப் பணிக்குத் திரும்பிய நிலையில்தான், காலநிலை மாற்றம் சார்ந்த சிறு தொடர் ஒன்றை எழுதும்படி ஆதி வள்ளியப்பன் கேட்டுக்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுசார்ந்த வாசிப்பிலிருந்து உருவான புரிதலைத் தொகுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இத்தொடரை எழுத ஆரம்பித்தேன். காலநிலை மாற்றம் சார்ந்து அந்தந்த வாரத்து மேம்பாடுகளின் அடிப்படையில், ஒவ்வொரு வாரமும் கட்டுரைகளை எழுதுவது என்பதுதான் திட்டம். ஆனால், ஜூன் மாதம் ஆடம் ஸ்மித்தின் 300ஆம் ஆண்டு பிறந்த மாதக் கொண்டாட்டங்கள் சார்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது காலநிலை மாற்றத்தின் காலத்தில் ஆடம் ஸ்மித்தின் பொருத்தப்பாடு பற்றி ஆராயத் தொடங்கியபோது, தொடர் ஒரு வடிவம் பெற்றது. அதைப் பற்றிக் கொண்டு வரலாறு, தத்துவம், வர்க்கம், சாதி, இலக்கியம், இந்தியா, தமிழ்நாடு, சென்னை உள்ளிட்ட பொருள்களில் பதினைந்து கட்டுரைகளை எழுதினேன்.
அமிதாவ் கோஷுடனான நேர்காணல், ஆந்த்ரோபோசீன் வரலாறு குறித்த வரலாற்றாய்வாளர் திபேஷ் சக்ரவர்த்தியின் கருத்தாக்கம் பற்றிய கட்டுரை வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மூலம் திபேஷின் பார்வைக்குச் சென்றது என இத்தொடர் எனக்குப் பல்வேறு அனுபவங்களை வழங்கியது. தொடர் வெளியான காலகட்டத்தில், கட்டுரை வெளியாகும் நாள் அன்று காலை தவறாமல் அழைத்து என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்திய பலரில் வழக்கறிஞரும் விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளருமான வெ.ஜீவகுமார், பேராசிரியர் நா.மணி ஆகிய இருவரும் முதன்மையானவர்கள். தொடர் நிறைவடைந்ததையொட்டி பேராசிரியர் ராஜன் குறை ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். கடும் வெறுமையிலும் மனச்சோர்விலிருந்த என்னை அது ஆற்றுப்படுத்தியது.
இன்றைய பூவுலகு பற்றிய இந்த விசாரணையில், எழுத்து சார்ந்தும் காலநிலை மாற்றம் பற்றிய அணுகுமுறையிலும் பெரும் திறப்புகளைப் பெற்றிருக்கிறேன். மேம்பட்டிருக்கும் புரிதல்களுடன் இன்னும் விரிவாக இதுசார்ந்து தொடர்ச்சியாக எழுதுவேன்.
‘பூவுலகு இன்று’ தொடரைச் சாத்தியமாக்கிய, இதழியலில் என்னுடைய முதல் ஆசிரியரான ஆதி வள்ளியப்பனுக்கு நன்றி; ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழின் முன்னாள் பொறுப்பாளர் முகமது ஹுசைனுக்கு நன்றி.
தொடரை வாசிப்பதற்கான இணைப்புகள்:
காலநிலை மாற்றம் சார்ந்து நான் முன் எழுதியவற்றை இந்த வலைப்பூவில் தொகுத்துள்ளேன்: 1.5 ºC 🔥 தமிழில் காலநிலை மாற்றம்