காலநிலை மாற்றம் பற்றிய முதல் கட்டுரையை இத்தளத்தில் வெளியிட்டபோது, தமிழில் இத்துறை சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து விரிவாக எழுத வேண்டியது அவசியம் என்று தோன்றியது. அதன் தொடர்ச்சியாக காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வை முதன்மைச் சொல்லாடலாகத் தமிழ் ஊடகங்கள் கவனப்படுத்த வேண்டும் என்று இரண்டாவது கட்டுரையில் பேசியிருந்தேன். மூன்றாவது கட்டுரையில், மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும், மனிதகுல இருப்பின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இப்பிரச்சினையை தற்கால உலகின் கலை-இலக்கியம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது, தமிழில் அதன் நிலை என்ன என்பது குறித்து விவாதிக்க விரும்பினேன்.
‘காலநிலை மாற்றம் குறித்துப் பேச வேண்டியது கலை, இலக்கியப் புலங்களின் தார்மீகக் கடமை’ என்று எழுத்தாளர் அமிதவ் கோஷ் தன்னுடைய ‘தி கிரெட் டிரேஞ்ச்மெண்ட்’ என்ற நூலின் மூலம் சர்வதேச அளவில் ஒரு விவாதத்தை முன்னெடுத்தார்; ‘காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கற்பனை செய்வதில் எழுத்தாளர்கள் முக்கியப் பங்காற்ற முடியும்’ என்று சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
‘தி கார்டியன்’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் இயற்கையியலாளர் ராபர்ட் மெக்ஃபேர்லன் கோரியிருந்தார்; மனிதச் செயல்பாடுகள் புவியின் காலநிலை அமைப்பில் தாக்கம் செலுத்தி அதன் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த மனித ஆதிக்க யுகம் (anthropocene) குறித்து தொடர்ந்து எழுதிவரும் ராய் ஸ்கிரான்டன்,
‘(இந்த யுகத்தில்) வாழ்வதற்கு நாம் முதலில் இறக்கப் பழக வேண்டும்’ என்று அறிவித்தார்; மனித ஆதிக்க யுகத்தின் தத்துவவியலாளராகக் கருதப்படும் திமோதி மோர்டனின் சூழலியல் குறித்த கருத்தாக்கங்கள்; நவீன உலக வரலாற்றின் வெற்றியாளர்களாகக் கருதப்படும் ஆங்கில-அமெரிக்க வல்லரசுகளை கோவிட்-19 தரையிறக்கி, அவற்றை நிலைகுலையச் செய்திருப்பது குறித்த பங்கஜ் மிஸ்ராவின் ஆய்வு போன்றவற்றிலிருந்து இக்கட்டுரைக்கு நான் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ஒப்புநோக்கி எழுத தமிழில் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்ற உண்மை முகத்திலறைந்தது. சரி, அக்குறிப்புகளை மட்டுமே தொகுத்து எழுதினாலும் தமிழில் அவற்றின் பொருத்தப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னை அழுத்தியது!
2
தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து தரப்பினரிடம் இருந்தும் மிகக் கடுமையான எதிர்வினையைப் பெற்றது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை. வெகுஜன, சமூக ஊடகங்கள் அனைத்திலும் இதைப் பற்றிய மிகத் தீவிரமான பிரச்சாரங்களும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அரசியல் உரிமை, சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உருப்படியான எந்த ஒரு எதிர்வினையும் மேற்கொண்டிராத நவீனத் தமிழிலக்கியத்தின் முகங்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களிடம் இருந்து வழக்கம் போல இதற்கும் எந்த
ஓர் எதிர்வினையும் இல்லை.
நவீனத் தமிழிலக்கியத்தின் ‘மாஸ்டர்’களாகவும் தமிழ்ப்
பண்பாட்டைத் தங்கள் படைப்புகளில் கடத்துபவர்களாகவும், மொழியின் முகங்களாகவும் தங்களை அறிவித்துக் கொண்ட
சில ‘முன்னணி’ எழுத்தாளர்கள், அப்படி தங்களைக் கோரிக் கொள்வதற்கான செயல்பாடுகள் எதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை என்பது அப்பட்டமான உண்மை; மீறி அவர்கள் எழுதுவதும் பேசுவதும் அவதூறுகளும் சர்ச்சைகளுமே. தமிழகத்தில் அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளுக்கு இவர்களது எதிர்வினை என்ன என்று தேடிப்போனால் நாம் சென்றடைவது ஏமாற்றத்தின் கூடாரத்திற்கே. தங்கள் ஆசான்கள், முன்னோடிகள் என்று இவர்கள் தொழும் கலைஞர்கள்-எழுத்தாளர்களின் செயல்பாடுகளில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கையாவது இவர்கள் மேற்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
முன்னோடிகளை மதிப்பதும், அவர்களைத் தொடர்ந்து பேசுவதும் அவசியமான செயல்பாடுகளே; ஆனால், சமகால உலகப் போக்குகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பற்றிய சொல்லாடல்களை சமூகத்தில் மேற்கொள்ள இயலாத நிலையில், தங்கள் இயலாமையை மறைக்கும் விதமாக தொடர்ந்து மரபு, முன்னோடிகள் எனவும் உள்ளொளி, தரிசனம் போன்று பூடகமாகவும் பேசியும், எழுதியும் கொண்டிருப்பது தமிழ் அறிவுப் புலத்துக்கு எந்த வகையிலும் நேர்மறையான பங்களிப்பை வழங்கப் போவதில்லை.
இந்தப் போதமைகளைச் சுட்டுக் காட்டும் ஒருவர், நவீனத் தமிழிலக்கியத்தின் பிரதிநிகளாக தங்களை முன்னிருத்திக் கொள்பவர்களிடம் இருந்து பெறுவது வெற்றுக் கூச்சல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையுமே.
3
1990களின் தொடக்கத்தில் ‘வரலாற்றின் முடிவை’ அறிவித்த (நவ)தாராளவாத கருத்தாக்கத்தின் எழுச்சி, நவீன மனிதர்களின் சிந்தனையில் ஆழ்ந்த தாக்கத்தையும், வாழ்க்கை முறையில் மிகப் பெரிய திசைத்திருப்பலையும் ஏற்படுத்தியது. ஆனால், அவற்றின் (பின்)விளைவுகள் கடந்த பத்தாண்டுகளில் தீவிரமாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளில் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அசுர வளர்ச்சி—வளங்களின் அதீதப் பயன்பாடு, புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு—காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளப் போகும் மக்கள் அதிகம் வாழ்வது
தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தான்.
ஆசியாவின் நூற்றாண்டு என்று வழங்கப்படும் 21ஆம் நூற்றாண்டு; அமெரிக்க-சீன வர்த்தகப் போர்; ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சினைகள்; உலகெங்கிலும் தீவிரமாக வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் வலதுசாரி அரசியலின் எழுச்சி; இயற்கையையும் அறிவியலையும் மறுத்தும்-நிராகரித்தும் வரும் அதன் அறிவீனத் தலைவர்கள்; அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம், அது கொண்டுவரும் தனிநபர்
உரிமை சார்ந்த பிரச்சினைகள்; இயற்கையிலிருந்து விலகி, தொழில்நுட்பத்தோடு மட்டுமே ஒன்றிவிட்ட பதின்பருவ, இருபதுகளில் உள்ள குழந்தைகள்-இளைஞர்களின் எதிர்காலம்; நவீன ‘உலகம்’ என்ற கருத்தாக்கமும் மனித மையச் சிந்தனையும்; ‘முடிவு’ அல்லது ‘அழிவு’ என்ற கருத்தாக்கத்தின் இன்றைய அர்த்தப்பாடு; மனநலத்தில் இவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் ‘மொழி’ (வெளிப்பாட்டு முறை) சார்ந்து தொடர்ந்து வெளிவரும் அறிவியல் ஆய்வுகள் இன்னும் நிறைய நிறைய என சமகால உலக நிகழ்வுகள் நம்முடைய உலகப் பார்வையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக் கோருகின்றன.
4
தமிழகம், இந்தியாவை உள்ளடக்கிய உலகின் சமகாலப் போக்கின் சொல்லாடல்களில் இருந்து நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை, மேற்கண்டவை சார்ந்து தமிழ் இலக்கிய-அறிவுப் புலம் தன்னுடைய பங்களிப்பாக என்ன வழங்கியிருக்கிறது என்பதில் இருந்து அறியலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்ச் சிந்தனைப் போக்கில் தாக்கம் செலுத்தும் அளவுக்கான பங்களிப்பு எதுவும் நடந்துவிடவில்லை. அவற்றைப் பற்றிய அடிப்படை விவாதங்களைக்கூட நாம் இன்னும் தொடங்கவில்லை; அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றம் தொடங்கி செயற்கை நுண்ணறிவு என பரந்துவிரியும் 21ஆம் நூற்றாண்டு குறித்து தமிழிலக்கியம் என்ன மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவாதங்களைத் தமிழ்ச் சூழலில் மேற்கொள்வதில் இருந்து நாம் வெகு தொலைவில் நிற்கிறோம் என்பதே துயர்மிக்க உண்மை!
பின் இணைப்பு: இந்து தமிழின் ‘உயிர் மூச்சு’ இதழில் இதே தலைப்பில் கடந்த ஆண்டு நான் எழுதிய கட்டுரையை இங்கு வாசிக்கலாம்:
உலகின் மாபெரும் பேரழிவை இலக்கியம் பேசுகிறதா?
படம்: Ben Clarkson
தமிழில் யாரும் உள்ளனரா என்ற கேள்விக்கு நீங்களே பதிலாவது மகிழ்வைத் தருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள். இதற்கான தேவை அதிகம்.
நீங்கள், தமிழில் மறைந்த என்.ராமதுரையின் 'பருவநிலை மாற்றம்' குறித்து விரிவாக எழுதலாமே? எனக்குத் தெரிந்து எளிமையான தமிழில் 'பருவநிலை மாற்றம்' குறித்து வெளிவந்துள்ள ஒரே புத்தகம் அது தான் என்று தோன்றுகிறது.
மேலும், நீங்கள் அறிந்திருக்கலாம். தகவலுக்காக சொல்கிறேன், தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பொன்.தனசேகரன் 'வானிலை மாற்றங்கள்' பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
மற்றபடி மகிழ்ச்சி. தொடர்க.
"நவீனத் தமிழிலக்கியத்தின் ‘மாஸ்டர்’களாகவும் தமிழ்ப்
பண்பாட்டைத் தங்கள் படைப்புகளில் கடத்துபவர்களாகவும், மொழியின் முகங்களாகவும் தங்களை அறிவித்துக் கொண்ட
சில ‘முன்னணி’ எழுத்தாளர்கள்..."- இந்தக் குற்றச்சாட்டை வழிமொழிகிறேன். அதே நேரத்தில் எழுத்தாளர் நக்கீரன் போன்ற வெகு சிலர், தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் சூழல் பற்றியும், சூழல் சீர்கேடுகள் பற்றியும், அது குறித்தான தீர்வு மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் போன்ற படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.